Monday, July 18, 2016

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தார். இப்போது அவர் சொன்ன கெடுவுக்கு அருகில் நாம் இருக்கிறோம். இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?’

சத்குரு: ‘‘புத்தர் சொல்லி ஏறக்குறைய 2,500 ஆண்டுகள் ஆகின்றன. நாம், இந்த நேரத்தில் இங்கே இருப்பது ஏதோ தற்செயலானது அல்ல. உலகின் அனைத்துக் கலாசாரங்களிலும், குறிப்பாக இந்தக் கலாசாரத்திலும், அடுத்த 200 வருடங்களில் ஆன்மீக நிலையில் மிகப் பெரிய முன்னேற்றங்கள் நடக்கும். அது ஒரு புரட்சியாக நிகழவிருக்கிறது. மனிதர்களால் செய்ய முடியாதவை, ஒரு மனிதர் தன் வாழ்நாளில் சாதிக்க முடியாதது எல்லாம் அடுத்த 200 வருடங்களில் நிகழும். நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இல்லாதிருந்தால், வெளிஉலகை வெற்றி பெறுவது பயனற்றது என்பதை அறிய, இன்னமும் பல நூற்றாண்டுகள் எடுத்திருப்போம். பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும், தலைமுறையும், அது வரலாற்றில் எந்த நேரமாக இருந்தாலும் சரி, அது மிக முக்கியமான தருணம்தான். ஆனால், உலகின் வரலாற்றில், வெவ்வேறு தருணங்களில், வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கின்றன. வெற்றி பெற்றதாலோ, வளம் அடைந்ததாலோ, தோல்வி அடைந்ததாலோ, அடிமைப்பட்டதாலோ, அதைப் பொறுத்து அந்தந்தத் தருணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. ஆனால், தற்போதைய உலகுக்கு இந்தத் தருணம் ஆன்மீகரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. முன்பு எப்போதும் இருந்ததைவிட, இப்போது மக்கள் வசதியாக இருக்கின்றனர். அதே நேரத்தில், முன்பு எப்போதும் இருந்ததைவிட அதிக மனஅழுத்தத்திலும் இருக்கின்றனர். இதற்கு முன்னர் மனிதன் இந்த அளவுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டியதில்லை. உலகில் போராட்டங்கள் அதிகமாக அதிகமாக, உள்நிலை பற்றிய ஆர்வமும் மனிதனுக்கு அதிகரித்து வருகிறது. ஒரு வழியில், இது அற்புதமான படிக்கல். இந்த செயல்முறை தொடர்ந்தால், இந்த ஆர்வம் ஒவ்வொருவருக்குள்ளும் தீவிரமானால், மனிதகுலத்துக்குப் பல வழிகளில் அது தீர்வாக இருக்கும். இதுவரை மனிதன் வெளிஉலகை வெற்றிகொள்ளவே அதிக ஆர்வம் காட்டினான். இப்போது விஞ்ஞானம், தொழில்நுட்பத்தின் உதவியால் வெளிஉலகில் நிறைய சாதித்துவிட்டோம். வெளி உலகை வெற்றி பெறுவது, நம்மை எங்கும் கொண்டுசேர்க்காது என்பதைக் கடந்த 200 வருடங்களுக்குள்ளாகவே மனிதன் புரிந்துகொண்டுவிட்டான். நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இல்லாதிருந்தால், வெளிஉலகை வெற்றி பெறுவது பயனற்றது என்பதை அறிய, இன்னமும் பல நூற்றாண்டுகள் எடுத்திருப்போம். ஒரு காலத்தில் கௌதம புத்தர், அலெக்ஸாண்டர், அசோகர் போன்றவர்கள் வெளிஉலகை வெற்றி பெறுவது நம்மை எங்கும் கொண்டு சேர்க்காது என்பதை அறிந்திருந்தனர். ஆனால், இன்று ஒவ்வொரு சாதாரண மனிதனும்கூட அதை உணர ஆரம்பித்துள்ளான். நிலவுக்குச் செல்லவும், வியாழன் பற்றி அறியவும் விஞ்ஞான முன்னேற்றம் நமக்கு உதவுகிறது. ஆனால், நம்முள் நாம் எதையும் அறிய முடியவில்லை. எனவே, இப்போதைய நிலைமை ஆன்மீகரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கலவரங்களும் போராட்டங்களும் பல வழிகளில் உச்சத்துக்குப் போயிருப்பதால், தற்போது உலகம் ஆன்மீகத்தை நோக்கி மேலும் முன்னேறி வருகிறது!’’

சிவன், யார் பெற்ற மகன்?!

சிவனை அனைவரும் முதன்முதலில் அறிந்தது அவர் இமாலய மலையில் பரவசத்தில் தீவிரமாய் ஆடிக்கொண்டு, அல்லது சிலைவார்த்தார் போல் சற்றும் அசையாது அமர்ந்திருந்த போது தான். அவர் யாரிடமும் பழக முயற்சிக்கவில்லை, யாரும் இருப்பதை அறிந்ததாகக் கூடத் தெரியவில்லை. ஆனால் சிவனை எல்லோரும் அறிந்திருந்தனர். அவரையே மணக்க வேண்டும் என்று பார்வதி மிகத் தீவிரமாக தவமிருக்க, மனமுவந்து சிவன் அவளை மணக்க சம்மதித்தார். திருமணத்தன்று என்ன நடந்தது..?

சத்குரு: சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நிச்சயமாகி, மண நாளும் வந்தது. சிவ-பார்வதி திருமணம், வரலாறு காணாத பெரும் விழாவாக அறியப்பட்டது. அன்று, யாரும் கனவில் கூட எண்ணியிராத அளவிற்கு தீவிர மனிதரான சிவன், தன் அங்கமாக மற்றொருவரை ஏற்கவிருந்தார். சமுதாயத்தில் ‘இன்னார்’ என்று அறியப்பட்ட எல்லோரும், அடையாளம் ஏதும் இல்லா எளியோரும், பாகுபாடின்றி திருமணத்திற்கு வந்திருந்தனர். எல்லா மிருகங்களும், புழுபூச்சிகளும், அத்தனை உயிரினங்களும் திருமணத்திற்கு வந்து சேர்ந்தன. அவை மட்டுமா, பேய்கள், பிசாசுகள் அவற்றை ஒத்த அனைத்துமே வந்தன. தேவர்களும் தேவதைகளும் வந்தனர். அசுரர்களும் பூதங்களும் கூட வந்திருந்தனர். பொதுவாக, தேவர்கள் வந்தால் அசுரர்கள் வரமாட்டார்கள், அசுரர்கள் வருவதாய் இருந்தால் தேவர்கள் வர மறுத்துவிடுவர். அவர்களால் ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால் நடக்கப்போவது சிவனின் திருமணம் என்பதால், பகையை மறந்து, இம்முறை மட்டும் இருவரும் வருவதாக முடிவு செய்திருந்தனர். அதோடு, சிவன் பசுபதி அல்லவா? எல்லா உயிரினங்களுக்குமே கடவுளாயிற்றே – அதனால் எல்லா மிருகங்களும், புழுபூச்சிகளும், அத்தனை உயிரினங்களும் திருமணத்திற்கு வந்து சேர்ந்தன. அவை மட்டுமா, பேய்கள், பிசாசுகள் அவற்றை ஒத்த அனைத்துமே வந்தன. இது ராஜவம்சத்துத் திருமணம் – ஆம், இளவரசி பார்வதியின் திருமணமாயிற்றே! ராஜவம்ச வழக்கப்படி, திருமாங்கல்யம் கட்டும் முன், ஒரு முக்கியமான சடங்கு ஒன்று நடைபெறும். மாப்பிள்ளை யார், மணப்பெண் யார், அவர்கள் தாய் யார், தந்தை யார், பாட்டனார், முப்பாட்டனார் என்று மணமக்களின் பூர்வீகத்தை சபையில் அறிவிக்க வேண்டும். ஒரு அரசனுக்கு, அவனது பூர்வீகம் மிக மிக முக்கியம், அது அவனது குலப் பெருமையாயிற்றே. அதனால் மிகுந்த பகட்டோடும், பெருமையோடும் பார்வதியின் பூர்வீகம் அறிவிக்கப்படலாயிற்று. இது நடந்து முடிய சிறிது நேரம் ஆனது. ஒரு வழியாக, அனைத்துத் தகவலும் சொல்லி முடிக்கப்பட்டதும், கூடியிருந்தோர் மணமகன் அமர்ந்திருந்த திசை நோக்கி ஆவலுடன் திரும்பினர். சிவனின் சார்பாக யாரேனும் எழுந்து, அவரின் குலப்பெருமையைப் பேசுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அப்படி யாரும் எழவும் இல்லை, ஒரு வார்த்தை பேசவுமில்லை. “சிவனின் சுற்றத்தாரில் இருந்து யாரேனும் ஒருவர் சிவனின் குலப் பெருமையை விவரிக்க மாட்டார்களா?” என்று பார்வதியின் குடும்பத்தினர் சுற்றும்முற்றும் பார்த்தனர். ஆனால் அப்படி யாருமே வந்திருக்கவில்லை. ஏனெனில், பெற்றவர்கள், உறவினர்கள், குடும்பம் என்று சிவனுக்கு சொந்த-பந்தங்கள் யாருமில்லை. எந்நேரமும் தன்னுடன் இருக்கும் பூதகணங்களை மட்டும்தான் அவர் அழைத்து வந்திருந்தார். அவையும் உருக்குலைந்து, பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தன. அது போதாதென்று, அவற்றிற்கு மனித பாஷை வேறு பேசத் தெரியாது என்பதால், தங்களுக்குத் தெரிந்த வகையில் ஏதோ இரைந்து கொண்டிருந்தன. பார்ப்பவர்களுக்கு அவை போதை மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. இந்நேரத்தில், பார்வதியின் தந்தை பர்வதராஜ், சிவனிடம், “உங்களுடைய முன்னோர்கள் பற்றி விவரியுங்கள்” என்று வேண்டினார். சிவன் ஒன்றுமே சொல்லவில்லை. தொலை தூரத்தில் ஏதோ ஒன்றை பார்த்திருப்பதுபோல், சும்மா உட்கார்ந்திருந்தார். அவர் மணப்பெண்ணையும் பார்க்கவில்லை, மணமுடிக்கும் சந்தோஷமும் அவரிடம் தென்படவில்லை. வெறுமையை வெறித்தவாறு, தனது பூதகணங்கள் சூழ்ந்திருக்க, அசைவேதுமின்றி அமர்ந்திருந்தார். அந்தக் கேள்வி அவரிடம் தொடர்ந்து கேட்கப்பட்டது. முன்னோர் யார் என்று தெரியாமல் யாருமே தங்கள் மகளை ஒருவருக்கு மணமுடிக்க சம்மதிக்க மாட்டார்களே! நல்ல நேரம் வேறு கடந்துபோய்க் கொண்டிருந்தது. அனைவரையும் பதட்டம் தொற்றிக் கொண்டது. படபடப்பில் கேள்வியின் தீவிரம் அதிகமானது. அதே கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது. ஆனால் சிவன் வாய் திறக்கவில்லை, மௌனமாகவே அமர்ந்திருந்தார். உயர்குலத்தில் பிறந்த அரசர்களும், பண்டிதர்களும் சிவனை இளக்காரமாகப் பார்த்து, “அவரது குலம் என்னவாக இருக்கும்? ஏன் இப்படி ஏதும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்? ஒருவேளை சொல்வதற்கே கூசும் கீழ் ஜாதியில் பிறந்தவராய் இருப்பாரோ?” என்று அவரவருக்குத் தெரிந்ததுபோல், வாய்க்கு வந்தவற்றை பேசத் துவங்கினர். அவரை யாரும் பெற்றெடுக்கவில்லை. அவருக்கென்று பூர்வீகம் இல்லை. கோத்திரம் இல்லை. அவரிடம் எதுவுமில்லை. அவரிடம் இருப்பது அவர் மட்டும்தான். அங்கு சபையில் அமர்ந்திருந்த நாரதர், நிலைமை கைமீறி போய்க் கொண்டிருப்பதை உணர்ந்து, தனது வீணையை எடுத்து, அதில் ஒரே ஒரு கம்பியில் சப்தம் எழுப்பத் துவங்கினார். மீண்டும் மீண்டும் அதே ஸ்வரத்தை ‘டொயிங்… டொயிங்… டொயிங்’ என வாசித்துக் கொண்டேயிருந்தார். இதனால் எரிச்சலுற்ற பார்வதியின் தந்தை பர்வதராஜ், பொறுமை இழந்து, “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மாப்பிள்ளையின் பூர்வீகத்தை அறிந்து கொள்ள நாங்களும் விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், மாப்பிள்ளையோ எங்களை சிறிதும் சட்டை செய்யாமல் மௌனமாகவே அமர்ந்திருக்கிறார். இவரைப் போன்றவருக்கா என் பெண்ணை நான் மணமுடித்துக் கொடுப்பது? இந்தப் பிரச்சனை போதாதென்று நீங்களும் எரிச்சலூட்டும் வண்ணம் ஒரே சப்தத்தை ஏன் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்? இல்லை… இதுதான் உங்கள் பதிலா?” என்று இரைந்தார். நாரதர், “அவரைப் பெற்றவர்கள் யாருமில்லை,” என்றார். ராஜன் வினவினான், “அவரது தாய்-தந்தை யார் என்று அவருக்குத் தெரியாது என்கிறீர்களா?” நாரதர், “இல்லை. அவரை யாரும் பெற்றெடுக்கவில்லை. அவருக்கென்று பூர்வீகம் இல்லை. கோத்திரம் இல்லை. அவரிடம் எதுவுமில்லை. அவரிடம் இருப்பது அவர் மட்டும்தான்,” என்று சொன்னார். இதனைக் கேட்ட அத்தனை பேரும் குழம்பிப் போயினர். பர்வதராஜ், “தனது தாய்-தந்தை யாரென அறியாதவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால் மனிதன் என்று ஒருவன் இருந்தால் அவன் வேறு யாருக்கேனும் பிறந்திருக்க வேண்டும் அல்லவா? அது எப்படித் தாயோ தந்தையோ இல்லாமல் ஒருவர் பிறக்க முடியும்?” நாரதர் சொன்னார், “அவர் சுயம்பு, தானாகவே உருவானவர். அவருக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. அவருக்கு பூர்வீகமும் இல்லை, முன்னோர்களும் இல்லை. அவர் எந்த பாரம்பரியத்தையும் சேர்ந்தவர் இல்லை, அவருக்கு பக்கபலமாக எந்த ராஜாங்கமும் இல்லை. அவருக்கு கோத்திரமும் இல்லை, நட்சத்திரமும் இல்லை, எந்த அதிர்ஷ்ட தேவதையும் அவரைக் காத்து நிற்கவில்லை. அவர் அனைத்தையும் கடந்தவர். இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தன்னில் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்ட யோகி அவர். அவருக்கு இருப்பது ஒரே ஒரு முன்னோடி மட்டுமே – அது சப்தம். இந்தப் பிரபஞ்சம் உருவாகும் முன், இந்தப் பிரஞ்சம் உருவாவதற்கு மூலமான வெறுமை படைத்தல் செயலை ஆரம்பித்தபோது, முதன்முதலில் உருவானது சப்தம். அதன் பிறகே படைப்பு நிகழ்ந்தது. அதேபோல் இவரும் ஒன்றுமற்ற வெறுமையில் இருந்து, ஒரு ஒலியின் மூலம் தோன்றினார். இதை வெளிப்படுத்தும் வகையில்தான், நான் மீண்டும் மீண்டும் ஒரே ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தேன்.”


Monday, March 7, 2016

எல்லாம், எங்கும், எதுவும் சிவமயமே!

Everything, everywhere, nothing sivamayam!

குறுக்கும், நெடுக்குமாக, கைகளைப் பின்புறம் கட்டியவாறு, ஏதோ ஒரு தவிப்பிற்கு ஆட்பட்டவராய் நடந்துகொண்டிருந்தார் இயற்பகை. கொஞ்சம் விவகாரமான ஆள்தான், பெயருக்கு ஏற்றாற்போலவே தான் செய்கைகளும்! ‘எல்லோரும் சொல்கிறார்கள்’ என்றோ ‘உலக வழக்கம்’ என்றோ எதையாவது சொல்லி, அவரை எதையும் செய்ய வைக்க முடியாது. ‘அந்தப் பக்கம் போகாதே’ என்று யாராவது எழுதி வைத்திருந்தால், ‘ஏன்? அந்தப் பக்கம் போனால் என்ன?’ என்று யாரையும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்; போகக்கூடாது என்று சொன்ன திசையில் போவார். போனால் என்ன நடக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து, எழுதி வைத்தவனை அழைத்துத் தட்டிக்கொடுப்பார்.

‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு’ என்ற திருக்குறள் வாக்கிற்கேற்ப நடந்துகொள்வார். அப்பேர்ப்பட்டவர்க்கு இன்றைக்கு நடப்பது பெரும் புதிராக இருந்தது. அதிகாலையில் எழும் இயற்பகையார், இறைவனைத் தொழுது, பிறகு காலைக் கடன்கள் முடித்துக் குளித்து, நீறு பூசி, உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனை பூஜை செய்யத் தொடங்குவார். ஒரு தேர்ந்த, கிரமமான பூஜையாக இருக்காது அது. அவரின் கண்ணீரால் அபிஷேகம், ததும்புகிற அன்பால், ‘ஐயா, என் அரனே, தேசனே, தேனார் அமுதே, மகாதேவரே...’ என்பதான அரற்றலாக மந்திரங்கள்... வெறும் அன்பு மட்டுமே பேரன்பிற்காக பூஜை செய்வதை இயற்பகையாரின் பூஜையிலே, வழிபாட்டிலே மட்டும்தான் காண முடியும். 

அடியார்க்கும், ஆண்டவர்க்கும் அன்பு செய்வதிலே பெரும் போட்டி இருக்கும் - இதுநாள்வரை யாரும், யாரையும் ஜெயிக்கவே முடியாமல்! ஆனந்தம், அவரின் வீடெங்கும் பரவியிருக்கும். அவரின் துணைவியாருக்கும், பூஜை முடிவதற்குள் ஆனந்தத்தில் கண்ணீர் கரைபுரண்டோடுவதும் நிச்சயமே. வாழ்வதே சிதம்பர தேவரின் உமையொரு பாகனின் பூஜைக்காகத்தான் என்பதான வாழ்க்கை அவர்களுடையது. இதிலே பூஜை முடித்ததும், அவ்வூரில் தென்படுகிற சிவனடியாரை இல்லத்திற்கு அழைத்து வந்து பாதபூஜை, அதாவது மகேஸ்வர பூஜை செய்வது. அவருக்கு தெண்டனிட்டு வணங்குவது. 

அவருக்கு அமுது படைத்து, வேண்டுவன நல்கி, இறைவனே இதுகாணும் எங்களோடு இருந்தார் என்பதாக அவர்கள் காட்டும் ஞானத்தால் உண்டான பக்தி கேள்விப்படுகையிலேயே இத்தனை ஆனந்தம் என்றால், அனுபவிப்பவர்கள் எத்தனை பேறு பெற்றவர்கள்! ஆக, இயற்பகையார் தினமும் முதல் வேலையாக, ஒரு சிவனடியாரைத் தேடிப் பிடிப்பார். அவருக்கு வேண்டிய எல்லாப் பணிவிடைகளையும் செய்து, அவருக்கு அமுதிட்டு, அவருக்கு மிகவும் வேண்டிய ஏதேனும் ஒன்றைத் தானமாக ஈதல் என்பதைக் கடமையாகக் கொண்டிருந்தார். மற்றபடி எல்லோரையும்போல உழைப்பது, வாழ்வது எல்லாம் சிவனடியாருக்கு அன்னமிட்ட பின்பே. அது மட்டும் நடக்கவில்லையென்றால் ஒரு வாய்ச்சோறு இறங்காது அவருக்கு. 

அவருக்கு மட்டுமல்ல; அவர்தம் துணைவியாருக்கும் கூடத்தான். மொத்தத்தில் சிவனடியாருக்குச் சேவை செய்யாத நாள் அவருக்குப் பெருந் துக்கம், வேதனைப் பெருக்கம்! வாழ்வே கேள்விக்குறி ஆகிப்போகிற துயரம்! ஆனால், இதுகாறும் அதுமாதிரி நடந்ததில்லை, யாரையாவது, எங்காவது காட்டி விடுவார் எம்பெருமான். ஆனால், இன்றைக்குச் சோதனையாய் எவரும் காணோம். அயர்ச்சி மேலிட்டது. லேசாக அச்சம் பிறந்தது. இன்றைக்கு எவருமே வராமல் போய்விடுவார்களோ என்ற கிலேசத்தில் உடல் வியர்த்தது. மனைவியைப் பார்த்தார். அவரும் இவரைப் பார்க்க, இருவர் கண்களிலும் நீர். கணவரின் வேதனை பொறுக்க மாட்டாமல் அவர் தம் மனைவி கண்ணீர் வடிக்க, சோதனை பொறுக்க மாட்டாமல் அவர் கண்ணீர் வடிக்க...

வெளியில் குரல் கேட்டது. மெல்லிய குரல்தான். ஆனால், தீர்க்கமான அழுத்தமான குரல். ‘தில்லை அம்பலவா போற்றி! திருச்சிற்றம்பலமே போற்றி’  என்பதான, சொல்வதற்கு மகா மதுரமாகிய சிவநாமத்தை யாரோ சொல்லிக்கொண்டு வீதியோடு செல்ல... பாய்ந்தார் இயற்பகை. விழிகள் வெறிகொண்டு தேடின. குரல் வந்த திக்கில் குவிந்தன. கண்களில் மழையாய் கண்ணீர் கொட்டியது. ‘சம்போ, சங்கரா! சாம்பசிவா’ என அரற்றிக்கொண்டே அங்கு நடந்துசென்றுகொண்டிருந்தார் ஒரு சிவனடியார். வாலிபப் பிரயம் முடிகிற தருணம் நல்ல சிவப்பு. ஓங்கு, தாங்கான தேகமெங்கும் வெண்ணீறு! சாந்தமான முகம்! உலகத்துக் கருணையை எல்லாம் ஒன்று தேக்கிய விழிகள். 

எப்போதும் புன்னகை, கண்டத்தில் உருத்திராக்கம், ஒற்றையாய், மேலாடையாய் ஒரு வெள்ளுடை கணுக்கால் தெரிகிறார்போல் ஒற்றைச் சுற்றாய்க் கட்டிய வேட்டி. இயற்பகை எட்டிக் கைபிடித்து, நிறுத்தினார் அந்தச் சிவனடியாரை. அவர் கால்களில் வேரற்ற மரமாய் விழுந்தார். நட்ட நடுத்தெருவில் போவார், வருவோரெல்லாம் பார்க்க, ஒரு நாய் திடுக்கிட்டு ‘வவ்‘வென்று குரல் கொடுத்து, ஒடுங்கி ஓரமாய் ஓடிப்போய் நின்றது. “ஐயா, என்ன இது’’ பதறிப் போனார் அச்சிவனடியார். “யாது செய்கிறீர்... யார் நீவிர்?’’ சிறிதாய் விகசித்த அதிர்ச்சியோடு அவர் குனிந்து இவரைத் தூக்கி நிறுத்த முயற்சித்தார். 

இயற்பகை முழந்தாளிட்டார். “தங்களைப் பார்த்தது பெரும்பாக்கியம். எந்தையும், நுந்தையுமாகிய ஏகன் அருள்! அடியேன் பெற்ற பாக்கியம் முழுமையாக வேண்டுமானால்...’’ என்று முச்சிரைக்க நிறுத்தினார். அடியார் புன்னகையோடு ஏறிட்டார். ‘எதுவாயினும் கேளப்பா‘ என்று அனுமதி தருகிற புன்னகை. “தேவரீர், எனது இல்லம் எழுந்தருளி, திருவமுது செய்தருள வேண்டும்.’’  “ஓ உனது வீட்டில் அடியேன் அன்னம் ஏற்க வேண்டுமா?’’ சிறிதே யோசித்து, இரு நிமிடங்கழித்து சம்மதமாய்த் தலையாட்டினார் அவர். உடம்பெங்கும் பூரிப்பு, அவரைத் தலைகுனிந்து தம் இல்லத்திற்குள் அழைத்துச் சென்று, இருப்பதிலேயே உயர்ந்ததோர் ஆசனத்தைத் தேர்வு செய்து அதில் அவரை அமர வைத்ததும், வளைக்கரம் நீண்டது, குடிநீர்க் குவளையோடு. 

வேய்ங்குழல் ஒலியாய் இயற்பகையாரின் மனைவியும் “சிவனடிச் சீர்பரவும் பெருந்தகையீர் வருக’’ என்றழைத்து, காலில் விழுந்து வணங்கி, ஆசி பெற்று சாப்பிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய புகுந்தார். ஆயிற்று, சிவனடியார் மிகுந்த திருப்தியோடு, அன்னம் ஏற்று, முடிக்க, அவர் கை, வாய் கழுவப் பாத்திரமும், நீர்க்குவளையும் தந்தார் அம்மையார். அவர் படுக்கப் பாயும், தலையணையும், விசிறியும், நீர்ச் செம்பும் வைத்தபிறகே, இவர்கள் சாப்பிட்டனர். “ஐயா, அமுதமென இனிக்க, மணக்க உணவு படைத்தீர். தில்லை அம்பலவாணர் எப்போதும் உமைக் காப்பார்’’ என்று அந்தச் சிவனடியார் கிளம்ப எத்தனிக்கையில், “பெரியீர்! சற்றே பொறுமையாய் இரும்’’ என்ற இயற்பகை மனைவியோடு சேர்ந்து காலில் விழுந்து வணங்கினார்.

பிறகு “அடியார் பெருமகனே! அன்னம் ஏற்றது மட்டும் போதாது. ஏதேனும் தாங்கள் அடியவனைக் கேட்க வேண்டும் நான் சர்வ நிச்சயமாக தருவேன்’’ என்று இயற்பகை திடமாக உரைத்தார். மனைவியும் கைக்கூப்பி ஆமோதித்தார். புருவம் சுருங்கிற்று வந்தவருக்கு, “யாம் கேட்பதையெல்லாம் உம்மால் தரமுடியாது இயற்பகையாரே.’’ “அப்படி இல்லை ஐயா, எப்பாடு பட்டேனும் தருவோம்.’’ “முடியாது, இயற்பகை, வீணாக அவஸ்தைப்படாதே.’’ சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவர், இயற்பகையின் மனைவியையும் பார்த்து சிரித்தார், கண்கள் மின்னி அடங்கின. “இல்லை அய்யா. அப்படிச் சொல்லக் கூடாது, நீங்கள் கண்டிப்பாக...’’ துடிப்போடு இயற்பகை சொல்ல... “உன் மனைவியை எனக்குத் தானமாக கொடு,’’ சிவனடியார் குரலில் நெருப்பு. 

அவர் அமர்ந்திருந்த வீட்டுக் கூடமெங்கும் நெருப்பை அள்ளிக்கொட்டினாற்போல இருந்தது. இயற்பகையின் மனைவியின் முகம் நிறம் மாறிற்று. அவரின் பேச்சு கேட்ட மாத்திரத்திலேயே ‘இடி’யென முழங்கினார் இயற்பகை. “எம்பெருமானின் பெயரால் எமது மனைவியாகிய இவரை இப்போதே தத்தம் செய்கிறோம்.’’ சிவனடியாரின் உள்ளங்கைகளில் நீர் வார்த்து, மனைவியை அவருடைமை ஆக்கினார் இயற்பகை. ஒரு சலனமும் இல்லாமல், சொல்லப்போனால் ஆனந்தம் வழிகிற முகத்தோடு, அம்மையார் இயற்பகையை ஏறிட்டு நோக்க, அவர் கைக்கூப்பி வணங்கி, “சிவனடியாரொடு செல்வீராக’’ என்றவாரே வழியனுப்பினார். கணவன் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? அந்த அம்மாள் சிவனடியாரின் பக்கத்தில் சென்று நின்றார். சிவனடியார் திகைத்துப் போனார்? என்ன இது அநியாயம்? 

இது என்ன மாதிரியான பக்தி? பக்தியா அல்லது பைத்தியக்காரத்தனமா? அடக் கடவுளே! இவன் என்ன செய்கிறான் என்பதை அறிந்துதான் செய்கிறானா? எத்தனையோ பித்தர்களை பார்த்தாகி விட்டது. இது சித்தத்தை சிவன் பால் வைத்த பித்தம் போலும்... சிவனடியார் “ஐ...யா...நீங்கள் செய்வது என்னவென்று...’’ என்று தயங்கியபடியே கேட்டார். “அறிந்து தான் செய்கிறோம்’’ இயற்பகை சிறிதும் சலனமில்லாமல் திடமாகத் தெரிவித்தார்! தெரிந்து செய்வது என்பது மனதின் பதிவுகளின் எல்லைக்கு உட்பட்டது. புத்தியோடு சம்பந்தப்பட்டது. அறிந்து செய்வது அனுபவத்தினால் உண்டாவது. ஒரு காரியத்தை பலகோணங்களிலும் அனுபவித்து உணர்வது.

“அறிந்து செய்ததா..?’’ சிவனடியாரின் வியப்பு இன்னமும் குறையவில்லை, இருப்பினும், சுதாரித்த வராய்க் கேட்டார் அவர். “எல்லாம் சரி, ஆனால், இந்த வீட்டை விட்டு நான் உன் மனைவியோடு போனால் உன் ஊர்க்காரர்களும், சுற்றத்தாரும் என்னை வெட்டிப்போட்டு விடுவார்கள் தெரியுமா?’’ இயற்பகையின் புருவம் உயர்ந்தது. “இந்த இயற்பகை இருக்கும் வரை அது நடவாது. அச்சம் வேண்டாம் அடியவரே. உருவிய வாளுடன் இயற்பகை ஊரெல்லை வரை உம்முடன் வருவான்.’’ பயணம் துவங்கியது. வானம் இருட்டியது. இனம் புரியாத இறுக்கம் சூழலில் படர்ந்தது. விஷயம் அறிந்து வந்த ஊர்க்காரர்கள், சுற்றத்தார்கள் வாள், வேல், ஈட்டியுடன் சிவனடியார் மீது பாய, இயற்பகையின் வாள் சீற்றம் கொண்டது. பெரும்புயலெனச் சீறியது. 

எதிர்த்தோரின் தலைகள் உருண்டன. கை, கால்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. குருதி வெள்ளம் எங்கும் சிதறிற்று. சாலையின் ஓரங்களில் நின்ற ஊர் மக்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு, கதறலும், கண்ணீருமாய் அலறினர். “என்ன காரியமடா செய்கிறாய் இயற்பகை, பெயருக்கேற்றாற்போல, இயல்புக்கே பகையானாயே பாதகா’’ - எனும் கூக்குரல்கள், வீறிடல்கள். “எங்கே நடக்குமடா இந்த அநியாயம்? உன் வளர்ப்பில் எங்கே தவறு நடந்தது’’ என்பதாய் சுற்றத்தார் குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தனர். சண்டமாருதமாய், வெறி கொண்ட வேங்கையாய் நிற்காமல் போரிட்டு... ஊரின் எல்லை வந்தது. மயான அமைதி. சிவனடியார் மெல்லத் திரும்பினார். இயற்பகையைப் பார்த்தார்.

உடலெங்கும் குருதிக் கோலங்கள், வியர்வை ஆறுகள், புழுதிப்படலம்... கூற்றுவன் போன்ற கோலம்... சொன்ன சொல் காப்பாற்ற எதுவரினும் அஞ்சாத நெஞ்சம்.
திடுமென சிவனடியார் இரண்டடிப் பின் நகர்ந்தார். நின்ற நிலையில் அவரின் பிரகாசம் கூடிற்று. பேரொளியில் பிழம்பாகி நின்றார் அந்தச் சிவனடியார். ஒன்றாய் இருந்த ஒளிப்பிழம்பிற்குள் மகாதேவரும், உமையம்மையும், இடப வாகனத்தில்... எல்லாம் மலர்ந்தன. மலைத்தன. கருணை மழை வெள்ளம்போல் பொழிந்தது. அனுபவித்தறியாத ஒரு பேரன்பு எல்லோரையும் தாக்கிற்று. “இயற்பகை உமது பக்தியின் தீவிரத்தை உலகறியச் செய்யவே யாம் வந்தோம். 

உன் அன்பின் தன்மை ஈடில்லாதது. எப்போதும் எம்மோடு நீயும், நின் மனைவியும் இருக்கவே வருக.’’ என்றழைத்தது சிவம், எங்கும் சிவமயம், எல்லாம் சிவமயம்... அருள்மழை... இயற்பகை தயங்கினார். “ஐயனே! பிழை பொறுப்பீர். யான் வெட்டியெறிந்த சுற்றங்கள், ஊரார்கள் இவர்களையும் அழைத்துக்கொண்டு வருவதானால் சரி... இல்லையெனில் உம் புகழ்பாடித் துதித்து இங்கேயே வாழ்கிறேன்,’’ என்றார். “நீ பிடிவாதக்காரனாயிற்றே, சரி ஆகட்டும்’’ என்று பிடிவாதத்தை இயற்பகைக்குள்ளே விதைத்த பெருந்தகை திருவாய் மலர்ந்து அருளினார். ஜோதிப்பிழம்பு பிரமாண்டமாய் மாற, இயற்பகையால் வெட்டி எறியப்பட்ட ஊரார், உறவினர், இயற்பகை, அவரது அருமை மனைவி எல்லோரும் அப்பிழம்பினுள் கலக்க...

மேற்சொன்ன இயற்பகை என்பவர் சிவனையே எண்ணி, சகலமும் சிவமாய்ப் பார்க்கும் மகா ஞானி. அவர் தம் மனைவி என்பது அவரது  மனதைக் குறிக்கும். சிவனடியாராக வந்த கோலம் மெய்ஞானியான, சத்குருவைக் குறிக்கும். ஆக, ஞான குருவாய் எழுந்தருளி, நம்மையும், இறைவனையும், பிரிக்கிற மனதை, துவைதத்தில் இருக்கிற மனதை தனக்கு தந்துவிடுமாறு கேட்கிறார். (குருநாதருக்கு உடல், பொருள், ஆவி இம்மூன்றையும் நற்சீடன் தத்தம் செய்தல் வேண்டும். இங்கே ‘பொருள்’ என்பது எல்லாவற்றையும் பொருளாகக் காட்டும் மனமே ஆகும்.) ஆக ஒவ்வொருவருடைய மனமே அவருடைய மனைவி. அதை, மனதை, தம்மிடம் கொடுக்குமாறு இறைவன் கேட்க மெய்யடியாராகிய இயற்பகை, ‘தன் மனம்’ என்கிற மனைவியை இறைவன் வசம் அளிக்கிறார். 

அவ்வாறு அளிப்பதை ஏற்காத மனதின் விருத்திகளாகிய கோபம், லோபம், மத, மாச்சர்யம், குரோதம், பாசம், அகங்கார, மமகாரங்களே இயற்பகையாரின் ஊர் மக்களாகவும், சொந்தக்காரர்களாகவும் இங்கு எடுத்துச் சொல்லப்படுகிறது. அவற்றை விவேகம், வைராக்கியம் எனும் வாளால் வெட்டி வீசுகிறார் இயற்பகை. எல்லாம் அறிந்த இறைவன், தன்னோடு சேர வருமாறு இயற்பகையும், அவரின் மனைவியையும் அழைக்க... “இயற்பகை மனதின் விருத்திகளாகிய 96 தத்துவங்களுக்கும் அருள்செய்து அவற்றையும், உன்னோடு சேர்ப்பாய் ஆயின் வருவேன்’’ என்கிறார். எல்லாம் சிவமயம் என்பதாகிறது இறைவனின் பெருங்கருணையால். இதுவே, ஞான அர்த்தம். இதை உணர்த்துவதே அடியார். நாயன்மார் வரலாறு. இதை ‘அத்யாத்ம பெரியபுராணம்’ என்பர். 

பைரவர் பார்த்துக் கொல்வார்!

Bhairava kill looking!

சிறுகதை

பிரச்னை இவ்வளவு பெரிதாகப் போய்விடும் என்று சேகர் நினைக்கவில்லை. தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உயிர் பயம் பீடித்திருப்பதை அவனால் உணர முடிந்தது. கவுன்சிலர் ராஜேந்திரனைப் பற்றி புகார் செய்திருக்க வேண்டாமோ என்று நினைத்துக் கொண்டான். “பலதடவை தலை தலையா அடிச்சுகிட்டேன் கேட்டிங்களா..? இப்ப பாருங்க உங்களால எல்லாருக்கும் பிரச்னை, வெளியில தலை காட்டவே பயமாருக்கு. குழந்தைகள் ரொம்பவும் பயந்து கெடக்கறாங்க...” பவானி அழத்தொடங்கி விட்டாள். சேகர் பல வருடங்களாக தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறான். ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்ததில் இருந்துதான் இவனுடைய சேவை ஆரம்பித்தது. காலையில் பை நிறைய இட்லியை எடுத்துக்கொண்டு பிச்சைக்காரர்களைத் தேடி ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் என்று அலைவான். 

ஆளுக்கு ஐந்து இட்லியும், ஒரு பாக்கெட் சாம்பாரும் கொடுத்துவிட்டு வருவான். அதுமட்டுமல்லாமல், சாலை வசதி கேட்டு நகராட்சித் தலைவருக்குக் கடிதம் எழுதுவது, குடிநீர் வசதி கேட்டு கோரிக்கை மனுவுடன் மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்ப்பது என்று ஏதாவது செய்து கொண்டே இருப்பான். ரேஷன் கடைக்குச் சென்று பொருட்கள் ஒழுங்காக விநியோகிக்கப்படுகிறதா என்று பார்ப்பான். தெரு விளக்குகள் எரியவில்லை என்றால் உடனே ஒரு பெட்டிஷன் எழுதி விடுவான். இதற்காக யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டான். இதனாலேயே இவனுடைய மனு என்றால் உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுத்துவிடுவார்கள். எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், வார்டு கவுன்சிலர் செய்த ஊழல் குறித்து கலெக்டருக்கு கடிதம் எழுதியதுதான் பெரிய களேபரமாகிவிட்டது. 

கவுன்சிலர் கொலை மிரட்டல் வரை போவான் என்று சேகர் நினைக்கவில்லை. நரிமணி ஆற்றுக்குப் பாலம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் பாதியை கவுன்சிலர் ராஜேந்திரன் சுருட்டிக்கொண்டான் என்கிற தகவல் தெரிய வந்ததும் பதறிப் போனான் சேகர். உண்மையை தீர விசாரித்து, ஊழல் பற்றி விளக்கமாக ஒரு கடிதம் எழுதி கலெக்டருக்கு அனுப்பி விட்டான். விசாரணைக்கு அதிகாரிகள் வந்தபோது தான் விஷயமே தெரியவந்தது ராஜேந்திரனுக்கு. “என்ன தைரியம் இருந்தா என் மேலேயே கம்ப்ளைண்ட் பண்ணிருப்ப... உடனே புகார் மனுவை வாபஸ் வாங்கலன்னா அடுத்த மனு எழுதறத்துக்கு ஆள் இருக்க மாட்ட...” வீட்டுக்கே வந்து மிரட்டி விட்டுப் போனான் ராஜேந்திரன். அவனுடைய கோபத்தை எதிர் கொள்ள முடியாமல் தவித்தான் சேகர். அவன் யோசிப்பதற்கு அவகாசம் தேடுவதற்குள் அடியாட்கள் ஏற்பாடு செய்வதுவரை பிரச்னையைக் கொண்டு போய்விட்டான் ராஜேந்திரன். 

“அவனை மட்டுமில்ல, அவன் குடும்பத்தையே காலி பண்ணிடுவோம். அவன் இருக்கறவரை நமக்குப் பிரச்னைதான். மொத்தமா தூக்கிட்டு ஊரை விட்டுப் போய்ட்டாங்கன்னு கேஸை ஊத்தி மூடிடலாம்” - ரகசிய திட்டம் வகுத்துக் கொண்டிருந்தான் ராஜேந்திரன். சேகருக்கு கடவுளிடம் சரணடைவதை விட வேறு வழி தெரியவில்லை. அப்போதுதான் பவானி ஒரு யோசனை சொன்னாள். “வாங்க, நம்ம சிங்காநல்லூர் ஜோசியர்கிட்ட போய் ஜாதகத்தை கொடுத்து பரிகாரம் ஏதாச்சும் இருக்கான்னு கேப்போம். எதிரிகள்கிட்ட இருந்து தப்பிக்க அவர் ஏதாவது யோசனை சொல்வாரு. வேற யாரையும் நம்ப வேணாம். போலீஸ்கிட்ட போனா, பிரச்னை இன்னும் பெருசாயிடும்.” மனைவி சொன்னது சரியாகவேபட்டது. ஜோதிடர் தன்னுடைய பூஜை அறையில் உட்கார்ந்து கொண்டு சேகருடைய ஜாதகத்தை வாங்கி முழுமையாகப் பார்த்தார். 

“உங்க குடும்பத்தோட அதிதேவதை கால பைரவர். ஆனா, இதுவரைக்கும் பல கோயில் குளம்னு சுத்தின நீங்க பைரவரை மட்டும் கும்பிடல. ஏன் வீட்டுல கூட நீங்க ஒரு நாயை வளர்க்கலாம். கால பைரவருக்கு கஞ்சி கூட ஊத்தல. உங்க பிரச்னைக்கு அதுகூட ஒரு காரணமா இருக்கலாம். 
ஆனது ஆகட்டும். இதுக்கு அப்புறம் கவனமா இருங்க. கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கற கோயில்பாளையம் காலகாலேஸ்வரர் கோயிலுக்குப் போங்க. எமனுக்குக் கோயில் இருக்கற ஊர். அங்க இருக்கற லிங்கம் சுயம்புலிங்கம். எமன் தன்னுடைய தண்டத்தை தரையில அடிச்சு வெளியில கொண்டு வந்த லிங்கம். அந்த  ஊர்ல போய் சாமி கும்பிடறவங்களுக்கு அகால மரணமே வராதுங்கறது ஐதீகம். அந்தக் கோயில்ல இருக்கற கால பைரவர் ரொம்ப சக்தி வாய்ந்தவர். 

ஒரு தடவை போய் கும்பிட்டீங்கன்னா, பைரவர் உங்க கூடவே காலம் பூரா காவலுக்கு வருவார். “அப்புறம் இன்னொரு விஷயம். தரிசனம் முடிச்சிட்டுப்போற வழியில ஒரு நாய்க்குட்டி ஒண்ணு வாங்கிடுங்க. அந்த பைரவருக்கு தினமும் பால் ஊத்திட்டு வாங்க. உங்களுக்கும், உங்க வீட்டுக்கும் இனி அந்த பைரவர் காவல் நிப்பார். போய்ட்டு வாங்க” ஜோதிடர் கை எடுத்து கும்பிட்டு வழி அனுப்பி வைத்தார். தட்சணையோடு பழங்களும், இனிப்பும் சேர்த்து ஜோதிடருக்கு கொடுத்துவிட்டு வந்தான் சேகர். ஜோதிடர் சொன்ன மாதிரி, காலகாலேஸ்வரர் கோயிலுக்குப் போகும் அனுபவமே சிலிர்ப்பாக இருந்தது அவனுக்கு. ஒவ்வொரு அசைவிலும் தெய்வ சாந்நித்தியம் கூடவே வருவதை அவனால் உணர முடிந்தது. கோயிலில் பூஜை முடித்து விட்டு பைரவர் விபூதியை பெற்றுக் கொண்ட போது உடலில் தெய்வீகப் பரவசம் பரவியது.

வீட்டுக்குத் திரும்பியபோது பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சி தந்தது: ‘‘நல்ல வேளை, நீ ஊருக்குப் போயிட்டு இப்பதான் வர்ற. ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தீன்னா குடும்பத்தோட உங்களை காலி பண்ணிருப்பாங்க. இருவது பேர் ரெண்டு மூனு ஆட்டோல வந்தாங்க. உருட்டுக்கட்டை, கத்தி, கபடான்னு உங்க வீட்டைச் சுத்தி ரொம்ப நேரம் நின்னாங்க. யாரும் இல்லைன்னு தெரிஞ்சிகிட்டு போய்ட்டானுங்க.’’ போன உயிர் திரும்ப வந்தது போல இருந்தது சேகருக்கு. கையிலிருந்த நாய்க்குட்டியை கொஞ்சினான். “பைரவா, இந்த பாவிகிட்ட இருந்து நீ தான் எங்களைக் காப்பாத்தணும்..” பைரவர் விபூதியைக் கரைத்து வீடு முழுக்கத் தெளித்தான். அவனுக்கு ஒரு நம்பிக்கை பிறந்திருந்தது. இந்த பைரவர் நிச்சயம் நம்மை காப்பாற்றுவார் என்று முழுமையாக நம்பினான். 

ஆனாலும், பவானிதான் அழுது அரற்றினாள். “வேணாங்க, இங்க இருக்கற நிலம், இடம் எல்லாத்தையும் வித்துட்டு, வேற ஊருக்குப் போய்டலாங்க. தினமும் செத்து, செத்துப் பிழைக்க வேண்டிருக்கு. புள்ளைங்களும் பாவம் யாரைப் பார்த்தாலும் மிரண்டு அழறாங்க.” “நீ ஒண்ணும் கவலைப்படாத பவானி. கால பைரவர் நம்மைக் கண்டிப்பா காப்பாத்துவார்,” நம்பிக்கையுடன் சொன்னான் சேகர். அப்படித்தான் நடந்தது. நீண்ட நாட்களாகவே ராஜேந்திரனிடமிருந்து எந்த மிரட்டலும் வரவில்லை. ஆச்சரியமாக இருந்தது சேகருக்கு. திடீரென்று ஒருநாள் பக்கத்து வீட்டு ரங்கனாதன் பதறியடித்து ஓடி வந்தான். “சேகர், உனக்கு சேதி தெரியுமா? உன்னை அடிக்க ஆள் அனுப்பினானே, கவுன்சிலர் ராஜேந்திரன், அவன் இன்னைக்கு காலைல செத்துட்டான்ப்பா...” நம்ப முடியாமல் பதற்றத்தோடு ரங்கனாதனைப் பார்த்தான் சேகர். ‘‘அட, என்னாச்சு?’’

‘‘தெரியலப்பா ஏதோ ‘ஹார்ட் அட்டாக்’னு சொல்றாங்கப்பா. நீயும் போய் மரியாதைக்கு ஒரு மாலையைப் போட்டுட்டு வந்துடு.” கவுன்சிலரின் நெருங்கிய உறவினர்களிடம் விசாரித்துப் பார்த்தான் சேகர். ‘‘அதெல்லாம் ஹார்ட் அட்டாக்கும் இல்லை, ஒண்ணும் இல்லை. அவன் பண்ணின பாவத்துக்கு பாதில போய்ட்டான், கொஞ்ச நஞ்சமாவா பண்ணினான்? எத்தனை பேரை ஆள் வச்சு அடிச்சிருக்கான், கொன்னு புதைச்சிருக்கான், எவ்வளவு கொள்ளை அடிச்சிருக்கான்!’’ ‘‘என்னதாங்க ஆச்சு அவருக்கு?’’ ‘‘பத்து நாளைக்கு முன்னாடி, ஆத்தங்கரையோரம் போதையில தள்ளாடியபடி போயிட்டிருந்திருக்கான். அங்க கெடந்த வெறி நாய் ஒன்ணு நல்லா கடிச்சி வச்சிடுச்சி. 

வைத்தியத்துக்குக்கூட போகாம அலட்சியமா இருந்துருக்கான். ராபீஸ் தாக்கிடுச்சு. கடைசியா நாய் மாதிரி குரைச்சுகிட்டே கெடந்திருக்கான். ராபீஸ் தீவிரமாகி ஹைட்ரோபியான்னு ஒரு நோய் அட்டாக் ஆயிருக்கு. அதான் அவ்வளவு சீக்கிரம் போய்ட்டான். தண்ணியைப் பார்த்தாலே பயம் வர்ற நோய் அது. தண்ணி குடிக்காம நாக்கு வறண்டு செத்துட்டான்...’’ கடவுள் ஒவ்வொரு விதமா அவதாரம் எடுத்து ஒவ்வொரு அசுரனையும் வதம் பண்றார். பைரவரா அவதாரம் எடுத்து இவனை அழிச்சிருக்கார்! மனசுக்குள் சொல்லிக்கொண்டான் சேகர். கால பைரவர் கரங்களில் தான் பத்திரமாக இருப்பதாக உணர்ந்தான் சேகர். 

மகாசிவராத்திரி வழிபாடு உருவானது இங்கேதான்!

Tiruvaikavur

திருவைகாவூர்

திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருக்காளத்தி முதலான மகாசிவராத்திரி தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது, திருவைகாவூர். வேடனொருவன் மரத்தினின்று சிவராத்திரியன்று ஈசனை பூஜித்த கதையை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. அப்படி அந்த புராணக் கதை நிகழ்ந்த தலமே திருவை காவூர்தான் என்றறியும் போது, ஆச்சரியம் விழி விரிய வைக்கிறது. வேடன் ஒருவன் மானை பார்த்தான். அவன் அருகில் நகர்ந்து வருவதை உணர்ந்த மான் துள்ளிக் குதித்து ஓடியது. அடர்ந்த வில்வாரண்யத்திற்குள் புகுந்தது. சற்று தூரத்திலிருந்த முனிவரின் குடிலுக்குள் புகுந்தது. வேடன் துரத்தியபடி உள்ளே நுழைந்தான். தவநிதி முனிவர், ‘‘மானைக் கொல்லாதே. 

வேறெங்கேனும் சென்று விடு’’ என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், வேடனோ, ‘‘எனக்கு இந்த மான்தான் வேண்டும்’’ என்று பிடிவாதமாக  நின்றான். பிறகு, முனிவரைப் பார்த்து பேசினான்: ‘‘இதோ பாருங்கள், என் வேலை வேட்டையாடுவது. எனக்கு உங்கள் பேச்செல்லாம் புரியவில்லை.  ஒழுங்காக மானை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். இல்லையெனில் உங்களைத் தாக்கிவிட்டுக் கூட மானை பிடித்துச் செல்வேன்.’’ தவநிதி முனிவர் மெல்ல சிரித்துக் கொண்டார். ஈசன் ஏதோ ஒரு திருவிளையாடலை அன்றைய தினம் நிகழ்த்தப்போகிறான் என்று தவத்தால் கனிந்திருந்த அவர் மனசுக்குத் தெரிந்தது. ஆகவே வேடன் மிரட்டலுக்குத் தான் பயப்படாததுபோல அமைதி காத்தார். 

அதாவது ‘நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள், உன்னிடம் அந்த மானை ஒப்படைக்கமாட்டேன்’ என்றது அந்த மௌனம். அது வேடனுடைய ஆத்திரத்தை மேலும் தூண்டியது. அவ ரைத் தாக்க கை ஓங்கினான். அப்போது அருகில் ஓர் உறுமல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிய வேடன் தன்னருகே ஒரு புலி நின்றிருந்ததைக் கண் டான். அதன் செந்தணல் விழிகள் கோபத்தை உமிழ்வதைக் கண்டான். அவ்வளவுதான் அங்கிருந்து மருண்டு ஓடினான். புலியும் அவனைத் துரத்தியது.  ‘நன்றி மகாதேவா, இந்த அப்பாவி வேடனுக்கு நற்கதி அருளுங்கள்’ என்று மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டார் முனிவர். 

ஓடிய வேடன் சற்றுத் தொலைவிலிருந்த வில்வ மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். தன் விழிகளில் செம்மை நீக்கி கருணை ஒளிர, இவன் தானறியாமல்  செய்யப்போகும் நல்வினைக்கு இவனுக்கு நற்கதி அருள தீர்மானித்தது புலியாய் வந்த சிவம். இரவு வந்தது. பசியும் பயமும் வேடனைப் பதட்டமடைய வைத்தன. என்ன செய்வது என்று தெரியாமல் வில்வத் தளிர்களை உருவி புலியின் மீது  போட்டான். புலிச் சிவம் பரவசமாக அதனை ஏற்றுக்கொண்டது. அன்று இரவு முழுவதும் தூக்கம் வராதிருக்க மரத்திலிருந்து இலைகளைப் பறித்து  போட்டபடியே இருந்தான் வேடன். பொழுது விடிந்தது, மரத்துக்குக் கீழே தான் போட்ட வில்வ இலைகள் ஒரு பெரும் குவியலாக இருக்கக் கண்டான். புலியைக் காணோம். பயம் நீங்கியவனாக மரத்திலிருந்து இறங்கிய அவன் அந்த வில்வக் குவியலைத் தன் கைகளால் விலக்கிப் பார்க்க உள்ளே சிவ லிங்கம் ஒன்று கம்பீரமாகக் காட்சியளித்தது. பளிச்சென்று தோன்றிய பேரொளியில் ஈசன் அவனுக்கு தரிசனமளித்து, ஆட்கொண்டார். 

பிரம்மனும் விஷ்ணுவும் அந்த அதிசயத்தைக் காண அத்தலத்தில் தோன்றினர். அன்று அதிகாலையில் வேடனின் ஆயுள் முடிவதாக இருந்தது. எமதர்மராஜன் வேடனை நெருங்கினார். சிவபெருமானோ தட்சிணாமூர்த்தியின் வடிவில் கையில் கோலேந்தி விரட்டினார். சற்று தொலைவே இருந்த நந்திதேவரை ஈசன் பார்க்க, நந்திதேவர் மூச்சுக்காற்றாலேயே எமனை சற்று  தூரத்தில் நிறுத்தினார். எமன் அங்கேயே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் நீராடி, ஈசனைத் தொழ, அவரும் எமனை விடுவித்தார். இந்த புராணக் கதையை பல்வேறு விதங்களாக சொன்னாலும் இத்தலத்தில்தான் இதைப் பற்றி முழுமையாக அறிய முடிகிறது. ஈசன் ஆட்கொள்ள வேண்டுமென்று நினைத்து விட்டால் அதை 
யாராலும் தடுக்க முடியாது. 

இத்தலத்தை எமதர்மனால் மிதிக்க முடியாது என்பதால் எமபயம் நீக்கும் தலமாகும். மகாசிவராத்திரியின் மகத்துவத்தை விளக்கும் தலமும் இ துதான்.   
சிவராத்திரி தினத்தன்று தூங்கும் ஒரு குழந்தையின் நகையைத் திருடுவதற்காக ஒருவன் அதனைக் கொலை செய்து விட்டதாகவும் அடியார் பிரார்த்தனைக்கிரங்கி இறைவன் அக்குழந்தையை உயிர்பித்ததாகவும் இதனால் மகவருளீசர் எனவும் இறைவன் பெயர் பெற்றார். தன் தேயும் தன்மையை  இறைவன் போக்கியதால் மகிழ்ந்த அக்கினி, ஒரு தீர்த்தம் அமைத்தது. பிரம்மனும் இங்கே ஒரு புஷ்கரணியை உருவாக்கி, ஈசனை வழிபட்டு, படைப் புத் தொழிலை பெற்றான். விஷ்ணு இத்தலத்தில் தவமியற்றியதால் அரியீசர் என்றும் இத்தல ஈசன் அழைக்கப்படுகிறார். 

ஒரு சமயம் சிவபெருமான் உமா தேவியோடு கயிலையிலிருந்து தென்னாட்டிற்கு எழுந்தருளினார். அப்போது காவிரியின் வடகரையில் மிகச் செழிப்பாக  
காணப்பட்ட இத்தலத்தினை கண்டு இங்கேயே எழுந்தருளினர். இதனைக் கண்ட பூமிதேவி, அவர்களை வணங்கி வழிபட, இத்தலம் பூமிபுரம் என்றும்  பெயர் பெற்றது. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி தாம் அழியாமலிருக்க உபா யம் கேட்டதாகவும் பெருமானின் ஆலோசனைப்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று அவை தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத் திற்கு வில்வாரண்யம் என்றும் சுவாமிக்கு வில்வவனேஸ்வரர் என்றும் பெயர் வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. 

திருவைகாவூர், பச்சை வயல் நிறைந்த அழகிய கிராமம். கோயிலுக்கு எதிரேயே தீர்த்தம். தலத்தின் தொன்மையை கோயிலின் ராஜகோபுரத்தை பார்க்கும்போதேஉணரலாம். ராஜகோபுரத்திலிருந்து உள்கோபுரம் போகும் வழி நீண்டு நெடியதாக இருக்கிறது. ஈசனை நோக்காது, வாயிலை  நோக்கிய, எமனைத் தடுத்து நிறுத்திய கோலத்தில் நந்திதேவரை தரிசிக்கலாம். கோயிலின் உள்ளே ஆங்காங்கு வேடன் மோட்சமுற்ற கதையை சுதையாகவும் சிற்பமாகவும் செய்து வைத்திருக்கிறார்கள். கோயிலின் முகப்பு எளிய, சிறு மண்டபமாக அமைந்துள்ளது. தென்புறத்து வாயிலில் கிழக்கு நோக்கி சித்தி விநாயகர் சந்நதி அமைந்திருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்பது போன்று நந்தி தேவர் கிழக்கு நோக்கியுள்ளார். 

மிகப் பழமையான ஆலயமாதலால் உட்கோபுர வாயிலில் நிறைய சிவலிங்கங்களை தரிசிக்கலாம். மகா மண்டபத்தின் அருகேயே கையில் கோலோடு தட்சிணாமூர்த்தி அருள்கிறார். தட்சிணாமூர்த்தி நின்றகோலத்தில் மான், மழுவோடு ஜடாதாரியாக அருள்வது இத்தலத்தில்தான். அருகிலேயே வேறெங்கும் 
காணக்கிடைக்காத காட்சியாக துவாரபாலகர்களாக பிரம்மனும் விஷ்ணுவும் நிற்கிறார்கள்! அடுத்து அர்த்த மண்டபத்திற்குள் உள்ள நந்திதேவரும் வாசலையே 
நோக்குகிறார். அவருக்குப் பின்னால் வில்வாரண்யேஸ்வரர் அற்புதக் காட்சி தருகிறார். அருட்பிரவாகமானது அலை அலையாக அவ்விடத்தில் பொங்கித் ததும்புவதை அனுபவித்துதான் உணர முடியும். 

கருவறை கோஷ்டத்தில் உள்ள ஒவ்வொரு சிற்பமும் அத்தனை நேர்த்தி! அகத்தியர், பிள்ளையார், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் பிரமிப்பூட்டுகிறார்கள்.  
அவர்களிலும் வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி அருள் உலகம் மட்டுமல்லாது, கலையுலகத்தின் பொக்கிஷமுமாகும். இவரை அருணகிரி நாதர் பாடி 
மகிழ்ந்திருக்கிறார். கோயிலை வலம் வந்து துர்க்கையை வணங்கி, அருகேயுள்ள அம்பாள் சந்நதிக்குப் போகலாம். சர்வஜன ரட்சகி எனும்  திருநாமத்தோடு அம்பாள் அருள்பாலிக்கிறார். அழகிய தமிழில் வளைக்கை அம்மன் என்று பெயர். சர்வஜன ரட்சகி என்று மிகப்பெரிய பொறுப்பை  தனது திருப்பெயரோடு தாங்கி நிற்கிறாள். அழகும் அருளும் சேர்ந்து இலங்கும் திருமுகம். 

அபய-வரத ஹஸ்தத்தோடு நாடி வருபவர்களின் குறைகளை தீர்க்கிறாள். அடுத்து நடராஜரை தனி சந்நதியில் தரிசிக்கிறோம். இக்கோயிலில் கொலுவிருக்கும் பஞ்ச பைரவர்கள் அபூர்வ கோலத்தில் திகழ்கிறார்கள். மூலவர் வில்வவனேஸ்வரரை தரிசித்துவிட்டு தல விருட்சங்களான வில்வ மரங்களையும் தரிசிக்கலாம். 

மகாசிவராத்திரி தினத்தின் சிறப்பை இத¢தலத்தில் விளக்க இம்மரங்கள் சாட்சிகளாக உள்ளன. வேடனுக்கு தஞ்சமளித்து பின் மோட்சமும் வாங்கித் தந்த இடமல்லவா! இந்த மரத்தை வணங்கி, வில்வ மரத்தின் மேற்புறத்தில், சப்த மாதர்கள் தவஞ்செய்யும் காட்சியை கண்டு, மேற்கு பிராகாரத்திலுள்ள வல்லப விநாயகரை வழிபடலாம்.
 
முதலாம் குலோத்துங்கச் சோழன் இந்த கோயிலுக்காக கொடுத்த நிலங்கள் பற்றி நிறைய கல்வெட்டுச் செய்திகள் காணப்படுகின்றன. மாசி மாத மகா சிவராத்திரி விழா நான்கு கால பூஜையும் வேடனுக்கு மோட்சமளித்த நிகழ்வும் அமாவாசை அன்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் தீர்த்தவாரியும் நடை பெறுகின்றன. நோயின் கடுமை தாங்க முடியாதவர்கள், மரண பயம் கொண்டவர்கள், இத்தலத்தை மிதித்தவுடன் குணமாகிறார்கள். இத்தலத்தின் எல்லையில் நின்று, ‘‘அவரைக் காப்பாற்றுங்கள்’’ என்று வெறுமே சொல்லிவிட்டால் கூட போதும் என்கிறது, தலபுராணம். ஸ்ரீவாஞ்சியத்திற்கு இணையான, எமபயம்  போக்கும் தலம் இதுவேயாகும். 

பொதுவாகவே இது மோட்ச பூமியாதலால் பயம் குறைந்து அபயத்தை கூட்டும் தலமாகும். திருவைகாவூரின் தென்பகுதியில் மண்ணியாறும் வடக்குப் பகுதியில் கொள்ளிடம் ஆறும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இத்தலத்தில் பெருவிழா என்பது மாசி மாதத்தில் மகாசிவராத்திரி விழாதான். இரவு முழுவதும் பூஜைகள் நடைபெறும். கும்பகோணம் - திருவையாறு செல்லும் சாலையில் அண்டக்குடி கிராமத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் திருவைகாவூர் உள்ளது.

கோடி பாவங்கள் தீரும் விரதம்

சிவராத்திரி என்ற உடனே இது ஆண்களுக்கான விரதம் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. பார்வதியே, சிவனை நினைத்து 4 ஜாமங்களிலும் பூஜை செய்த தினம். அதனால பெண்கள் அவசியம் விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும். கோடி பாவங்கள் தீரும் விரதம்

திருமணமான பெண்கள் தன்னோட கணவன் மற்றும் பிள்ளைகள் நலனுக்காகவும் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். 

சிவராத்திரியன்று விரதமிருந்தால் புத்தி முக்தி கிடைக்கும், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும். கோடி பாவங்களும் தீரும், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

சிவராத்திரியன்று விரதம் இருந்து தான் பிரம்மா சரஸ்வதியைப் பெற்றதுடன் உலக உயிர்களைப் படைக்கும் பதவியை அடைந்தார். மகாவிஷ்ணு விரதமிருந்து சக்ராயுதம் பெற்றதுடன் மகாலட்சுமியையும் உலக உயிர்களைக் காக்கும் உன்னதப் பதவியையும் அடைந்தார்.

ஐயப்ப விரதத்தின் ரகசியம்

ஐயப்பனை தரிசிக்கும் அனுபவத்தை போலவே, அவருடைய அவதார திருக்கதையும் மெய்சிலிர்க்கச் செய்யும். தேவர்களை மிகவும் கொடுமைபடுத்தி வந்த பிரம்மாசுரனை அழிப்பதற்காக கிருஷ்ண பரமாத்மா மோகினி அவதாரம் எடுத்தார். 

அவருடைய அழகில் சிவபெருமான் மயங்கினார். அதன்  விளைவாக, அய்யப்பன் அவதாரம் நிகழ்ந்தது. மகிஷி என்ற அரக்கியை அழிக்கவே அவர் அவதரித்தார். எனவே, கழுத்தில் மணி மாலையை அடையாளமாக இட்டு காட்டில் விட்டு விட்டு அவர்கள் சென்றனர். இந்த நிலைமையில், மேற்கு தொடர்ச்சி மலையில் பந்தள நாட்டு பகுதியை ஆண்டு வந்த பந்தள மகாராஜா ராஜசேகரன், காட்டுக்கு வேட்டையாட சென்றபோது கழுத்தில் மணியுடன் கிடந்த குழந்தையை எடுத்து வந்து வளர்த்தார். 

அவருக்கு அதுவரை குழந்தை கிடையாது. எனவே, கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்த சூழ்நிலையில், ராணிக்கு ஒரு ஆண்மகன் பிறந்தான். பெற்ற மகன் என்பதால் பாசம் அதிகமானது. அந்த பாசத்தை பயன்படுத்திய அமைச்சர் துர்போதனை செய்யத் தொடங்கினார். அதன் விளைவாக தலை வலிப்பது போல நாடகமாடிய ராணி,  புலிப்பால் கொண்டு வருமாறு 12 வயது பாலகன் மணிகண்டனை காட்டுக்குள் அனுப்பினார். 

காட்டுக்கு செல்லும்போது பம்பை ஆற்றில் மகிஷாசுரன்   தங்கையான மகிஷி தடுத்து நிறுத்த கடும் போர் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள். ஒரு அழகிய பெண்ணாக சாப விமோசனம் பெற்றாள். விமோசனம் பெற்றதும் மணிகண்டனின் அழகிய உருவத்தை கண்டு மணம் முடிக்க ஆவல் கொண்டாள். ஆனால், மணிகண்டனோ, ‘நான் ஒரு நித்திய பிரம்மச்சாரி. ஐயப்பன் அவதாரமாக அவதரித்துள்ள என்னை நாடி எப்போது கன்னி ஐயப்பன்மார் வராமல் இருக்கின்றனரோ, அன்று நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். 

அதுவரை மாளிகை புரத்து மஞ்சள் மாதாவாக இரு’ என அருள்பாலித்தார். பின்னர், ஏராளமான புலிகளை திரட்டிக் கொண்டு நாடு திரும்பினார். அவரை அந்த கோலத்தில் கண்ட ராணியும் மந்திரியும் அதிர்ச்சி அடைந்தனர். ராஜா ராஜசேகரனும் உண்மையை உணர்ந்து மணிகண்டனை வணங்கினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று அங்கேயே தங்க மணிகண்டன் சம்மதித்தார். அவர் அம்பு எய்த இடத்தில் பம்பை நதிக்கரையில் மன்னன் ராஜசேகரன் கோவில் எழுப்பினான். 

அதில், பரசுராமர் பிரதிஷ்டை செய்த விக்கி ரகத்தில் ஐயப்பனாக மணிகண்டன் ஐக்கியமானார். ஐயப்பனை வஞ்சகமாக காட்டுக்கு அனுப்பிய ராணியும் மந்திரியும் 41 நாட்கள் கடும் அவதிப்பட்டனர். உடலை வருத்தி துன்பத்தை அனுபவித்தனர். அதுவே அவர்களுக்கு தண்டனையாக அமைந்தது. கடைசியாக ஐயப்பனை சரணடைந்தனர். அவர்கள் இருவரும் விரதம் இருந்ததன் விளைவே இன்று வரை ஐயப்பனை வேண்டி விரதம் இருக்கும் முறை தொடருகிறது. 

41 நாட்கள் என்பது ஒரு மண்டலமாக, (48 நாட்களாக) மாறி உள்ளது. அரிக்கும் அரனுக்கும் மகனாக அரிகர புத்திரனாக பிறந்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி ஐயப்பனாக உயர்ந்த சபரிமலை நாயகன், ஒவ்வொரு  ஆண்டும் மகர சங்கராந்தி தினத்தன்று தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஜோதி வடிவாய் இன்றும் காட்சியளித்து வருகிறார்.

ஆன்மீக முன்னேற்றம் தரும் விரதம்

ஆலயங்களுக்கு சென்று இறை வழிபாடு செய்யும் போது புலன் அடக்கத்துடன் இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாட்டால் மட்டுமே புலன் அடக்கத்தை ஏற்படுத்த முடியும்.

இந்த அடிப்படையில்தான் நம் முன்னோர்கள் உணவு கட்டுப்பாடான ‘விரதம்’ இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். விரதம் இருந்தால் மனம் ஒடுங்கும்.
ரமணர் இதுபற்றி கூறுகையில், ‘விரதம் எண்ணங்களை ஒடுக்கி, சிந்தனையை நெறிப்படுத்தும்’ என்கிறார். ஆனால் விரதம் என்றதும் நம்மில் பெரும்பாலானவர்கள் ‘சாப்பிடாமல் இருக்க வேண்டும், அவ்வளவு தானே.... என்கிறார்கள்.

உண்மையில் விரதம் என்றால், ‘ஒன்றையே எண்ணி மனம் லயித்து இருத்தல்’ என்று பொருளாகும். ‘லயித்தல்’ என்பதே விரதம் என மாறியதாக சொல்வார்கள்.
அதாவது செயல்படுத்த வேண்டிய விஷயத்தை உறுதியாக மனதில் தீர்மானித்து கொள்வதே விரதமாகும். அந்த மன உறுதிக்கு இறை அருள் தேவை. அதுதான் விரதத்தின் உயரிய நோக்கமாகும்.

விரதம் நம் மனதை மட்டுமல்ல, உடலையும், பக்குவப் படுத்துகிறது. சரியான உணவு பழக்கமே ஆரோக்கியமாக வாழ வைக்கும். உணவு உட்கொள்வதில் ஒரு வேளைக்கும், அடுத்த வேளைக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். பசிக்கும் முன்பு சாப்பிட்டால் ஜீரண சக்தி சரியாக செயல்படாது. வயிறு காலியாக இருந்தால் மட்டுமே ஜீரண உறுப்புகள் சரியாக செயல்படும்.

அது மட்டுமல்ல வயிறு காலியாக இருக்கும் போதுதான் கழிவு வெளியேற்றம் நன்றாக நடக்கும். எப்போதும் வயிறு நிரம்பி இருந்தால் ஜீரண சக்தி பாதிக்கப்படும். விஞ்ஞானப் பூர்வமான இந்த உண்மையை அறிந்த நம் முன்னோர்கள் பண்டிகைகள் மற்றும் வேண்டுதல்கள் அடிப்படையில் விரத முறையை உருவாக்கினார்கள்.
அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, பித்ரு வழிபாடு என்று ஒவ்வொருவருக்கும் ஏற்ப விரத நாட்கள் வகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் பொதுவான விதிகளுடன், எந்த கடவுளுக்கான விரதமோ அந்த கடவுளுக்கு ஏற்ப விரத நாட்களும், வழிமுறைகளும் உள்ளன.

முழு முதல் கடவுளான விநாயகரின் அருளைப் பெற விநாயகர் சதுர்த்தி, ஆவணி சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சஷ்டி விரதம் என்று 4 வகை விரதம் உள்ளது. சிவன் அருளைப் பெற சிவராத்திரி, பிரதோஷம், திருவாதிரை, கேதாரகவுரி விரதம், ஆனி திருமஞ்சனம் உள்பட 8 வகை விரதங்கள் உள்ளன.

விஷ்ணுவின் பாதத்தை சரண் அடை ஏகாதசி விரதம், புரட்டாசி சனி கை கொடுக்கின்றன. விரதங்களில் மிக, மிக உயர்வானது என்ற சிறப்பு ஏகாதசி விரதத்துக்கு உண்டு. அது போல கந்தசஷ்டி, ஆடிக்கிருத்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம், சஷ்டி தினங்களில் விரதம் கடை பிடிப்பதன் மூலம் முருகனின் கருணை கிடைக்கும்.

விரதங்களில் மிகவும் தனித்துவம் கொண்டது சபரிமலை அய்யப்பன் அருள் பெற கடைபிடிக்கப்படும் ஒரு மண்டல விரதமாகும். மற்ற விரதங்கள் எல்லாம் உணவு சாப்பிடாமல் பட்டினியாக இருக்கவும், மவுன விரதம் இருக்கவும், இரவு முழுவதும் கண் விழித்திருக்கவும்தான் வலியுறுத்தும். ஆனால் அய்யப்பனை வேண்டி இருக்கும் விரதமானது, ஐம்புலன்களையும் அடக்கி, அதன் வழியாக இறைவனை காண முயல்வதாகும். ஆன்மாவை பக்குவப்படுத்தி இறைவனுடன் இரண்டற இந்த விரதம் கலக்கச் செய்யும்.

சக்தி விரதங்களும் மக்களால் குறிப்பாக பெண்களால் மிகவும் விரும்பி கடை பிடிக்கப்படுகிறது. நவராத்திரி, ஆடிப்பூரம், ஆடிச் செவ்வாய், மாசி மகம், மார்கழி வழிபாடு போன்றவை சக்தி விரதங்களாக உள்ளன.

இறைவனை நினைத்து, பணிந்து வேண்டி கடை பிடிக்கப்படும் இத்தகைய விரதங்கள் தவிர கிரகங்களின் மாற்றத்தால் வரும் தொல்லைகள், துயரங்களைப் போக்கிக் கொள்ளவும் நம் முன்னோர்கள் பரிகார விரதங்களை ஏற்படுத்தினார்கள். சனி கிரகத்தால் பீடையா.... சனிப் பிரதோஷ விரதம் இருந்தால் அந்த பீடை அகன்று விடும் என்று கணித்துள்ளனர்.

அதுபோல செவ்வாய் கிரக தோஷத்துக்கு, ஆற்று மணலை எடுத்து வந்து, அதை செவ்வாய் கிரகமாக ஆவாகனம் செய்து, விரதம் இருந்து வழிபட்டால் பலன் கிடைக்கும். புதன் கிரக தோஷம் இருந்தால், விஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்து விரதம் இருந்தால் வெற்றி உண்டாகும்.

குரு பகவான் அருள் பெற வேண்டுமானால் தெட்சிணாமூர்த்திக்கு ஒரு மண்டலம் விரதம் இருந்து வழிபடுதல் வேண்டும். சுக்கிர கிரகத்தால் அனுகூலம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இரவில் தீபம் ஏற்றி அம்பிகையை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும்.

அன்றும், இன்றும் விரதங்களால் மக்கள் நினைத்த வரம் பெற்றனர். ஆனால் இப்போது இருப்பதை விட பழங்காலத்தில் மக்கள் மிக, மிக கடினமான விரதங்களை கடை பிடித்தனர். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் யாசிதம், பாத கிரிச்சனம், பன்னக்கிரிச்சனம், சவுமிய கிரிச்சனம், அதிகிரிச்சனம், கிரிச்சனாதி கிரிச்சனம், பிரசர்பத்திய கிரிச்சனம், பார்க கிரிச்சனம், சாந்தபன கிரிச்சனம், மகா சாந்தபன கிரிச்சனம், சாந்திராயணம், வால சாந்திராயணம் என்று 12 வகையான விரதங்களை கடை பிடித்தனர். தினமும் மூன்று வேளை குளித்து விரதம் இருந்தனர்.

வளர்பிறை முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு பிடி உணவை குறைத்து கொண்டே வரும் வகையில் இருந்தனர். அதுபோல தேய்பிறை முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு பிடி உணவை அதிகரித்து வரும் விரதத்தையும் கையாண்டனர். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடாமல் இருக்கும் விரதத்தையும் இருந்தனர். சிலர் 12 நாட்கள் கூட சாப்பிடாமல் விரதம் இருந்ததுண்டாம். அந்தந்த கிரக நிலைக்கு ஏற்ப இப்படி விதம், விதமாக விரதம் இருந்தனர்.

ஆனால் இந்த வகைகளின்படி விரதம் இருப்பது என்பது தற்போதைய வாழ்வியல் நடைமுறைக்கு பொருந்துவதாக இல்லை. எனவேதான் மாதம் ஒரு முறையாவது விரதம் இருங்கள் என்று ஆன்மிகப் பெரியோர்களும், டாக்டர்களும் வலியுறுத்துகிறார்கள்.

கடந்த பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக விரதம் இருப்பதிலும் கூட மாற்றங்கள் வந்து விட்டது. தற்போது மக்களிடையே வார விரதம், மாத விரதம், ஆண்டு விரதம் என மூன்று வகையான விரதங்கள் பழக்கத்தில் உள்ளன.

வார விரதம் என்பது வாரத்தின் 7 நாட்களில் எந்த கடவுளை வேண்டி, எந்த தினத்தில் விரதம் இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். அன்று சிவன் அருள் பெற விரதம் இருக்கலாம்.

செவ்வாய்க்கிழமை துர்க்கை, அனுமன் அருள்பெற விரதம் இருக்கலாம். புதன்கிழமை விநாயகர், வியாழக்கிழமை விஷ்ணு, தெட்சிணாமூர்த்தியை நினைத்து விரதம் இருந்தால் திருமணத்தடை அகலும். செல்வம் பெருகும்.

வெள்ளிக்கிழமை அம்மனையும், அம்மனின் அவதாரங்களையும் வழிபட்டு விரதம் இருக்கலாம். சனிக்கிழமை பெருமாள், ஆஞ்சநேயர், காளிதேவி, சனி பகவான் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை நினைத்து விரதம் இருந்து வரம் பெறலாம். மாத விரதம் என்பது நட்சத்திர விரதமாகும். ஆண்டு விரதம் என்பது திதியை கணக்கிட்டு கடைபிடிக்கும் விரதமாகும். ஒவ்வொரு விரதத்துக்கும் எத்தகைய உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது.

முழுப் பட்டினி கிடந்து விரதம் இருப்பது ஒரு வகை. பழ ஆகாரம் (பலகாரம் அல்ல) மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது மற்றொரு வகையாகும்.
பழ ஆகாரம் என்பது பழ வகைகள் மட்டும் கொஞ்சமாக சாப்பிடுவதாகும். பழ ஆகாரம் அதிக வலு இல்லாதது. பழ ஆகாரம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்தால் வயிற்றில் உள்ள பழைய கழிவுகள் அனைத்தும் வெளியில் வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விரதத்தை நாம் ஆன்மிகத்தோடு இணைக்கும் போது, அது பக்தியின் படி நிலைகளில் முதன்மையானதாக மாறுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இறைவழிபாடுகளில் நாம் கொண்டுள்ள பக்தியை முழுமை அடையச் செய்வதே இத்தகைய விரதம்தான்.

அதிலும் விரதம் இருக்கும் நாட்களில் மனதை ஒரு முகப்படுத்தி தியானத்தை கடைபிடித்தால், அது முக்திப் பாதைக்கு நன்மை முன்னேற்றும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே விரதம் என்பது புனிதமானது. விரதங்களினால் நம் ஆன்மா உறுதித் தன்மையைப் பெறுகிறது.

விரதம் மூலம் நாம் வயிற்றுக்கும், இரைப்பைக்கும் ஓய்வு கொடுப்பதால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சிப் பெறும். அதோடு விரத தினத்தன்று ஆலயத்துக்கு சென்று இறை வழிபாட்டில் கவனம் செலுத்தினால் முழு பலனும் கிடைக்கும்.

விரதம் இருக்கும் தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, குளித்து, சுத்தமான ஆடை அணிந்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அருகில் வைத்து கொண்டு எந்த கடவுளை நோக்கி, என்ன விரதம் இருக்கப் போகிறோம் என்பதை உச்சரித்து சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் கருவறை முன்பு நின்று, ‘உன்னை சரண் அடைய இன்று இந்த விரதம் இருக்கிறேன். என் குறைகளை தீர்க்க வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு வீடு திரும்பி விரதம் மேற்கொள்ள வேண்டும். இறை நாமத்தை உச்சரித்தப்படி இருத்தல் வேண்டும். மாலை, உண்ணாவிரதத்தை நிறைவு செய்யும் போது மீண்டும் ஆலயத்துக்கு சென்று, சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட வேண்டும். அப்போது இறைவனுக்கு உகந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். அந்த தெய்வத்துக்கு பிடித்த நைவேத்தியத்தை படைக்க வேண்டும்.

இப்படி ஆன்மீக உணர்வுடன் இருக்கும் விரதம் வெற்றி பெறுகிறது. திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சர்க்கரை வியாதி குணமாகும். 

பொதுவாக சாப்பிடும் 6 மணி நேரத்துக்குள் மீண்டும் சாப்பிட்டால் பழைய உணவு கொழுப்பு சக்தி ஆற்றலாக மாறாமல் கெட்ட கொழுப்பாக மாறி தேங்கி விடும். வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் கொழுப்பு தேங்கும் பிரச்சினையே வராது. முகம் பளிச்சென பிரகாசமாக மாறும். விரதத்தால் மனதின் செயல் குறைந்து தூய்மை பெறும். மனம் தூய்மையானால் தானாகவே ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும். இதற்கு விரதம் இருக்கும் மன வைராக்கியம் தேவை.

அதற்காக முழு பட்டினி கிடக்க வேண்டியதில்லை. முழு பட்டினியானது நீர் வறட்சியை ஏற்படுத்தி விடும். சர்க்கரை அளவு உயர்ந்து விடும். இதை தவிர்க்க விரதத்தின் இடையிடையே தண்ணீர் அல்லது பழரசம் அருந்தலாம். விரதம் இருக்கும் போது இறை சிந்தனையுடனே இருங்கள். பேசுவதை குறையுங்கள். இறை நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். மனப்பூர்வமாக விரதம் இருங்கள். நிச்சயமாக இறைவன் உங்கள் வாழ்வில் மங்களத்தை ஏற்படுத்துவார்.

மகாசிவராத்திரி வழிபாடு

ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருட்ஜோதியான சிவபெருமானுக்குரிய பெரு விரதங்களில் ஒன்று மகாசிவராத்திரி ஆகும். மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று மகாசிவராத்திரி விழா உலகம் முழுவதும் இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

அம்பிகைக்கு உகந்தது நவராத்திரி விரதம். சிவனுக்கு பிடித்தது சிவராத்திரி விரதம். இரண்டுமே இரவோடு தொடர்புடைய விரத வழிபாட்டு நாளாகும். சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையும் அருள்புரிகிறாள். சிவன், லிங்கத்தில் எழுந்தருளி அருள்புரிகின்ற நாளே சிவராத்திரி. 

பிரம்மனும் நாராயணனும், சிவனது அடி, முடிகளை தேடினர். அவர்கள் இருவருக்கும் எட்டாமல் அண்ணாமலையார் அருள் ஜோதியாக ஒளி வீசிய நாளும் இதுவே. தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்த போது, அதில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது. அந்த நஞ்சினை பெருமான் உண்டு உலகை காத்து அருளினார். 

சதுர்த்தசியன்று தேவர்கள் சிவனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி. ஒரு காலத்தில் உலகம் அழிந்து யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கியது. அந்தகாரம் சூழ்ந்த அந்த இருளில் பார்வதி சிவபெருமானை ஆகமங்களில் கூறியுள்ள படி நான்கு காலம் வழிபட்டாள். அவ்வாறு அவளால் வழிபட்டதன் நினைவாக தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நோக்கி இந்நாளில் நான் எவ்வாறு வழிபட்டேனோ அப்படியே வழிபடுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும் இறுதியில் மோட்சமும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பரமசிவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார். 

அதன்படியே அன்று முதல் சிவராத்திரி சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக வாசம் கிட்டும். காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும், நிறைந்த மங்கல வாழ்வு உண்டாகும் என சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. 

சிவராத்திரி நித்ய சிவராத்திரி, பஷ சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என 5 வகைப்படும். மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் உள்ள சிவன் படத்திற்கு சிவபூஜை செய்து அருகில் உள்ள சிவன்கோவில்களுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய வேண்டும். 

முடியாதவர்கள் சிவலாயங்களுக்கு சென்று நான்கு காலங்களிலும் நடைபெறும் விசேஷ பூஜை அபிஷேகங்களை கண்டு களிக்கலாம். பால், தயிர், நெய், தேன், பூஜை பொருட்களை கொடுக்கலாம். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். நான்கு சாமப்பூஜைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் நடைபெறும் சிவபூஜையே தலை சிறந்தது. 

இது லிங்கோற்பவ காலம். விசுவ ரூப தரிசன நேரம். உருவமற்ற சிவன் உருவம் பெற்று லிங்கோற்பவ மூர்த்தியாக லிங்கத்திலே திருக்காட்சி தரும் புனிதமான நேரம் இதுவே. பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் முடி, அடிகளை காண முயலும் தோற்றம் அப்போது புலனாகிறது. சிவ தரிசனம் கிடைக்கிறது. 

மும்மூர்த்திகளும் அங்கே தரிசனம் தருவதால் அவர்களின் பேரருளும் பக்தர்களுக்கு கிடைக்கிறது. சிவராத்திரிதினத்தன்று முழு உபவாசத்தை கடைப்பிடிப்பதால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என புராணங் களில் கூறப்பட்டுள்ளது. 

வீட்டில் பூஜை செய்வது எப்படி? 

மகாசிவராத்திரி பூஜையை வீட்டில் செய்ய விரும்புபவர்கள் அதிகாலையில் நீராடி, தூய ஆடைகளை அணிந்து பகல் முழுவதும் ஜெபம், தியானம், பாராயணம் போன்றவைகளில் ஈடுபட வேண்டும். மாலையில் வீட்டில் ஒரு தூய்மையான இடத்தில் அல்லது பூஜை அறையில் சிவன் படத்தையோ அல்லது சிவலிங்கத்தையோ அலங்காரம் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். 

இரவு 4 காலமும் பூஜை செய்ய வேண்டும். இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்தில் ஆவது கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்ய வேண்டும். அதிகாலை 3 மணிக்கு வில்வ இலை மற்றும் மலர் களால் தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சிவாய நம நமச்சிவாய என மந்திரம் சொல்லலாம். 

சிவன் தொடர்பான பாடல்கள் கதைகளை கேட்கலாம். சினிமா, டி.வி. பார்க்க கூடாது. முதல் ஜாமத்தில் சுத்த அன்னம், காய்கறி ஆகியவற்றையும், வில்வ பழத்தையும், நிவேதனம் செய்ய வேண்டும். இரண்டாம் ஜாமத்தில் லட்டு, பலாப்பழத்தையும், மூன்றாம் ஜாமத்தில் நெய் கலந்த பலகாரங்கள், பாயசம், மாதுளை பழங்களையும் நிவேதனம் செய்து வணங்கி வழிபட வேண்டும். 

நான்காம் ஜாமத்தில் கோதுமையால் செய்யப்பட்ட பலகாரம் மற்றும் கிடைக்கும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஜாமத்தில் பூஜை முடிந்ததும் தன்னால் முடிந்த அளவு தானங்கள் செய்ய வேண்டும். 

விடிந்ததும் நீராடி, நித்ய கடன்களை முடித்து விட்டு சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். 

சிவராத்திரி விரதமகிமை : 

ஒரு சிவராத்திரியன்று வில்வ மரத்தடியில் சிவனும், பார்வதியும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அதை மரத்தில் இருந்த ஒரு குரங்கு தூங்காமல் கேட்டுக் கொண்டு இருந்தது. தூக்கம் வராத குரங்கு வில்வ இலைகளை பறித்து சிவன் மேலும், பார்வதி மேலும் வீசிய படியே இருந்தது. சிவராத்திரியில் 4 காலங்களிலும் தூங்காமல் குரங்கு வீசிய வில்வ இலைகளை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். 

அந்த குரங்கிற்கு மகா சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிடைத்தது. அடுத்த பிறவியில் முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார். உடனே அந்த குரங்கு தான் பெற்ற பாக்கியத்தை உலகம் அறியும் பொருட்டு முசுகுந்த மன்னனாக தான் வாழும் காலத்தில் குரங்கு முகத்துடன் பிறக்க வேண்டும் என வரம் கேட்டது. 

சிவனும் அப்படியே ஆகட்டும் என வரம் அளித்தார். அப்படியே சோழ மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தியாக குரங்கு முகத்துடன் பிறந்து மூவுலகிலும் ஆட்சி செய்தார். 

விரதம் இருந்து முக்தி பெற்ற வேடன் : 

தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரில் வில்வனேஸ்வரர் கோவில் உள்ளது. ஒரு காலத்தில் இந்த ஆலயத்தில் தவநிதி என்ற முனிவர் தங்கி இருந்து வழிபட்டு வந்தார். அப்போது மான் ஒன்றை வேட்டையாட வேடன் ஒருவன் துரத்தி வந்தான். தப்பி ஓடிய மான் ஆலயத்திற்குள் புகுந்து தவநிதி முனிவரை தஞ்சமடைந்தது. 

முனிவர் அதற்கு அபயம் அளித்தார். இதனால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க தயாரானான். அடியாரின் துயரை நீக்க இறைவன் புலிவேடம் கொண்டு வேடனை துரத்தினான். உயிருக்கு பயந்த வேடன் அங்கிருந்த மரத்தின் உச்சியில் ஏறிக் கொண்டான். அவனை துரத்திய புலி மரத்தின் கீழே இருந்தது. 

வேடன் இரவு முழுவதும் மரத்தில் தங்கி இருந்தான். பசியும், பயத்தாலும் அவனுக்கு தூக்கம் வந்தது. கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக மரத்தில் இருந்து ஒவ்வொரு இலைகளாக பிரித்து கீழே போட்டுக் கொண்டு இருந்தான். அன்று சிவராத்திரி ஆனதால் அவன் பறித்து போட்ட இலைகள் கீழே புலி வடிவில் இருந்த சிவபெருமான் மீது விழுந்து அர்ச்சனைகளாக விழுந்து கொண்டு இருந்தது. 

இதனால் தூக்கமின்றி சிவனை வழிபட்ட புண்ணியம் அவனுக்கு கிடைத்தது. இறைவன் வேடனுக்கு மோட்சம் அளித்து அருளினார். விடிந்தால் அவனது ஆயுள் முடியும் நிலை இருந்தது. பொழுது விடிந்ததும் அவனது உயிரை பறிக்க எமன் ஆலயத்திற்குள் நுழைந்தான். உடனே தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றிய இறைவன் கையில் கோலேந்தி எமனை விரட்டினார். எமனும் விடவில்லை. 

இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளான நந்தி தனது சுவாசத்தினால் எமனை உள்ளே நுழையாமல் தடுத்தார். இதைநினைவுப்படுத்தும் வகையில் நந்தி வாயிலை நோக்கியவாறும், தட்சிணாமூர்த்தி கையில் கோலேந்தியும் காட்சி தருகின்றனர். 

நன்மை தரும் ராத்திரி பூஜை : 

சிவாய நம என சிந்தித்து இருப்போருக்கு ஒரு நாளும் அபாயம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. சிவராத்திரி தினத்தில் இரவில் சிவபெருமானை வேண்டி 4 ஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12,30 மணி, அதிகாலை 3 மணி ஆகிய நேரங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்து காரியங்களிலும் நன்மை பயக்கும். 

முதல் காலத்தில் சிவனுக்கு பிரம்மா பூஜை செய்வதாக ஐதீகம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் பிறவியில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம். மகாவிஷ்ணு 2–வது கால பூஜையை செய்கிறார். இந்தக்காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் தன, தானிய சம்பத்துகள் சேரும். 

மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவாக அம்பாள் செய்வதாக ஐதீகம். இதை லிங்கோத்பவ காலம் என்பர். சிவபெருமானின் அடி, முடியை காண வேண்டி பிரம்மா அன்ன பறவை வடிவில் மேலேயும், மகா விஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் எந்த வித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும். 

முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. அப்போது விரதம் இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். இல்லறம் இன்பமாக திகழும். நினைக்கின்ற காரியம் நிறைவேறும்.

Thursday, February 11, 2016

பார்ப்பனிய ஆதிக்க சமூகத்திற்கு டி.என்.ஏ ஆதாரம்

இந்திய வரலாற்றில் ஆயிரமாண்டுகளாக கடைப்பிடித்து வருகிற வருணாசிரம முறை மேலாதிக்கம் பெற்று இறுகிய நிலைக்கு புறமணத்தடையை அமல் படுத்திய இந்து சாம்ராஜ்ஜிய மன்னர்கள்தான் காரணம்.


பார்ப்பன ஆதிக்க சாதி வெறியின் தோற்றுவாய், அதன் ஆதிக்கம் புறமணத்தடையில் இருந்தே வந்துள்ளது – நீங்கள் மறுத்தாலும் உங்களின் இனக்கீற்று அமிலங்கள் (டி.என்.ஏ) மறுக்காது!
டி.என்.ஏ (DNA) அல்லது இனக்கீற்று அமிலங்கள் மனித இனத்தின் மரபணுத் தகவல்கள் மற்றும் மரபணு மாற்றங்களால் ஏற்படும் நோய்களைப் பற்றி மட்டுமே சொல்லும் என நினைத்தால், இல்லை, நாங்கள் சாதிகள் தோன்றி வளர்ந்து மேலாதிக்கம் பெற்ற காலத்தையும் துல்லியமாகச் சொல்வோம் என நிரூபித்துள்ளன. கல்கத்தாவில் இருந்து செயல்படும் தேசிய உயிர்-மருத்துவ மரபியல் நிறுவனம் (NIBMG) மற்றும் இந்தியப் புள்ளியியல் கழகத்தின் மனித மரபியல் பிரிவும் இணைந்து இந்த ஆராய்ச்சி முடிவை எட்டியுள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் PNAS என்ற ஆய்விதழில் வந்துள்ள இக்கட்டுரையின் ஆராய்ச்சியை, NIBMG-இன் ஆய்வுப்பிரிவுத் தலைவர் அனலபா பாசு தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.
கடவுள் துகள்கள் (God particle) என அழைக்கபடும் ஹிக்ஸ்போசான் துகள்களின் கண்டுபிடிப்பு எவ்வாறு கடவுளை மறுத்த துகளாக மாறி இயக்க மறுப்பியலாளர்கள், சங்கப்பரிவாரங்கள் மற்றும் இதர மதக் கோட்பாட்டுவாதிகளின் வாதங்களுக்கு ஆப்பறைந்ததோ, அதைப்போல இவ்வாராய்ச்சி, இந்திய வரலாற்றில் ஆயிரமாண்டுகளாக கடைப்பிடித்து வருகிற வருணாசிரம முறை மேலாதிக்கம் பெற்று இறுகிய நிலைக்கு புறமணத்தடையை (அல்லது அகமண முறையைக் கட்டாயமாக்கிய) அமல் படுத்திய பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பும் அதன் பிரதிநிதிகளான மன்னர்களும் தான் காரணம் என்பதை அறிவியல் ஆதாரத்துடன் விளக்கி, சாதிகளைப் பற்றிப் புரிந்து கொள்ளும் சமூக ஆய்வில் வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. புறமணங்களின்மீது அகமணமானது ஏறி ஆதிக்கம் செலுத்திய காலகட்டம்தான் சாதி மேலாண்மையின் தோற்றுவாயாக இருந்தது, எனக் கூறிய அம்பேத்கரின் வாதத்திற்கு இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வலுசேர்த்துள்ளன.
இந்தியாவில் மக்கள் ஏற்றத்தாழ்வான சாதியக் கட்டமைப்பில் இருக்கிறார்கள் என்பதற்கான உயிரியல் ஆதாரங்களை இந்த ஆய்வு மெய்ப்பித்துள்ளது. அகமண முறையால் இந்த கூறு இன்றும் தொடருவதை இந்த ஆய்வு மெய்ப்பிக்கிறது. அதே நேரம் இந்த அகமண முறை அல்லது சாதியப் பிரிவினை பொருளாதார அலகுகளாக பிரிந்திருப்பதன் மூலம் இந்த சாதிய ஏற்றத்தாழ்வை ஆதிக்கம் செய்யும் சக்திகள் தமது அதிகாரத்தை கையில் வைத்திருந்தன.
வரலாற்று நோக்கில், தற்போதைய இந்திய மக்கள் தொகையின் மரபுத்தொகுதி புனரமைப்பு                  ஐந்துவகைப்பட்ட தனித்தனி
genes-study-5மூதாதையர்களையும், சிக்கலான அமைப்பையும் கொண்டது, (Genomic reconstruction of the history of extant populations of India reveals five distinct ancestral components and a complex structure) எனத் தலைப்பிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில்தான் இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரய்ச்சியின் முதல்படியாக, இந்தியாவின் பல்வேறு சமூகக் கலாச்சாரம், மற்றும் மொழியில் வேறுபட்ட சுமார் இருபது சாதிகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. இந்திய நிலப்பகுதிகளில் வாழும் 18 சாதிகளிடம் இருந்தும் அந்தமான் தீவில் வாழும் இரண்டு பழங்குடியினரின் ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டன. ஒவ்வொரு சாதியில் இருந்தும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஏறக்குறைய 20 நபர்கள் என சுமார் 367 நபர்களின் ரத்த மாதிரிகளில் இருந்து மரபணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றின் மரபணுத் தொடர்வரிசை கணக்கிடப்பட்டது (Genome sequence).
இதன்படி பல்வேறு முடிவுகளை கண்டடைந்துள்ளனர். குறிப்பாக 2009-களில் இந்திய மக்களின் மரபணுக்களைப் பரிசோதித்த ரீச் (ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக் கழகம், அமெரிக்கா) மற்றும் குமாரசாமி தங்கராஜ் (மத்திய செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் நிறுவனம், இந்தியா) குழுவினரின் ஆய்வுப்படி இரண்டு தனி மூதாதையர்கள் மட்டுமே இருக்கின்றனர் என முடிவு செய்யப்பட்டது. அதாவது பெரும்பாலான தென்னிந்தியப் பகுதிகளில் இருக்கும், திராவிட வழியிலான மூதாதையர்கள் (ASI – Ancestral South Indian) மற்றும் வட இந்தியப் பகுதிகளில் இந்திய – ஐரோப்பிய மொழிகளைப் பேசும் மூதாதையர்கள் (ஆரியர்கள் எனவும் எடுத்துக்கொள்ளலாம், ANI – Ancestral north Indian) என இருப்பிரிவினர். அனால் தற்போது, இந்தியா முழுதும் உள்ள பரந்துபட்ட மக்களின் மரபணுக்களை ஆராய்ச்சியில் எடுத்துக்கொள்ளப்பட்டதால் மேற்கூறிய இரண்டு பிரிவினரையும் சேர்த்து மொத்தம் 5 தனித்தனி மூதாதையர் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் காணப்படும் பழங்குடிகளான ஆஸ்திரிய-ஆசிய மக்கள் (AAA – Ancestral Austro -Asiatic), வடகிழக்கு இந்தியாவில் காணப்படும் திபத்திய-பர்மிய மக்கள் (ATB – Ancestral Tibeto -Burman) மற்றும் அந்தமான்-நிக்கோபர் தீவுகளில் மட்டுமே வாழ்ந்துவரும் ஜரவா, ஓங்கே உள்ளிட்ட பழங்குடிகள் உள்ளிட்ட மூன்று மூதாதையர்களை உள்ளடக்கியதுதான் இந்தியாவின் இன்றைய குடிமக்கள்.genes-study
இதற்கு முன்பு வந்த ஆய்வுகள் பல இதுபோன்ற தகவல்களைக் கூறினாலும் இச்செய்தி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவை பலவெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கூட்டு முயற்சியில் நடந்தாலும் ஆய்விற்கு சில சாதிகளின் ரத்த மாதிரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் அவர்கள் ஒரு முன்முடிவில் இருந்து அவ்வராய்ச்சியை நடத்தியுள்ளனர். ஆனால் இக்குறிப்ப்ட்ட ஆய்வு முழுக்க முழுக்க இந்தியாவில், இந்திய மரபணு ஆராய்ச்சியாளர்களால் பல வகைப்பட்ட பிரிவினரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, கடந்தகால சமூகப் பழக்கவழக்கங்களில் இருந்து நிறுவியுள்ளனர். பல சமூக ஆய்வாளர்கள் இவர்களின் அறிவியல்-சமூகப் பூர்வ தர்க்கத்தை ஏற்றுள்ளனர். நல்லவேளையாக இவ்வாராய்ச்சியின் முடிவுகள் ஏற்படுத்தப்போகும் விவாதங்கள் அல்லது எதிர்கால சமூக ஆய்வில் ஏற்படப்போகும் திருப்பங்கள் குறித்து இந்துத்துவப் பார்ப்பனப் பரிவாரங்கள் அறிந்திருக்கவில்லை. அதுமட்டும் தெரிந்திருந்தால் கண்டிப்பாக மோடி இவாராய்ச்சியை நடத்த விட்டிருக்கமாட்டார்கள்.  இல்லையென்றால் எடுக்கப்பட்ட ரத்தத்தின் மாதிரிகளை (samples) மாற்றியிருப்பார் எனக் கருத நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்த அளவிற்கு சங்க பரிவாரங்களை எரிச்சல்படுத்துவதோடு அறிவியல் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு இது.
சமீபத்திய ஆய்வின் மூலம் இந்தியா முழுவதும் 1575 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதாவது 4200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 1575 ஆண்டுகள் முன்பு வரையிலான இடைப்பட்ட காலங்களில் நமது அனைத்து மூதாதையர்களும் தங்கள் இனத்திற்கு வெளியே இருப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளனர், கலந்துள்ளனர். அதாவது புறமணமுறையானது (Exogamy) இருந்துள்ளது. ஆனால் அதற்குப் பிறகு தங்கள் கணம் அல்லது சாதி/குழுக்களைத் தாண்டி திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டது. இதற்கான காரணத்தை அவர்கள் ஆராய்ந்த பொழுதுதான் அக்கால மக்களின் சமூக வாழ்நிலை அப்போதைய ஆட்சியாளர்களால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டதைக் கண்டனர். இந்தியாவின் பொற்காலம் என்றும் வேதங்களின் காலம் என்றும் புகழாரம் சூட்டப்படும் குப்தர்கள் பேரரசில்தான் அகமணமுறை கட்டாயமாக்கப்படுகிறது. அதாவது தர்மசாஸ்திரம்/மனுதர்மத்தின் பெயரில் சாதிக்கொடுங்கோன்மைகளும் ஒரு சாதியினர் மற்ற சாதியினருடன் மணமுடிப்பது தடுக்கப்பட்டு புறமணமுறை தடைசெய்யப்பட்டது. இச்செய்திகள் நமக்கு முன்கூட்டியே தெரியும் என்றாலும், உயிரித் தொழில்நுட்பம் மூலமாக உறுதியாகியுள்ளது எனலாம்.
genes-study-4இந்தியாவில் இருக்கும் குஜராத், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க பார்ப்பனர், தமிழகத்தின் ஐயர், மற்றும் கத்ரி போன்ற ஆதிக்கச்சாதி பிரிவினர்கள் கிட்டத்தட்ட 70 தலைமுறைகளுக்கு முன்பாகவே புறமணமுறையை கைவிட்டார்கள் என இவ்வாய்வு தெரிவிக்கிறது. 1100 வருடங்களுக்கு முன்பு ஆண்ட சாளுக்கியர்கள் காலகட்டத்தில் மராத்தா பிரிவினரின் புறமணமுறை நிறுத்தப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில்தான் ராஷ்டிரகுட மன்னர்கள் விவசாயிகளிடமிருந்து ஒரு படைப்பிரிவினரைத் தோற்றுவித்து அவர்கள் மற்ற சமூகத்தினரிடையே கலப்பதைத் தடுத்துள்ளனர், இவர்களே பிற்காலத்தில் அப்பகுதியின் சத்திரிய வம்சமாகத் தோன்றினர். இச்சாதிப் பிரிவால்தான் ஒரு கட்டத்தில் அதிக அளவில் நடந்த, திராவிட- பழங்குடியின கலப்பும், வேறுபட்ட பழங்குடியினரிடையேயான கலப்பும் தடைசெய்யப்பட்டது எனலாம்.
சாதிப்பாகுபாட்டினால் பல்வேறு பிரிவினையிடையே இருந்து வந்த கலப்பு முற்றுப் பெற்றாலும் அது முழுமையாக முடியவில்லை. ஆதிக்கசாதி ஆண்களின் மரபணுக்கள் மற்றசாதி குழந்தைகளிடையே காணப்பட்டுவதாக இவ்வாய்வு தெரிவிக்கிறது. அதாவது பார்ப்பன, ஆதிக்க சாதிகளின் ஆணாதிக்கம் திராவிட, பழங்குடிப் பெண்களின் வாழ்க்கையில், அவர்களின் குடும்பங்களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதே சமயம் இது மற்றசாதி ஆண்கள் பார்ப்பன, ஆதிக்க சாதி பெண்களுடனான கலப்பைத் தடுத்திருக்கிறது. இதன் மிச்ச சொச்சம்தான் பொட்டுக்கட்டுதல், தேவதாசி மற்றும் தேவரடியார் முறைகளில் பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பனர்கள் மற்றும் இதர ஆதிக்க சாதியினர் பயன்படுத்தியுள்ளனர். இதுமட்டுமல்லாது, தாழ்த்தப்பட்ட ஏழை விவசாயிகளின் மனைவிமார்களை ஜமீந்தார்களுக்குப் பிடித்துவிட்டால் அவ்வளவுதான், அவ்விவசாயி தன் மனைவியை அவர்களின் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும், இது அம்மக்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு கட்டாயமாக இருந்துள்ளது. அதை மீறி செயல்பட முடியாத அளவிற்கு தண்டனைகள் கடுமையாக இருந்துள்ளது. வீரம்செறிந்த தெலுங்கானாப் போராட்டத்தைப் பற்றி விளக்கும் மாபூமி படத்தில் கூட இது போன்ற காட்சிகளைப் படமாகப் பார்த்திருப்பீர்கள்.
எப்படி இதைக் கண்டுபிடித்தார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் ஆராய்ச்சியில் கூறப்பட்டவை அனைத்தும் அறியியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. இதைக் கண்டுபிடிக்க மனித உடலில் காணப்படும் Y குரோமோசோம்கள் (மரபணுச்சரம், மரபணுக்கோல் அல்லது நிறமூர்த்தம் என பல கலைச்சொற்கள் உள்ளன) மற்றும் மைட்டோகான்ட்ரீயா (மணியிழை) டீ.என்.ஏக்கள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் Y மரபணுச்சரங்களின் மூலம் ஆண்களின் பரம்பரைத் தகவல்களையும், மணியிழை டி.என்.ஏக்கள் மூலம் பெண்களின் பரம்பரைத் தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். Y மரபணுச்சரமானது ஆண்களிடம் மட்டுமே காணப்படுகிறது, ஆக ஆண்களிடமிருந்தே இத்தகவல்கள் மற்றவர்களுக்குப் பரப்பப்படுகிறது. மரபணுக்களை மொத்தமாகப் படிக்கும்போது, இத்ததகவல்கள் குறிப்பிட்ட நபரின் தந்தை எந்த சமூகத்தைச் சார்ந்தவராக, சாதியைச் சார்ந்தவராக இருந்தார் என்பதைச் சொல்கின்றன. மணியிழை டி.என்.ஏ பெண்களிடமிருந்துதான் ஒருவருக்குக் கிடைக்கிறது. மணியிழை டி.என்.ஏவானது விந்துவில் மிகக் குறைவாகவும், கருமுட்டையில் அதிக அளவும் காணப்படுகிறது. கருவுறுதலின் பொழுது விந்துக்களில் உள்ள மணியிழை டி.என்.ஏக்கள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன,(மைட்டோகாண்ட்ரீயா அல்லது மணியிழைகள், இவை செல்களுக்கான ஆற்றலின் பிறப்பிடமாகும்) அதனால் ஒருவரின் உடலில் உள்ள மணியிழை டி.என்.ஏ தனது தாயிடமிருந்து பெறப்பட்டவையாக மட்டுமே இருக்கும்.
இதன்படி, இந்தியாவில் காணப்படும் திராவிட, பழங்குடியின மக்களின் மரபணுக்களில் Y மரபணுச்சரத்தின் பல்வகைப்பட்ட பிரிவுகள் காணப்படுகின்றன, அதே சமயத்தில் மணியிழை டி.என்.ஏக்கள் அனைத்தும் இப்பிரிவினரிடையே ஒன்றுபோல இருக்கின்றன. அதாவது மேல்சாதி ஆண்கள் திராவிட, பழங்குடி பெண்களை தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்டதன் மூலம் அவர்களின் வழியே பிறந்த குழந்தைகளிடம் Y மரபணுச்சரங்கள் வேறுபட்டு இருந்தன, ஆனால் தாய்க்கூறைக் கண்டுபிடிக்கும் மணியிழை டி.என்.ஏக்களில் எவ்வித வேறுபாடும் இல்லை. இத்தகைய பண்புகள் மேல்சாதியினரின் மரபணுக்களில் இல்லை, இதன் மூலம் திராவிட, பழங்குடியின ஆண்கள் மேல்சாதி பெண்களிடம் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. இதுவே பார்ப்பனிய மேலான்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இது போன்ற தனிச்சிறப்பான ஆராய்ச்சிகள் மூலம் நமது ஆப்பிரிக்க மூதாதையர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பகுதிகளுக்கு வந்தனர், திராவிடப் பாரம்பரியம், ஆரியப் படையெடுப்பு பற்றிய தகவல்களைத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.மேலும், பல்வேறு இனங்களுக்கிடையில் கலப்பு இருந்த நமது சமூகம் மிகுந்த ஆரோக்கியத்துடன்தான் இருந்துள்ளது. ஆனால் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள், பல நோய்களின் கூடாரமாக மாறியது சிலப் பல நூறாண்டுகளுக்கு முன்பு இவர்கள் கொண்டு வந்த அகமணமுறையின் மூலம்தான் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா. நம்பமுடியாவிட்டாலும் அதுதான் உண்மை. இதை அவர்களே மறுத்தாலும் அவர்களின் டி.என்.ஏக்கள் மறுக்காது. அதுபற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்



அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...