Friday, January 8, 2016

தந்தை ஆவதற்கான தகுதி என்ன?

கேள்வி என் மீது மிகுந்த பிரியம் வைத்திருப்பவர், என் அப்பா. ஒரு குறையும் வைத்ததில்லை. என் அம்மாவுக்கு நான் பிறந்து, அவள் விதவையான பின், அவளை மணந்து கொண்ட இரண்டாவது கணவர் அவர் என்று அண்மையில்தான் எனக்கு உண்மை தெரிந்தது. அவருக்குப் பிறந்தவன் அல்ல என்று தெரிந்தபின், அவருடன் பழைய நெருக்கத்தோடு பழக முடியாமல் தவிக்கிறேன். எப்படி இதைச் சரிப்படுத்துவது? சத்குரு: சரிப்படுத்த வேண்டியது உங்கள் மனநிலையைத்தான்! மனித உறவுகள் மேம்பட்டிருக்க ஏதாவதொரு ரத்தத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு தூரம் மதிக்கிறீர்கள். எத்தனை விருப்பத்துடன் அன்பைப் பொழிகிறீர்கள். எப்படி கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் எந்த உறவும் அமையும். மனித உறவுகள் வெறும் உடல் ரீதியானவை அல்ல, உணர்வு ரீதியானவை. இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவராக உங்கள் அப்பா நடந்து கொண்டு இருக்கிறாரே, அதை நினைத்து முதலில் சந்தோஷப்படுங்கள். நீங்கள் எவ்வளவு தூரம் மதிக்கிறீர்கள். எத்தனை விருப்பத்துடன் அன்பைப் பொழிகிறீர்கள். எப்படி கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் எந்த உறவும் அமையும். மற்ற எத்தனையோ பேருக்குக் கிடைத்ததைவிட அற்புதமான தந்தை உங்களுக்குக் கிடைத்திருக்கிறார். அதைக் கொண்டாடுவதை விடுத்து, இடைவெளி விழுந்துவிட்டதாக நினைப்பதே தவறு. பொதுவாக, ஒருவருக்குப் பிறக்கும் குழந்தையை அவர் தேர்ந்தெடுக்க முடியாது. அது அவருடைய சட்டதிட்டங்களை மீறியது. தன்னிச்சையாக அவர் மடியில் வந்து விழும் உயிர் அது. சங்கரன்பிள்ளை விமானத்தில் பயணம் செய்தார். உணவு நேரம் வந்தது. விமானப் பணிப்பெண் ஒவ்வொரு இருக்கையாக ஓர் அட்டையை நீட்டி, அதில் டிக் அடிக்கச் சொல்லியவாறு வந்தாள். பல உணவு வகைகளில் தனக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்து அந்த அட்டையை வாங்கிய சங்கரன்பிள்ளை திகைத்தார். அதில் தேர்ந்தெடுக்க ‘வேண்டும், வேண்டாம்’ என்று இரண்டே சொற்கள்தான் இருந்தன. தங்களுக்குப் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளை இப்படித்தான் பெற்றோர்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பிறந்ததும், அது தன்னுடையது என்ற பெருமை அதன் மீது பற்று வைக்கச் சொல்கிறது. தன்னுடைய உடைமையாக, உரிமை கொண்டாட முடிந்தால் மட்டுமே ஒருவரைச் சொந்தம் என்று நினைக்கும் பெரும்பாலானவர்களுக்கு மத்தியில், தனக்குப் பிறக்காத ஒருவரைத் தன் மகன் போலவே நினைத்து, உங்கள் மீது அன்பும், பாசமும் பொழிந்து வந்திருக்கும் உன்னதமானவரை நீங்கள் அந்நியப்படுத்திப் பார்க்காதீர்கள். உலகில் மற்றெந்த உறவுகளையும் விட தாய்மை மிகவும் போற்றப்படுவதற்குக் காரணம் என்ன? சில மாதங்களுக்குத்தான் என்றாலும், மற்றொரு உயிரைத் தன்னுடைய ஒரு பகுதியாகவே ஏற்று, தன் உயிராக தனக்குள்ளேயே இணைத்துக் கொள்ளும் உன்னதம் அது. கர்ப்பக்காலத்தில், பெண்கள் மிக அழகாக மிளிர்வதற்குக் காரணம் அந்த உணர்வுதான். இன்னொரு உயிரைத் தன்னுயிராக ஏற்கும் நிலைதான் யோகாவின் நோக்கம். ஒவ்வொரு தாயும் கவனத்துடனோ, கவனமின்றியோ, யோகாவை அனுபவித்துவிட இயற்கை கொடுத்த வரம் இது. ஓர் அன்னைக்கு மட்டுமே உரித்தான இந்த மகத்தான குணத்தை ஓர் ஆணிடம் காண்பது அரிது. இனக்கவர்ச்சி காரணமாக உங்கள் அன்னையை மட்டும் விரும்பி ஏற்று, உங்கள் மீது அன்பு பொழியாமல் விடவில்லை உங்கள் அப்பா. ஒரு குழந்தை வளர்வதற்கான சரியான சூழலை அமைக்கத் தவறிவிட்டு, குழந்தையை உற்பத்தி செய்து பூமியில் எறியும் பல தந்தைகளைப் போன்றதா உங்கள் அப்பாவின் செயல்? இல்லை. அவர்களுடைய இனச் சேர்க்கையின் விபத்தாகப் பிறந்தவரல்ல நீங்கள். உயிர் அணுக்களைத் தந்தவர் என்ற காரணம் கூட இல்லாமல், உங்களை உங்களுக்காகவே ஏற்றுக் கொண்டு இருக்கிறாரே, அது எப்பேர்ப்பட்ட மேன்மையான செயல்! இவருடைய வாழ்க்கையில் நான் விபத்தாக வந்து சேர்ந்தவனல்ல, இவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்ற எண்ணம் தரக்கூடிய மகிழ்ச்சிக்கு இணை ஏது? பள்ளியிலிருந்து திரும்பிய மகனை அம்மா கேட்டாள்: “இன்றைக்கு என்ன சொல்லித் தந்தார்கள்?” “எழுத சொல்லித் தந்தார்கள் அம்மா” “அட என் செல்லமே, நீ என்ன எழுதினாய்?” “தெரியாதே.. இன்னும் அதைப் படிப்பதற்கு சொல்லித் தரவில்லையே?” தந்தையின் ஆதரவற்றுப் போயிருக்கக்கூடிய உங்களை ஏற்றுக் கொண்டதைப் புரிந்து கொள்ளத் தெரிந்த உங்களுக்கு, அதன் மேன்மையைப் புரிந்து கொள்ளத் தெரியாதிருப்பது இப்படித்தான் இருக்கிறது. இன்னொரு உயிரை உங்களில் ஒரு பகுதியாக ஏற்பதால்தான் காதல்கூடப் பரவசம் தருகிறது. காதலில் ஆனந்தம் வருகிறது. குழந்தையோ, மனைவியோ, கணவனோ, நண்பனோ விபத்தாக வந்து சேர்வதைவிட முழுமையான கவனத்துடன், வேறொரு உயிரை விரும்பிச் சேர்த்துக் கொள்வது மிக மேன்மையானது. நிபந்தனையற்ற அன்பு என்பது ஒருவர், இருவர் என்றில்லை உலகின் மொத்த ஜனத்தொகையையும் உங்களுடையதாக ஏற்கும் அளவு விரிவானது. இதுதான் யோகாவின் முதல் அடி. இது நீங்கள் மறக்காதிருக்க வேண்டிய ரகசியம்!

இறந்த உயிர்களை அணுகுவது எப்படி?

கேள்வி இறந்த உயிர்களை அணுகுவது எப்படி? 

சத்குரு: சில விஷயங்களை அனுபவத்தில் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். அனுபவப்பாடம் கற்க பலரும் தயாராக இருப்பதில்லை. கண்களை மூடிக்கொண்டால் என்னைப் பார்க்க முடியாது, இருந்தும் நீங்கள் இருப்பது உங்களுக்கு புரிகிறதல்லவா? கண்கள் என்னும் ஜன்னல் மூலம் என்னைப் பார்க்க முடிகிறது, அந்த ஜன்னலை மூடினாலும் உங்களை உங்களால் உணர முடிகிறது. அப்படியென்றால், உடல் பரிமாணத்தையும் மீறிய விஷயங்கள் இருக்கிறதென்று புரிகிறதல்லவா? இது எளிமையான உதாரணம். இதுவரை நீங்கள் கிரகிக்காத பரிமாணத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால், முதலில் அந்தப் பரிமாணத்தைப் பற்றி சிந்திப்பதை நிறுத்துங்கள். தற்சமயம், நீங்கள் எதையெல்லாம் புரிந்து கொண்டிருக்கிறீர்களோ அதைப் பற்றி மட்டுமே உங்களால் கற்பனை செய்ய முடியும். நீங்கள் அறியாத பரிமாணத்தை பற்றி கற்பனை செய்ய இயலாது. அதனால் உங்களையும் மீறிய ஒரு பரிமாணத்தை கிரகித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தால், தற்சமயம் நீங்கள் இருக்கும் நிலையை உணர்வது அவசியம், அபரிமிதமான கற்பனைகளை வைத்துக் கொண்டு அதனை ஊதிப் பெரிதாக்குவது உதவாது. மனம் என்னும் பரிமாணம் உங்களுக்கு பரிச்சயமான விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்ள மட்டுமே உதவும். அதனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்றொரு பரிமாணத்தைப் புரிந்துகொள்ள உங்கள் கிரகிப்புத் திறனை உயரங்களுக்கு உயர்த்துவது அவசியம். கேள்வி எதனை நீங்கள் அதிர்ஷ்டம் கெட்ட முகம் என்பீர்கள்? சத்குரு: விஜயநகர ராஜ்ஜியத்தில் இது நடந்தது. ரெட்டப்பா என்றொரு சவரத் தொழிலாளி இருந்தார். பொதுவாக, ஒரு சவரத் தொழிலாளியின் முகத்தை பார்ப்பதை துரதிருஷ்டமாக அன்றைய சமூகம் கருதியது. இன்றும் பல இடங்களில் இந்த நம்பிக்கை நிலவுகிறது. இதனால், ரெட்டப்பா மிக கவனமாக இருந்தார். காலையில் தனக்கு சவரம் செய்ய ஒரு மனிதர் தேவைப்பட்டாலும் அவரது முகத்தில் முழிப்பது மட்டும் பாவமாக கருதும் மக்கள் இருக்கத்தான் செய்தனர். ஒருநாள், அரசர் காட்டில் முகாமிட்டிருந்தார். அங்கு தன் காலைக் கடன்களை கழிக்க சென்றிருந்தார் ரெட்டப்பா. அரசரும் அதே வேலைக்கு அந்தப் பக்கம் வந்திருந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்தனர். “காலையில் முதல் முதலாக உன் முகத்திலா முழிப்பேன். நீ எனக்கு துரதிருஷ்டத்தை கொண்டு சேர்த்துவிட்டாய். உனக்கு மரண தண்டனை விதிக்கிறேன்” என்று கூறிச் சென்றார் அரசர். ரெட்டப்பாவிற்கு நேர்ந்த அநீதியைப் பற்றி கேள்விப்பட்ட தெனாலிராமன், “இன்று அரசன் கழுவில் ஏற்றப்படுகிறார், இது அரசனுடைய கட்டளை” என்று போஸ்டர் அடித்து நாடெங்கும் ஒட்டினார். தெனாலிராமன் என கையெழுத்திடப்பட்ட போஸ்டர்களை கண்ட அரசன் சீற்றமடைந்தான். “என்ன முட்டாள்தனம் செய்திருக்கிறாய், தெனாலிராமா?” என்றான் அரசன். அதற்கு தெனாலிராமன், “ரெட்டப்பாவின் முகத்தைப் பார்த்ததால் உங்களுக்கு துரதிருஷ்டம் ஏற்பட்டது, ஆனால் பாருங்கள் இன்னொரு துரதிருஷ்டக்காரன் இருக்கிறான்; அவனைப் பார்த்ததும் ரெட்டாப்பாவிற்கு மரணமே நிகழப் போகிறது. அப்படியென்றால், ரெட்டப்பா பார்த்தவன் எப்பேர்ப்பட்ட துரதிருஷ்டக்காரனாய் இருப்பான்!” என்றார். அதனால், எது துரதிருஷ்டமான முகம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். கேள்வி இன்று எங்கு பார்த்தாலும் இரவு வேலை செல்பவர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்களே…? சத்குரு: இது நம் தேசத்தில் மட்டுமல்ல உலகம் முழுக்க நடக்கும் ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது. இங்காவது இரவு வேலைக்கு செல்கிறார்கள், அமெரிக்காவில் இரவுநேர பார்ட்டிக்குச் செல்கிறார்கள். அதேபோல், அதிகாலை பார்ட்டி எனும் விஷயமும் அங்கு பிரசித்தி பெற்று வருகிறது. இரவு கண்விழிக்க இயலாதவர்களுக்காக அதிகாலை பார்ட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஒரு பெண் ஒரு காலை பார்ட்டிக்கு அழைக்கப்பட்டார். பத்திரிகையிலேயே என்ன உணவு என்பதையும் இவர்கள் அச்சடித்து விடுவது வழக்கமாக இருக்கிறது. ஏனெனில், இவர்கள் அபாரமான உணவுப் பிரியர்களாகவும் இருக்கிறார்கள். உணவுப் பட்டியலைப் பார்த்த இந்தப் பெண்மணிக்கு பார்ட்டிக்கு போக ஏக விருப்பம் ஏற்பட்டது. ஏற்பாட்டாளர்களை அழைத்து, “எனக்கு இந்த பார்ட்டிக்கு வர வேண்டும் என விருப்பம், ஆனால் என்னால் வர இயலாது” என்றார். “ஏன்?” என்றனர். “எனக்கு ட்ராபிக் லைட் சின்ட்ரோம்’ உள்ளது என்றார். ‘‘அப்படி என்றால் என்ன?” என்றனர். ‘‘காலையில் நான் வெளியே வந்தால் என் கண்கள் சிவந்துவிடும், தோல் மஞ்சளடித்துவிடும், உடலெங்கும் பச்சை போர்த்தியது போல் உணர்வேன்” என்றார். இந்தளவிற்கு அங்கு இரவு பார்ட்டி மோகம் மக்களை பீடித்திருக்கிறது. பகல் நேரத்தில் சராசரி வாழ்க்கை வாழ முடியாமல் அவதிப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

நல்ல மரணம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

கேள்வி என் தாயார் இறக்கும் தருவாயில் இருக்கிறார். அவரை இறப்பிற்கு தயார்படுத்த சிறந்த வழி என்ன? சத்குரு: உலகமெங்கும், மக்கள் அமைதியாக இறப்பதைப் பற்றிப் பேசுகிறார்கள்; அவர்கள் அமைதியாகப் போய்விட நினைக்கிறார்கள். இப்படி ஒரு மனிதர் இறப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில், அவர் அருகில் நீங்கள் ஒரு விளக்கேற்றி வைக்கலாம். அதில் நெய் இருந்தால் நல்லது அல்லது வெண்ணையைக் கூட பயன்படுத்தலாம்-அந்த விளக்கை தொடர்ந்து 24 மணி நேரமும் அந்த நபருக்குப் பக்கத்தில் எரிய வைக்கலாம். இது அவரைச் சுற்றி ஒரு சக்தி வளையத்தை உருவாக்கி, மரணத்தின் கொந்தளிப்பை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும். இன்னொரு விஷயமும் செய்யலாம். அந்த நபர் விரும்பினால், நீங்கள் ஒரு மந்திர உட்சாடனையை CDல் மிகக் குறைவான ஒலியில் ஒலிக்கச் செய்யலாம். இதைப் போன்ற பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு ஒலி பின்னணியில் ஒலித்தால், கொந்தளிப்பான தன்மையை விலக்கிக்கொள்ள முடியும். ஒரு மனிதர் இறந்தால், உடலில் உள்ள அவரது முடிகளும், நகங்களும் 11 நாட்கள் வரை வளரும். இந்த ஏற்பாடுகளை ஒருவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்ட பிறகு 14 நாட்கள் வரை செய்ய வேண்டும், ஏனென்றால் அவர் மருத்துவரீதியாக இறந்திருந்தாலும், இந்தப் பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை அவர் இறக்கவில்லை. அவர் முழுமையாக இறக்கவில்லை. மரணம் மெதுவாகத்தான் நிகழும். ஒரு மனிதர் இறந்தால், உடலில் உள்ள அவரது முடிகளும், நகங்களும் 11 நாட்கள் வரை வளரும்; பெரும்பாலும் 14 நாட்கள் வளரும் என்று முன்னரே நீங்கள் அறிந்திருக்கலாம். இது ஏனென்றால் மரணம் மெதுவாகத்தான் நடக்கிறது; அது முழுமையடையவில்லை. உடலில் இருந்து உயிர் பிரியும் இந்த செயல்முறை படிப்படியாக நடக்கிறது. நுரையீரல், இதயம், மூளை ஆகியவற்றின் செயல்பாடுகள் நின்றுவிட்டதால், மருத்துவரீதியாக அவர்கள் இறந்தவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள், ஆனால் அப்படி இல்லை. அந்த மனிதரின் உடல் எரிக்கப்பட்டாலும், அவர் இன்னும் இறக்கவில்லை, ஏனென்றால், அவர் இன்னும் அடுத்த பயணத்தைத் துவங்கவில்லை. அதனால்தான் ஒருவர் இறந்து 14 நாட்கள் வரை இந்தியாவில் பல்வேறு சடங்குகள் நடக்கின்றன. துரதிருஷ்டவசமாக, இவற்றின் பின்னணியிலிருக்கும், புத்திக்கூர்மையும் சக்தியும் பெரும்பாலும் தொலைந்துவிட்டன. வெகு சிலர்தான் இவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்திருக்கிறார்கள். எனவே ஒருவர் மரணமடைந்த பிறகு செய்யும் முதல் வேலை, அவர்கள் உடலுடன் மிக நெருக்கமாக இருந்தவற்றை, உதாரணத்துக்கு உள்ளாடைகளை எரித்துவிடுவார்கள். நகைகள், மற்ற துணிகள், மற்றவை எல்லாம் முதல் மூன்று நாட்களுக்குள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் – யாரோ ஒருவருக்கு மட்டும் அல்லாமல் பலருக்கு வினியோகிக்கப்பட்டுவிடும். யாராவது ஒருவருக்கு இறந்தவருடைய பொருட்களை மூட்டையாகக் கட்டிக் கொடுத்தால், அவர்கள் அங்குதான் செல்வார்கள், ஏனென்றால், அவர்கள் அந்தத் துணிகளில் இருக்கும் தங்கள் சொந்த உடலின் சக்தியின் மீது பற்று கொண்டிருப்பார்கள். “உங்கள் எதிரி இறந்து கொண்டிருந்தால் கூட, நீங்கள் அவருக்காக கொஞ்சம் அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தவறான செயல்களை செய்யக்கூடாது” இவையெல்லாம் மரணமடைந்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தையும், உறவினர்களையும் சமாதானப்படுத்துவதற்காகவே செய்யப்பட்டது. இதனால் அவர்கள், எல்லாம் முடிந்துவிட்டது என்று புரிந்து கொள்வார்கள். நீங்கள் அவருடன் எத்தனை நெருக்கமாக, பற்றுதலோடு இருந்தீர்கள் என்பது முக்கியமில்லை, ஆனால் அது நிகழ்ந்துவிட்டால், அவ்வளவுதான் விளையாட்டு முடிந்துவிட்டது என்பது உங்களுக்கு புரிந்துவிடும். பொதுவாக, உலகெங்கிலும், கலாச்சார வித்தியாசமில்லாமல், “உங்கள் எதிரி இறந்து கொண்டிருந்தால் கூட, நீங்கள் அவருக்காக கொஞ்சம் அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தவறான செயல்களை செய்யக்கூடாது” என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த விழிப்புணர்வு எல்லா கலாச்சாரங்களிலும் இருக்கிறது, இல்லையா? ஒருவர் இறந்ந்துவிட்டார், விளையாட்டும் முடிந்துவிட்டது. இப்போது பந்தை உதைப்பதில் பயனில்லை. இதனால்தான், இறந்தவர்களை மரியாதையுடன் நடத்தாதபோது, உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று வருத்தப்படுகிறது. அவர் எப்படி வாழ்ந்தார் என்பது முக்கியமில்லை இறப்பாவது நிச்சயமாக நன்றாக நடக்க வேண்டும்.

பிறப்பு – இறப்பு – மறுபிறப்பு… அறியப்படா சூட்சுமங்கள்!

சித்தார்த்தன் ஒரு மரணத்தை முதன்முதலாகப் பார்த்த பின்னர்தான் ஆன்மீகத் தேடல் ஏற்பட்டு புத்தரானான். மரணத்தைப்பற்றி எப்போது ஒருவர் சிந்திக்க துவங்குகிறாரோ அப்போதுதான் ஆன்மீகத் தேடல் உண்டாகிறது. மரணம் குறித்து பல்வேறு தத்துவங்களும் தகவல்களும் இதுவரை நீங்கள் அறிந்திருந்தாலும் சத்குரு இங்கே மரணம் பற்றி பேசுவது மரணத்தை புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது. தொடர்ந்து படியுங்கள்! சத்குரு: மரணம் என்பது என்ன? உங்கள் அனுபவத்தில் இல்லாத எதையும் நீங்கள் நம்பவேண்டாம் என்று நான் உங்களை வலியுறுத்தி வந்திருக்கிறேன். நீங்கள் கேள்விப்பட்ட விஷயத்தில் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களுக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது, அவ்வளவுதான். யாரோ உங்களுக்கு ஒரு கதை சொன்னார்கள், அது உண்மையா உண்மையில்லையா என்று உங்களுக்குத் தெரியாது. எனவே நான் கூட ஏதாவது சொன்னாலும், அதை நீங்கள் நம்பவேண்டாம். அதேநேரத்தில் அதை நம்பாமலும் இருக்க வேண்டாம். யாரோ ஒருவர் இப்போது உங்கள் அனைவர் முன்னிலையிலும் உட்கார்ந்து மிகவும் முட்டாள்தனமாக ஒன்றைப் பேசுகிறார். சரி, இது என்னவென்று பார்ப்போம் என்னும் ஒரு திறந்த மனதுடன் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் உண்மைக்கான சாத்தியக்கூறு எப்போதும் உயிருடன் இருக்கும். உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றை நம்பினாலும் அந்த சாத்தியத்தை அழித்து விடுவீர்கள் அல்லது நம்பாவிட்டாலும் அழித்துவிடுவீர்கள். நீங்கள் எப்போதாவது இறந்திருக்கிறீர்களா? இல்லை, சரி, இறந்த மனிதனையாவது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் எப்போதாவது இறந்திருக்கிறீர்களா? இல்லை, சரி, இறந்த மனிதனையாவது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் இறந்த உடலைப் பார்த்திருக்கலாம். ஆனால் இறந்த மனிதனைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை. நீங்கள் இறந்த மனிதனைப் பார்த்ததில்லை. உங்கள் அனுபவத்திலும் அது இல்லை. நீங்கள் பார்க்கவும் இல்லை. அல்லது இறந்த ஒரு மனிதன் எழுந்து வந்து, ‘நான் இப்படி இறந்தேன். அப்படி இறந்தேன்’ என்று சொன்னதும் இல்லை. நீங்களும் இறக்கவில்லை, இறந்த மனிதனையும் பார்த்ததில்லை. எனவே இறக்கப் போகிறீர்கள் என்னும் கருத்தை எப்படி உருவாக்கிக் கொண்டீர்கள்? இறப்பு என்பது ஒரு கட்டுக்கதை. ஏராளமானவர்கள் இதைப்பற்றி பேசி உங்களை நம்ப வைத்து விட்டார்கள். இறப்பு என்று எதுவும் கிடையாது. உயிர், உயிர், உயிர் மட்டுமே இருக்கிறது. ஒரு பரிமாணத்திலிருந்து இன்னொரு பரிமாணத்திற்கும், இன்னொரு பரிமாணத்திலிருந்து மற்றோர் பரிமாணத்திற்கும் நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, உடல் மிகவும் தளர்ந்து விட்டாலும் அல்லது ஏதாவது காரணத்தால் முறிந்துவிட்டாலும், அல்லது விபத்தில் சிக்கிக்கொண்டாலும், அல்லது குடித்துவிட்டு உங்கள் கல்லீரலை அழித்துக் கொண்டாலும், அல்லது காதல் தோல்வியால் இதயம் முறிந்து போனாலும் அல்லது மிகவும் வயதாகிவிட்டதால் உடல் தளர்ந்துவிட்டாலும் உயிரை தக்கவைத்துக் கொள்ள இந்த உடலால் முடியாது போனால், உயிர் வேறு ஒரு பரிமாணத்திற்கு நகர்ந்தாக வேண்டும். அதனால்தான் இன்னொரு பரிமாணத்திற்கு உயிர் நகர்ந்து போகிறது. உயிருக்கு என்ன நடக்கிறது? எனவே யாராவது இறந்துவிட்டால் அவர் இனி நம்முடன் இல்லை என்றுதான் நீங்கள் சொல்கிறீர்கள். அவர் இனி இல்லவே இல்லை, உண்மையாகவே அவர் இனி இல்லை என்று நீங்கள் சொல்லவில்லை. அவர், இனி உங்களுடன் நீங்கள் அவரை தெரிந்திருக்கும் விதமாக இருக்கப் போவதில்லை. ஒருவருடைய உடல் ஏதோ ஒரு காரணத்தால் மேற்கொண்டு வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகும்போது, அவர் அந்த உடலைவிட்டுப் போக நேரிடுகிறது. இது நடக்கும்போது அந்த உயிருக்கு என்ன நேரிடுகிறது? பொருள்தன்மையிலான உடலும், விழிப்புணர்வான மனமும் போய்விடுகிறது. மனதின் பகுத்துப்பார்க்கக்கூடிய அம்சம் போய்விடுகிறது. ஆனால் மனதின் தன்மை போகவில்லை. அதாவது அவர் இன்னமும் மனதின் தன்மைகளைக் கொண்டிருக்கிறார், ஆனால் பகுத்துப்பார்க்க முடியாது. உங்கள் தந்தை அல்லது உங்கள் தாயார், உங்கள் கணவன், மனைவி, குழந்தை, இனிய நண்பர் இப்படி யார் இறந்தாலும், அவர் உடலை விட்டு நீங்கிய வினாடியே அவருக்கும் உங்களுக்குமான தொடர்பு முடிந்துவிட்டது. ஏனெனில் அவர் உங்களைப்பற்றி அறிந்திருப்பதெல்லாம் பொருள்தன்மையிலானது, இல்லையா? பொருள்தன்மை என்னும்போது உடல்மட்டுமல்ல, மனம், உணர்ச்சி ஆகியவையும்தான். அவரைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பதும், உங்களைப் பற்றி அவர் அறிந்திருப்பதும், பொருள்தன்மையிலான உடல் அல்லது மனம் அல்லது உணர்ச்சி குறித்துத்தான். அவை பொருள்தன்மைக்குள் வருவதுதான். எனவே அவர் பொருள்தன்மையை விட்டுப் போகும்போது அனைத்தும் நீங்கிவிடுகிறது. அப்போது, நான், எனது இறந்த அப்பா என்றெல்லாம் கிடையாது. அவர் இறந்துவிட்டால், அவர் உங்கள் அப்பா கிடையாது. அவரின் கதை முடிந்துவிட்டது. இறக்கும் தருவாயில்… எனவே மனதின் பகுத்துப் பார்க்கும் தன்மை போனவுடன், அவர் தனது இயல்பின் படியே செயல்படுவார். அதனால்தான் இந்தியாவில், ஒரு மனிதர் எந்த சூழ்நிலையில் இறக்கிறார் என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது, எந்த சூழ்நிலையில் அவர் இறக்கவேண்டும் என்பதை நிர்ணயித்து அந்த சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. அவர் எப்படி வாழ்ந்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அவர் இறக்கும் தருணம் வந்தவுடன், ‘ராம், ராம்‘ என்றோ அல்லது வேறெதாவது உச்சரித்தோ மக்கள் தாங்கள் விரும்பும்வண்ணம் அந்த சூழ்நிலையை உருவாக்குகின்றனர். அடிப்படையாக அப்படிச் செய்வதன் பொருள் என்னவென்றால் அவர் இறக்கும்போது பயத்திலோ, பேராசையிலோ, அல்லது இப்படிப்பட்ட காரணங்களாலோ இறக்கக்கூடாது என்பதுதான். ஏனெனில் அவர் இறக்கும் அந்தக் கடைசி தருணத்தில் அவர் மனம் எப்படி இருக்கிறதோ அதுதான் அவருடைய இயல்பாக அவர் இறந்தபின் செயல்படும். விழிப்பிலிருந்து தூக்கத்திற்கு… இன்றிரவு நீங்கள் தூங்கும்போது இதை முயற்சித்துப் பார்க்கலாம். நீங்கள் விழிப்பிலிருந்து தூக்கத்திற்குச் செல்லும் அந்த கடைசி வினாடியை வெறுமனே விழிப்புணர்வுடன் இருந்து பாருங்கள். முடிந்தால் அப்படி முயற்சித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் விழித்திருப்பீர்கள், உங்கள் விழிப்புணர்வை நழுவவிடும்போதுதான் தூக்கத்திற்குப் போவீர்கள். விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தால் சில அற்புதங்கள் நடக்கும். அப்படி முடியவில்லையென்றால் தூக்கத்தில் விழும்முன், அந்த கடைசி வினாடிகளில் ஒரு தன்மையுடனாவது இருக்க முயற்சியுங்கள். அந்த நேரங்களில் உங்களுக்குள் அன்பாக இருக்க முடிந்தால், அல்லது மகிழ்ச்சியாக இருக்க முடிந்தால், அதே தன்மை தூக்கத்திலும் தொடர்வதைக் காணமுடியும். விழிப்பிலிருந்து தூக்கத்திற்குச் செல்லும் அந்த கடைசி வினாடிகளில் என்ன தன்மை கொண்டு வருகிறீர்களோ, அந்த குணம் தொடர்ந்து இருக்கும். இதேதான் இறப்பிலும் நடக்கிறது. மரணத்தின் இறுதி தருணங்களில் ஒரு குறிப்பிட்ட குணத்தைக் கொண்டிருந்தால், பிறகு அந்த தன்மை தொடர்ந்து இருக்கும். காசியில் போய் இறப்பது ஏன்? இந்த நம்பிக்கை இருப்பதால்தான், மக்கள் இறக்க விரும்பும்போது மும்பையில் இறக்க விரும்பாமல், காசிக்குச் சென்று இறக்க விரும்புகிறார்கள். இன்னமும் மக்கள் அங்கே செல்கிறார்கள். நிறைய ஞானோதயமடைந்த மனிதர்கள் அங்கிருப்பதால், பல நூற்றாண்டுகளாகவே இலட்சக்கணக்கான மக்கள் அங்கு வந்து காத்திருந்து இறக்கிறார்கள். இறந்துபோவதற்கான மையமாக காசி இருந்துவந்தது. எனவே அங்கு சென்று இறந்தால் தாங்கள் மோட்சம் அடைவதற்கான உதவி கிடைக்கும் என நினைத்தார்கள். சரியான சூழ்நிலையில் இறக்கமுடியும் என நினைத்தார்கள். ஏதாவது காரணத்தால் இந்த உடல் உரிய காலத்திற்கும் முன்னதாகவே உடைந்து விட்டாலும் உயிர்சக்தி மட்டும் இன்னமும் அதிர்வுடன் இருக்கும். விபத்தில் சிக்கி இறந்தாலோ அல்லது அதிகக் குடியின் காரணமாக இறந்தாலோ அல்லது தற்கொலையின் காரணமாக இறந்தாலோ உடல் போய்விடும். ஆனால் உயிர்சக்தி தளர்ந்துவிடாது, அது இன்னமும் அதிர்வுடன் இருக்கும். எனவே அந்த உயிர்சக்தியானது அடுத்த பரிமாணத்திற்குச் செல்ல அதிக காலம் எடுத்துக் கொள்ளும். ஏனெனில் சக்தியானது அதிர்வுநிலையிலிருந்து தளர்வான நிலைக்கு வரவேண்டியுள்ளது. பிராரப்தா கர்மா ‘பிராரப்தா’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிராரப்தா என்பது ஒரு ஆயுள்காலத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட கர்மா. ஏனெனில் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து கர்மாக்களையும் ஒரு ஆயுள்காலத்திற்கே ஒதுக்கிவிட்டால் உங்களால் தாங்கமுடியாது, உங்களால் வாழமுடியாது. உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கர்மா குடோன் இருக்கிறது. அதை ‘சஞ்சிதா’ என்று குறிப்பிடுகிறோம். அந்த கர்மா குடோனிலிருந்து இந்த ஆயுளுக்காக மட்டும் என்று குறிப்பிட்ட அளவு கர்மா ஒதுக்கப்படுகிறது. ஏனெனில் குடோனிலுள்ள அவ்வளவு கர்மாவையும் உங்களால் கையாள முடியாது. எனவே இந்த ஆயுளில் கையாள்வதெற்கென்று குறிப்பிட்ட அளவு கர்மா ஒதுக்கப்படுகிறது. ஆனால் பொதுவாக, ஒரு பிறவிக்கென ஒதுக்கப்பட்ட கர்மாவைக் கழிப்பதை விடவும் அந்தப் பிறவியில் புதிதாக சேர்த்துக் கொள்வது அதிகமாக இருக்கிறது. இப்படி கர்மா சேர்ந்து, சேர்ந்து, சேர்ந்து கொண்டே போகிறது. இதன் காரணமாக உயிர்சக்தியில் ஒருவித அதிர்வு இருக்கிறது. அந்த அதிர்வு தளர்ந்து போகாவிட்டால் அந்த உயிருக்கு அடுத்த உடம்பு கிடைக்காது. நீங்கள் இந்த உடலை விடவேண்டுமானால் உங்கள் உயிர்சக்தி தளர்வடைய வேண்டும். இன்னொரு உடலைப் பெற வேண்டுமானால் உங்கள் உயிர்சக்தி தளர்வடைய வேண்டும். இதைத்தான் நாம் சமாதி நிலை எனக் குறிப்பிடுகிறோம். இந்த நிலையில் நீங்கள் விழிப்புணர்வுடன் உயிர்சக்தியின் தீவிரத்தை குறைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் உயிர்சக்தி மிகவும் தளர்வடைந்து போகும்போது, விரும்பினால் நீங்கள் இந்த உடலை விட்டுப் போய்விட முடியும், மேலும் இன்னொரு உடலில் நுழைய முடியும்.

நீங்கள் இறந்திருக்கிறீர்களா?

இறப்பு நல்லதோ, கெட்டதோ, நிகழத்தான் போகிறது. நீங்கள் பிறந்த விநாடியே உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. எங்கே, எப்போது நிகழும்… சத்குருவின் வார்த்தைகளில்… மரணம் குறித்த சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவியிருக்கிற விதத்தைப் பார்த்தால் விசித்திரமாக இருக்கிறது. நீங்கள் இதற்குமுன் இறந்திருக்கிறீர்களா? மரணம் குறித்த அனுபவம் உங்களுக்கு இல்லை. மரணமடைந்த யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்களுடைய உடல்களை வேண்டுமானால் பாத்திருப்பீர்கள். மரணமடைந்த யாரேனும் உங்களிடம் வந்து ‘என் மரண அனுபவம் இப்படி இருந்தது’ என்று சொல்லியிருக்கிறார்களா? அதுவும் இல்லை. மரணத்தை நீங்கள் அனுபவித்ததில்லை. அதை நீங்கள் பார்த்ததில்லை. அது குறித்த நேரடி அனுபவம் பெற்ற யாரும் விளக்கம் சொல்லிக் கேட்டதும் இல்லை, அப்படியானால் மரணம் குறித்த இந்த யோசனைகள் உங்களுக்கு எங்கிருந்து வந்தன? அறியாத சிலர் ஏற்படுத்திய மாயைதான் மரணம் என்பது. விழிப்புணர்வே இல்லாமல் வாழ்க்கையை வாழ்பவர்களின் உருவாக்கம் அது. வாழ்க்கை என்ற ஒன்று மட்டுமே நிகழ்கிறது. ஒரு பரிமாணத்திலிருந்து மற்றொரு பரிமாணம் நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. வாழ்க்கைக்கென்று எத்தனையோ பரிமாணங்கள் உண்டு. உடல் என்ற எல்லையைத் தாண்டிய பரிமாணத்துக்குள் வாழ்க்கை செல்கிறபோது அதனை மரணம் என்கிறீர்கள்! மரணம் நல்லதா? கெட்டதா? இந்தக் கேள்வியே அபத்தமானது. அது நல்லதோ, கெட்டதோ, நிகழத்தான் போகிறது. நீங்கள் பிறந்த விநாடியே உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. எங்கே, எப்போது நிகழும் என்பதுதான் கேள்வி. பிறந்ததும் ஒருவர் கல்வி கற்பாரா, கல்யாணம் செய்வாரா, ஆனந்தமாய் இருப்பாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. பிறந்தால் இறந்து போவார் என்பது மட்டும் உறுதி. மரணம் என்ற ஒன்று இருப்பதாலேயே வாழ்க்கை என்ற ஒன்றும் இருக்கிறது. மரணத்தில் எந்தத் தவறும் இல்லை. அது நிகழ்ந்தே தீரும். மரணம் என்ற ஒன்று இருப்பதாலேயே வாழ்க்கை என்ற ஒன்றும் இருக்கிறது. மரணமென்றால் என்னவென்று தெரியாததால்தான் அச்சம் ஏற்படுகிறது. வாழ்க்கை பற்றி என்னென்ன எண்ணங்கள் உங்களுக்கு இருந்தாலும் மரணம் வருகிறபோது அது காணாமல் போய்விடுகிறது. மனித மனத்தால் மாசுபடுத்த முடியாத ஒரே பகுதி அதுதான். அன்பு, உறவு, கடவுள், புனிதம், அனைத்தையும் மனிதர்கள் பலவிதமாக மாசுபடுத்தியும் திரித்தும் பேசிவருகிறார்கள். மரணம் குறித்துதான் அவர்களால் உறுதிபட எதையும் சொல்ல முடியவில்லை. ஒரு சிலர் அது குறித்தும் பேசுகிறார்கள். தாங்கள் சொர்க்கத்துக்குத்தான் போகப்போவதாக அடித்துச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரம் உறுதியாக இருப்பவர்கள் புறப்படலாம். எதற்காகக் காத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதைவிடவும் சிறந்த இடத்துக்குச் செல்வதென்று நிச்சயமாகத் தெரிந்தால், விரைந்து போகத் தோன்றும். எங்கே எப்படி போவதென்று தெரியாதபோது, ஆறுதலுக்காக இப்படிச் சில கற்பனைகளை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்! மரணம் குறித்த விழிப்புணர்வு இல்லாததாலேயே, அது பெரிய சிக்கலாக உங்களுக்குத் தோன்றுகிறது. உங்கள் உடல், இந்த பூமியின் ஒரு பகுதி. பூமியிலிருந்து தோன்றியது பூமிக்குள் மீண்டும் போகப் போகிறது. நீங்களும் நானும் இந்த பூமிக்கு வரும் முன்பு எண்ணிலடங்காத எத்தனையோ பேர் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த மண்ணின் மேற்பரப்பாக மாறிவிட்டார்கள். ஆழப் புதைத்துவைக்காத பட்சத்தில் நீங்களும் இந்த மண்ணின் மேற்பரப்பாக மாறிவிடுவீர்கள்! உடலைக்கொண்டு சில அற்புதங்களை நிகழ்த்தியிருந்தால், இதைத் திருப்பித் தருகிற நேரம் வரும்போது மகிழ்ச்சியடைவீர்கள். இல்லையென்றால் நடுநடுங்கிப் போவீர்கள். நான் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாக வைத்துக்கொள்வோம். அதனைப் பத்து கோடியாக நீங்கள் பெருக்கிவிட்டீர்கள். பத்தாண்டுகள் கழித்து நான் உங்களைத் தேடி வந்தால் என்னை மகிழ்வுடன் வரவேற்று, ஒரு கோடிக்கு இரண்டு கோடியாய் திருப்பித் தருவீர்கள். ஒருவேளை அந்த ஒரு கோடி ரூபாயை நீங்கள் வீணடித்திருந்தால் கடன்காரர் வரும்போது அஞ்சுவீர்கள். இந்த உடம்பும் அப்படித்தான். உலகத்திடம் நீங்கள் பெற்ற கடன் இது. இதைக் கொண்டு சில அற்புதங்களை, மிக முக்கியமானவற்றை நீங்கள் நிகழ்த்தியிருந்தால் இதைத் திருப்பித் தருகிற நேரம் வரும்போது மகிழ்ச்சியடைவீர்கள். இல்லையென்றால் நடுநடுங்கிப் போவீர்கள். நீங்கள் எப்படி மரணமடைகிறீர்கள் என்பதே, உங்களுக்குள் எப்படி வாழ்ந்திருக்கிறீர்கள் என்பதன் அடையாளம்தான். ஒரு மனிதனின் கடைசி விநாடி குறித்து பல ஆன்மீக மரபுகள் ஆழமாகப் பேசுகின்றன. அந்த விநாடியில் உங்களால் விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தால், அந்தத் தன்மையே காலங்கடந்தும் தொடர்கிறது. இன்றிரவு தூங்கச் செல்லும்போது, அன்புமயமான உள்நிலையை உருவாக்கிக் கொண்டு, புன்னகையுடன், விழிப்புணர்வுடன் தூங்கச் செல்லுங்கள். இரவு முழுவதும் அன்பு நிலை உங்களுக்குள் ததும்பி, காலை வேளையிலும் வெளிப்படுவதை உணர்வீர்கள்! இன்றிரவு படுக்கப் போகும்போது, விழிப்பு நிலையிலிருந்து உறக்கத்துக்குள் நீங்கள் ஆழ்கிற அந்தக் கடைசி விநாடியில் விழிப்புணர்வுடன் இருக்க முடிகிறதா என்று பாருங்கள். உங்களுக்கு அது சாத்தியமானால், நீங்கள் கற்பனை செய்துகூடப் பாராத பல அம்சங்கள் உங்கள் வாழ்வில் நிதர்சனமாய் நடப்பதை உணர்வீர்கள். விழிப்பு நிலையிலிருந்து உறக்கத்துக்குள் அமிழ்கிற விநாடியில் விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தால், வாழ்விலிருந்து மரணத்துக்குள்ளும் முழு விழிப்புணர்வுடன் நுழைய முடியும்!

உலகில் எது உயர்ந்த மதம்?

உலகின் மதங்களால் மக்களுக்கு பல நன்மைகள் நடந்திருந்தாலும், கொஞ்சம் ஆழமாக கவனித்துப் பார்த்தால், உலகில் நடந்த, நடக்கும் போர்கள், கலவரங்கள் போன்றவைக்குக் காரணம் மதங்கள்தான் என்பது புரியும்… இப்படி இருக்கையில், “உலகில் எது உயர்ந்த மதம்?” என்று ஒருவர் சத்குருவிடம் கேட்டபோது… சத்குரு: “உலகில் எந்த மதம் உயர்ந்தது?” என்று என்னிடம் கேட்டார்கள். உண்மையில், இப்போது மதங்கள் எங்கே இருக்கின்றன? மதங்களின் பெயரால் நடத்தப்படும் கட்சிகள்தானே இருக்கின்றன? மதம் என்ற பெயரால், ஒரு குறிப்பிட்ட கட்சியோடு உங்களை விலங்கிட்டுக் கொண்டு சுதந்திரத்தை அல்லவா இழக்கிறீர்கள்? ஒவ்வொரு மதமும் தனி மனிதன் தன்னை உணர, அவன் கவனத்தை உள்நோக்கித் திருப்புவதற்காக உருவானது. ஆனால், மனிதனை மேன்மையுறச் செய்வதைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் செய்வதுதானே இன்று மதக்கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது? தனித்துவிடப்படக்கூடாது என்று நீங்களும், அப்படியொரு கட்சியைச் சேர்ந்தவராகிவிடுகிறீர்கள். அது பிறப்பால் இருக்கலாம். அல்லது நீங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்ததால் இருக்கலாம். எப்படியானாலும், ஒரு பிரிவினரோடு உங்களை அடையாளப்படுத்திக் கொண்டதும், ‘உன் கட்சி பெரிதா, என் கட்சி பெரிதா?’ என்ற தகராறுக்கு நீங்களும் தயாராகிவிடுகிறீர்கள். உண்மையில், மதம் என்பது உலகுக்கு எந்தத் தீங்கையும் சொல்லித் தரவில்லை. எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபட்டு, உண்மையான சுதந்திரத்துடன் வாழ்க்கையை வாழ்வதற்கான வழிமுறைகளைத்தான் எல்லா மதங்களும் சொல்ல முற்படுகின்றன. ஆனால், அதற்கு நேர்மாறாக அல்லவா நடக்கிறது! மதம் என்ற பெயரால், ஒரு குறிப்பிட்ட கட்சியோடு உங்களை விலங்கிட்டுக் கொண்டு சுதந்திரத்தை அல்லவா இழக்கிறீர்கள்? சங்கரன்பிள்ளை சேர்ந்த மதம் சங்கரன்பிள்ளைக்கு ஆன்மீகப் பாதையில் போக ஆசை வந்தது. இருப்பதிலேயே எந்த மதம் உயர்ந்தது என்று கண்டுபிடித்து, அந்த குருவிடம் சீடராகச் சேர முடிவு செய்தார். நண்பர்களிடம் விசாரித்தார். ஒரு நண்பர், தன் மதகுருவிடம் அனுப்பினார். அங்கே போனதும், முதலில் தலைமுடியை மழித்துவிட்டு வரச் சொன்னார்கள். வலது காதில் வலிக்க வலிக்க ஓர் ஓட்டை போட்டு, பெரிய வளையம் ஒன்றை மாட்டினார்கள். ஆரஞ்சு நிற உடைகளை அணியச் சொன்னார்கள். அங்கே ஒரு மாதம் தங்கியிருந்தும், தனக்குள் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை என்பதை சங்கரன்பிள்ளை உணர்ந்தார். இடம் மாற விரும்பி, அடுத்த நண்பரிடம் போனார். அவர் சங்கரன்பிள்ளையைக் காட்டுக்குள் அழைத்துப் போய், அங்கே தன் மதகுருவிடம் விட்டார். “இங்கே பச்சைத் துணிகளை மட்டுமே அணிய வேண்டும். முடியை வெட்டவே கூடாது. எவ்வளவு நீண்ட தாடி வளர்கிறதோ, அவ்வளவு நல்லது. அப்புறம் ஆபரணங்களே கூடாது!” என்றார் அந்த மதகுரு. காதில் பழைய புண்ணே ஆறவில்லை. அங்கிருந்த வளையம் நீக்கப்பட்டது. அவர்கள் மத வழக்கப்படி, வேறு இடத்தில் சதையைக் கீறி எடுத்தார்கள். அங்கேயும் புண்ணானது. அந்த மதகுருவிடமும் ஒரு மாதத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மதங்களால் பிரச்சனை இல்லை. மதக்கட்சிகளை நடத்துபவர்களால்தான் அத்தனை பிரச்சனையும்! “மலை மேலே இருக்கும் ஆசிரமத்துக்குப் போ. அங்கே இருப்பவர்தான் சிறந்த குரு!” என்று அடுத்த நண்பர் சொன்னார். சங்கரன்பிள்ளை அந்தப் புதிய மதகுருவைக் காண, கால் வலிக்க மலை ஏறினார். ஆசிரமத்தை அடைந்தார். அங்கே சீடர்கள் மொட்டை அடித்திருந்தார்கள். தாடி மட்டும் வளர்த்து, இரண்டு காதுகளிலும் வளையங்கள் மாட்டி மூக்கிலும் துளையிட்டிருந்தார்கள். சங்கரன்பிள்ளை மயங்கி விழுந்தார். மதங்கள் மாறினால், ஒவ்வொரு மதகுருவும் உங்கள் உடம்பில் ஒரு துளையிட்டு விட்டுப் போவதுதான் நிகழும். வேறெந்த உயர்வும் கிடைக்காது. மதங்களால் பிரச்சனை இல்லை. மதக்கட்சிகளை நடத்துபவர்களால்தான் அத்தனை பிரச்சனையும்! அரசியல் கட்சி நடத்துபவர்களுக்குத்தான் எத்தனை ஆட்கள் தங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியம். மதத்துக்கு எங்கே அந்த அவசியம் வந்தது? மதம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு, தன் அகங்காரத்தை நிலை நிறுத்திப் பார்க்கும் மனிதர்களுக்குத்தான் எண்ணிக்கைகள் அவசியமாகின்றன. உள்நோக்கித் தன்னைக் கவனிக்காமல், வெளியே எத்தனை எண்ணிக்கை கிடைத்தது என்று எப்போது கவனம் போகிறதோ, அப்போதே அந்த மதம் செத்துப் போகிறது. உங்கள் கடவுள் மேன்மையானவர் என்பதை உலகுக்கு நிரூபிக்க, உங்களை நீங்களே ஏன் நியமித்துக் கொள்கிறீர்கள்? உங்கள் கடவுளுக்கு அதிக சக்தி இருக்கிறது என்று நீங்கள் மனதார நம்பவில்லையா? உங்கள் பலத்தையும், வற்புறுத்தலையும், வன்முறையையும் சார்ந்துதான் அவருடைய புகழ் பரவும் என்றால், அவர் உங்களைவிடப் பலவீனமானவராக, உங்களை விடத் தாழ்ந்தவராக அல்லவா ஆகிவிடுகிறார்? உங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள, அவரை ஏன் உங்கள் கட்சி வேட்பாளராக முன்னிறுத்தப் பார்க்கிறீர்கள்? நீங்கள் கடவுள் பெயரில் நடத்தும் ரசிகர் மன்றங்களுக்கு அவர் துணை இருப்பார் என்று எதிர்பார்ப்பது கேவலம் இல்லையா? ஆன்மீகம் உன்னதமானது. மனிதனை உய்விக்கப் பிறந்தது. தனக்குப் பின்னால் ஒரு கோடி ஆட்கள் இருந்தால் என்ன, ஒரு ஆள்கூட இல்லாவிட்டால் என்ன? உண்மையான ஆன்மீகத்தை நினைப்பவனுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. உண்மையில், உங்கள் மதத்தின் அடிப்படை நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அது, உங்களைத்தான் முதலில் கவனிக்கச் சொல்கிறது. உங்கள் மாற்றத்துக்கு வழி தேடாமல், மற்றவர்களை உங்கள் பக்கம் மாற்றுவதற்கு முயற்சி செய்வது, உங்கள் மதத்தின் குறிக்கோளையே அவமதிப்பதாகும்! ஒவ்வொரு தனிமனிதனும் மேன்மையானவனாக மாறினால் மட்டுமே ஒட்டுமொத்த உலகமும் மேன்மையடைய முடியும். அதனால், எந்தக் கட்சியிலும் சிக்கிக் கொள்ளாமல், உங்கள் மதம் மூலம் உண்மையை உணருங்கள். உயர்வடையலாம்!

இப்படியும் வாழ்ந்தான் கிருஷ்ணன்… உங்களுக்கு தெரியுமா?

கிருஷ்ணனை ஒரு பாலகனாக, லீலைகள் செய்பவனாக, கீதையை உபதேசித்தவனாகத்தான் நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால் அவன் ஒரு பிரம்மச்சாரியாக இருந்து கடைபிடித்த வாழ்க்கை என்பது முற்றிலும் வித்யாசமான ஒன்று. இதைப் பற்றி சத்குருவின் பார்வையில் இங்கே… சத்குரு: கிருஷ்ணனுக்கு பிரம்மச்சரிய தீட்சை… கிருஷ்ணன் தர்மத்தின் சக்கரவர்த்தியாக விளங்கினான். தர்மத்தை நிலை நாட்ட நாடு முழுவதையும் பல முறை சுற்றினான். ஆனால் அவனுக்கென்று சொந்தமாக ராஜ்ஜியம் எதுவும் இல்லை. அரசாளுவதற்குண்டான அத்தனை திறமைகளும், தகுதிகளும் இருந்த போதிலும் அவன் எந்த ராஜ்ஜியத்தையும் அரசாளவில்லை! கிரீடமும், மயிலிறகும், பட்டுப் பீதாம்பரமும் தரித்து எப்போதுமே நேர்த்தியாகக் காட்சியளிக்கும் அந்த உத்தமன், மான் தோல் பட்டையை இடுப்பில் சுற்றிக் கொண்டு, பிரம்மச்சரிய விரதத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான். கிருஷ்ணனுடைய பதினாறாவது வயதில் இவ்வாறெல்லாம் நிகழ்ந்தன. அப்போதே அவன் தன்னை ஓர் உன்னதமான தலைவனாக நிலை நிறுத்திக் கொண்டு விட்டான். இந்தச் சமயத்தில் குலகுருவான கர்காச்சாரியார் அவனைத் தேடி வந்தார். “கிருஷ்ணா! விதிக்கப்பட்டுள்ளபடி நீ உருவாவதற்கு உனக்குக் கல்வி தேவைப்படுகிறது. சில குறிப்பிட்ட ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு நீ நடக்கவேண்டும். ஆகவே குரு சாந்திபாணியிடம் மாணவனாகச் சேர்” என்றார். கிருஷ்ணன் சாந்திபாணியிடம் மாணவனாகச் சேர்ந்தான். கிருஷ்ணன் எங்கு சென்றாலும் அவனுக்கு ஓரடி பின்னாலேயே செல்லும் பலராமனும் அவனுடன் சென்றான். கிருஷ்ணனுக்கு அங்கே பிரம்மச்சரிய தீட்சை வழங்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அங்கு சில அரசகுமாரர்களும் இருந்தார்கள். அவர்களும், பலராமனும் கிருஷ்ணனிடம், “நீயோ முறையற்ற, விளையாட்டுத்தனமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறாய். நீ எவ்வாறு பிரம்மச்சாரியாக ஆக முடியும்?” என்று சிரித்தபடி கேட்டார்கள். அதற்கு கிருஷ்ணன் “நான் செய்தவை அனைத்தும் நான் செய்தவையே! மறுக்கவில்லை. ஆனால் ஒன்று! நான் எப்போதும் பிரம்மச்சாரியாகவே இருந்திருக்கிறேன். இப்போதும் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு அதை நான் முழுமையாகக் கடைப்பிடிக்கப் போவதை நீங்கள் காணத்தான் போகிறீர்கள்.” என்று கூறினான். குருகுல வாசம்… அதன்பின் கிருஷ்ணன் சாந்திபாணியின் சிஷ்யனாக ஆறு ஆண்டுகள் பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ்ந்தான். அவன் கல்வி பயின்றது ஒரு நாடோடி குருகுலத்தில். குருவின் ஆசிரமம் எப்போதும் ஒரே இடத்தில் நிலை பெற்றிராமல் புலம் பெயர்ந்து கொண்டேயிருந்தது. அங்கு பயின்ற மாணவர்கள் தங்களுடைய உணவை பிச்சை எடுத்துப் பெற்றுத்தான் உண்ண வேண்டும். குருகுலத்தில் வாசம் செய்த ஆறு வருட காலத்துக்கு கிருஷ்ணனும் மற்ற பிரம்மச்சாரிகளைப் போல் பிச்சை எடுத்தே உண்டான். இறங்கி, தனக்கு என்ன இடப்பட்டாலும் சரி என்ற நிர்மலமான மனதுடன், “பிச்சை போடுங்கள்..” என்று உரத்த குரலில் இரந்து கொண்டே சென்றான். பிச்சைப் பாத்திரத்தை ஏந்தியவர் தனக்கான உணவை ஒரு போதும் தீர்மானிக்க முடியாது. உணவின் தராதரத்தைப் பற்றியும் கவலைப்பட முடியாது. என்ன இடப்பட்டதோ அதுதான் உணவு! அது நல்லதோ, கெட்டதோ பிச்சை எடுப்பவர்கள் அதனை ஏற்று நன்றியுடன் உண்ண வேண்டும். இதுதான் பிரம்மச்சரிய விதி! ‘நான் ஒரு பிரம்மச்சாரி’ என்று எவனொருவன் அறிவிக்கிறானோ அவன் புனிதப்பாதையில் செல்வதாகப் பொருள். அவன் தனக்கு வழங்கப்பட்ட உணவில் போதுமான சத்து இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க இயலாது. பிரம்மச்சாரிக்கான சத்து வேறொன்றே அன்றி நிச்சயமாக உணவு இல்லை. அந்தச் சத்து வேறெங்கிருந்தோ அவனை வந்தடையும். நூறு சதவீதமும் உணவையே ஆதாரமாகக் கொண்டவர்கள் பிரம்மச்சாரியாக ஆகவே முடியாது. அதனால் கிருஷ்ணன் முழுமையான பிரம்மச்சாரியாக மாறினான்! கிரீடமும், மயிலிறகும், பட்டுப் பீதாம்பரமும் தரித்து எப்போதுமே நேர்த்தியாகக் காட்சியளிக்கும் அந்த உத்தமன், மான் தோல் பட்டையை இடுப்பில் சுற்றிக் கொண்டு, பிரம்மச்சரிய விரதத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான். நிலவுக்கென்று சுயமாக எந்த குணமும் கிடையாது. சூரியனின் ஒளியை உள்வாங்கிப் பிரதிபலிப்பது மட்டுமே அதன் செயல். ஆனால் அதனாலேயே அது எவ்வளவு அழகாக மாறிவிடுகிறது? இந்த உலகானது அதற்கு முன் அவ்வளவு அற்புதமானதொரு பிச்சைக்காரனைப் பார்த்ததில்லை. மயக்கும் அழகு, வசீகரமான நளினம், முழுமையான அர்ப்பணிப்பு, குவிந்த கவனம் ஆகியவற்றுடன் தனக்காகவும், குருவுக்காகவும், சக சன்னியாசிகளுக்காகவும் சிறிது உணவைச் சேகரிப்பதற்காக அவன் தெருவில் நடந்ததைக் கண்டு மக்கள் வியப்பின் உச்சத்துக்குப் போனார்கள். ‘பிச்சை இடுங்கள்’ என்று இரந்து நின்ற அந்தப் பொழுதில் அவன் நினைத்திருந்தால் ஒரு சக்கரவர்த்தியாகவே ஆகியிருக்கலாம். ஆனாலும் அவன் ஆறு ஆண்டு காலம் பிச்சை எடுத்தபடி தெருத்தெருவாக அலைந்தான். வாழ்க்கையை, ஒரு கொண்டாட்டமாகவும், ஆனந்த விளையாட்டாகவும் உணர்ந்து வளர்ந்த அற்புதமான பாலகர்கள் அனைவரும் பிரம்மச்சரிய விரதத்தை வெகு தீவிரமாகக் கடைப்பிடித்து பூர்த்தி செய்தார்கள். புலம் பெயர்ந்து கொண்டே இருந்த சாந்திபாணியின் ஆசிரமத்தில், ஆறு ஆண்டு காலம் கிருஷ்ணன் பிரம்மச்சரிய விரதம் பூண்டு கல்வி பயின்றான். கிருஷ்ணனின் உறவினனும், நண்பனுமான உதவனும், சகோதரன் பலராமனும், மற்றும் சில மாணாக்கர்களும் அப்போது அவனுடன் சேர்ந்து கல்வி பயின்றார்கள். உணவு துறப்பதா பிரம்மச்சரியம்? “இங்கே ஈஷாவில் இருக்கும் பிரம்மச்சாரிகள் எல்லாம் நாள் முழுவதும் கழுதை போல் உழைக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்குச் சரியாக உணவு கிடைப்பதில்லை.. பாவம்!” என்று ஒரு சிலர் என்னிடம் குறைப்பட்டுக் கொண்டார்கள். ஒரு பிரம்மச்சாரியானவன் தான் உண்ணும் உணவினால் மட்டுமே உயிர் தரித்திருக்கிறான் என்பது வெட்கக்கேடான விஷயம். உணவு வேண்டியதுதான். ஆனால் பிரம்மச்சாரியின் போஷாக்கு அவன் உண்ணும் உணவில் மட்டுமே இல்லை. ஒரு பிரம்மச்சாரி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உணவு உட்கொள்ளாது போனாலும், அவன் இருபத்து நான்கு மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். என்ன பணி ஆற்ற வேண்டுமோ அதனை ஆற்ற வேண்டும். அவ்வாறு இருப்பவன்தான் உண்மையிலேயே பிரம்மச்சாரியாக இருக்கிறான் என்று பொருள். கௌதம புத்தர் தனது சிஷ்யர்களிடம் ஒருமுறை இவ்வாறு சொன்னார். “நீங்கள் பசியுடன் இருக்கும் போது, உங்களது உடல் உணவுக்கு ஏங்கும் வேளையில், உங்களுக்கான உணவை வேறு யாருக்கேனும் ஈந்துவிட்டால் நீங்கள் மேலும் வலிமை பெற்று விளங்குவீர்கள். உடல்ரீதியாக மட்டுமல்லாது, ஆன்மரீதியாகவும் வலுவுள்ளவர்களாக மாறுவீர்கள்.” பல்வேறு பாரம்பரியங்கள், பல்வேறு நெறிமுறைகள் மனித வர்க்கம் உயர்நிலையை அடைவதற்கு பல்வேறு வழிகளை வகுத்து வைத்துள்ளன. பிரம்மச்சரியம் என்பது முற்றிலும் வேறொரு நெறிமுறை. வெறுமனே வயிறார உணவு உண்பதோ, நேர்த்தியாக உடுத்துவதோ பிரம்மச்சரியம் அல்ல. எந்தெந்த வழிகளில் இயலுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் உடலையும், மனதையும் இழப்பதே பிரம்மச்சரியம்! அனைத்தில் இருந்தும் நம்மை இழப்பதுதான் இப்போது நிகழ வேண்டிய ஒன்று. நீங்கள் மந்திரங்களை உச்சரித்தாலும், பஜனை செய்தாலும், நடனம் ஆடினாலும், உண்டாலும், பாடினாலும், எதைச் செய்தாலும் சரி, நீங்கள் உங்களை இழந்து அடிமையாக விளங்க வேண்டும். அதனால்தான் நீங்கள் பெண்மையுடன் துலங்க வேண்டும் என்று மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே இருக்கிறேன். பெண்மையின் இயல்பே அடிபணிவதுதான்! எது வரினும் முழுமையாகப் பெற்றுக் கொள்வது! மற்றவற்றோடு கலந்து தன்னை இழப்பது! தான் என்பதே இல்லாது ஒழிவது! நிலவுக்கென்று சுயமாக எந்த குணமும் கிடையாது. சூரியனின் ஒளியை உள்வாங்கிப் பிரதிபலிப்பது மட்டுமே அதன் செயல். ஆனால் அதனாலேயே அது எவ்வளவு அழகாக மாறிவிடுகிறது? நிலவு சுயமாக எதையாவது செய்திருந்தால் இவ்வளவு அழகு பொருந்தியதாக, அற்புதமான ஒன்றாக மாறியிருக்காது! சூரியனைக் காட்டிலும், நிலவுதான் பூமியில் நிறைய கவிதைகள் பிறக்கக் காரணமாய் இருந்திருக்கிறது. நிலவுக்கு சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதைத் தவிர வேறு எந்த குணமும் கிடையாது. நீங்கள் தெய்வீகத்தை அறிந்து கொள்ள வேண்டுமெனில் இது ஒன்றுதான் வழி! உங்களுக்கென்று தனிப்பட்ட எந்த குணமும் இருக்கக் கூடாது. வெறுமனே பிரதிபலியுங்கள். நீங்கள் பிரதிபலிப்பவராக மட்டுமே மாறினால் எதைப் பிரதிபலிப்பீர்கள்? எது முடிவற்றதோ, எது அழிவற்றதோ, எது என்றும் நிலையானதோ அதைத்தான் பிரதிபலிப்பீர்கள். லீலா என்பது நம்மையே அர்ப்பணிப்பது. லீலா என்பது நம்மையே இழப்பதற்கான ஒரு வாய்ப்பு!

சக்தியை வெளிப்படுத்தும் மந்திரங்கள்!

ஒரு பொருளையோ அல்லது ஒரு வெற்றிடத்தையோ பிரதிஷ்டை செய்வது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம்… ஆனால் ஒலிகளைப் பிரதிஷ்டை செய்வது என்பது நமக்குப் புதிதாய் இருக்கின்றது. என்றாலும் இது பலகாலமாய் நம் வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்கிறார் சத்குரு! மேலும் படிக்க… சத்குரு: இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒருவிதமான அதிர்வு. ஒலிகளும் அவ்வாறே. அவ்வகையில் பார்த்தால் ஒலியும் ஒருவிதமான பொருள் தான், ஆனால் அதன் பிரதிஷ்டை சற்றே வித்தியாசப்படும். உதாரணத்திற்கு நம் நாட்டின் எல்லா திசைகளிலும் பொதுவாக உபயோகப் படுத்தப்படும் மந்திரம் ‘ஷிவ’. இங்கு எல்லோருமே ‘சிவ, சிவ’ என்று சொல்கிறார்கள், ஆனால் இந்த மந்திரத்தைக் குறிப்பிட்ட ஒரு வகையில் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே, அதை உச்சரிக்கும் போது மிக ஆழமான நிலைகளை அடைகிறார்கள். சக்தியை வெளிப்படுத்தும் மந்திரங்கள் ஒருசில இடங்களில் இந்த மந்திரத்தை உச்சரித்தால், உச்சரிப்பது யாராக இருந்தாலும் சரி, திடீரென அந்த மந்திரம் முற்றிலும் வேறுவிதமான சக்தியை வெளிப்படுத்தும். இதன் மற்றொரு கோணத்தில், ஒருசில இடங்களில் இந்த மந்திரத்தை உச்சரித்தால், உச்சரிப்பது யாராக இருந்தாலும் சரி, திடீரென அந்த மந்திரம் முற்றிலும் வேறுவிதமான சக்தியை வெளிப்படுத்தும். இது போல் சில குறிப்பிட்ட ஒலிகள் மிக அதிகமாக சக்தி வெளிப்படுத்தும் விதத்தில் நம் கோவில்கள் ஒருகாலத்தில் உருவாக்கப்பட்டன. ஆனால் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் குறைந்துபோக, அத்துடன் தொடர்ந்து நடந்தேறிய படையெடுப்புகள் நம் கலாச்சாரத்தை குலைத்திட, இந்த விஞ்ஞானம் நலிவடைந்தது. இருந்தாலும், இன்றளவிலும் இந்த ஒலி மிக அதிகமாக சக்தி வெளிப்படுத்தும் பல இடங்கள் உள்ளன. இதற்குக் காரணம் அவ்விடங்கள் இந்த ஒலிக்கு மிக சாதகமான வகையிலே அமைக்கப்பட்டிருப்பதால், அவை இந்த ஒலியை பன்மடங்காக பெருகச் செய்கின்றன. நம் ஈஷா யோக மையம் மேற்கு மலைத்தொடர்ச்சியின் ஓர் முனையிலே அமைந்திருக்கிறது. இங்கு பனிமூட்டம் அதிகமாக இராவிட்டாலும், டிசம்பர் – ஜனவரி மாதங்களில் இப்பிரம்மாண்டமான மலைகளினூடே உள்ளே செல்லச்செல்ல மூடுபனி மிக அதிகமாகவே இருக்கும். இதை முதல்முறை நான் அனுபவித்தபோது, நான் அசந்து போய்விட்டேன். எனது மோட்டார் சைக்கிளில் மூடுபனி விளக்குகளை போட்டுக்கொண்டு சென்றாலும் கூட எட்டடி, பத்தடிக்கு மேல் ஒன்றும் தெரியாது. இதுபோல் பனிமூட்டம் மிக அதிகமாக இருந்த ஒருநாள், இரவு ஒருமணிக்கு நான் மலையின் அடிவாரத்திலே நின்றிருந்தேன். நிமிர்ந்து பார்த்தபோது, முழு மலையும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. மிக விரைவாக மோட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொள்ளும் என்பதால், அதை மெதுவாக, கவனமாக ஓட்டிக் கொண்டு, நிலைமை என்னவென்று பார்க்கச் சென்றேன். நான் மலையின் மீது செல்லச்செல்ல, அந்தத் தீயும் விலகிச்சென்று கொண்டே இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில், நான் மலை உச்சியை அடைந்துவிட்டேன். அங்கு ஒரு லாரி பழுதடைந்து நின்றிருந்தது. அந்த லாரியின் ஓட்டுனர் ஒரு பாட்டிலை எண்ணெய் விளக்காக மாற்றி, வெளிச்சத்திற்காக அதை ஏற்றி வைத்திருந்தார். இந்த தீபத்தின் ஒளிதான் நான் பார்த்த தீயின் உண்மையான முழுமையான வடிவம். ஆம்… பனிமூட்டம், ஆயிரமாயிரம் கண்ணாடிப் பட்டகமாய் அந்த சிறு ஒளியை பெருக்கிப் பிரதிபலிக்க, அந்த முழு மலையுமே தீப்பற்றி எறிவதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் அங்கே உருவாகி இருந்தது. இப்படியும் சாத்தியமோ என்று நான் பிரமித்துப் போனேன். ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்கினால், எதை வேண்டுமானாலும் பன்மடங்காகப் பெருக்கலாம். ஒரு வகையில் பார்த்தால், பிரதிஷ்டை என்பதும் கூட இது போல் ‘பன்மடங்காகப் பெருக்கும்’ ஒரு தொழில்நுட்பம் தான். அதில் வாழ்வைப் பன்மடங்காகப் பெருக்கிக் காட்டுகிறோம்… அப்போதேனும் அதை புறக்கணிக்க முடியாமல் நீங்கள் அதைக் கவனிப்பீர்கள் என்று!

Read more at : சக்தியை வெளிப்படுத்தும் மந்திரங்கள்! http://tamilblog.ishafoundation.org/sakthiyai-velippaduthum-manthirangal/

சிவன் நல்லவரா? கெட்டவரா?

பொதுவாக, உலகின் பல பகுதிகளில், மக்கள் ‘தெய்வீகம்’ என்று குறிப்பிடுபவை நற்குணங்கள் உடையவற்றைத்தான். ஆனால் ‘சிவ புராண’த்தை படித்தால், நீங்கள் சிவனை நல்லவர் எனவும் சொல்ல முடியாது, கெட்டவர் என்றும் சொல்ல முடியாது. சிவனை விட மோசமாக யாராலும் இருக்க முடியாது! ஏன் இப்படி என்பதை இக்கட்டுரையில் காண்போம். அதுமடுமல்லாமல் சிவன் ஏன் கைலாயத்தை தேர்ந்தெடுத்தார் என்பதையும் அறிந்துகொள்வோம்… சத்குரு: சிவன் எப்படிப்பட்டவன்? சிவன்… அவர் சுந்தரர், அழகற்றவரும் கூட. எல்லாவற்றையும் துறந்துவிட்ட மாபெரும் துறவி, சம்சாரியும் கூட. ஒழுக்கசீலர் ஆனால் மதுபானம், போதைப் பொருள் உட்கொள்பவரும் கூட. அவர் நர்த்தகர், ஆனால் அசைவின்றி ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவரும் கூட. தெய்வங்கள், பிசாசுகள் உட்பட பல வகையான உயிரினங்கள் அவரை வழிபடுகின்றன. அவரைப் பற்றி மிக மோசமான விஷயங்களும் சொல்லப் பட்டிருக்கின்றன. சிவன் ஒரு அகோரி – எல்லா பயங்கரத்தையும் கடந்தவர். சிவன் தன் மீது மனிதக் கழிவுகளை பூசிக் கொண்டதாகக் கூடச் சொல்லப்படுகிறது. ஒரு மனிதன் எதையெல்லாம் தாண்டி வர முடியுமோ அவை எல்லாவற்றையும் தாண்டி வந்தவர் அவர். நாகரிகக் கலாச்சாரம் என்ற பெயரில், சிவனை ஏற்றுக்கொள்ள தங்களுக்கு இடைஞ்சலான விஷயங்களை அப்புறப்படுத்த முயற்சி நடந்திருக்கிறது. ஆனால், சிவனின் சாரமும், சிறப்பும், இவர்கள் மறைக்க நினைக்கும் அக்குணங்கள் தானே! இப்படைப்பில் இருக்கக்கூடிய முரண்பாடான குணங்கள் எல்லாவற்றையுமே சிவன் ஒருவருக்கு கொடுத்திருப்பதன் காரணம், இவர் ஒருவரை நீங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், வாழ்வையும் நீங்கள் முழுவதாய் ஏற்றுக் கொண்டுவிடுவீர்கள். எது அழகு எது அசிங்கம், எது நல்லது எது கெட்டது என்று எப்பொழுதுமே பாகுபடுத்திக் கொண்டே இருப்பதுதான், நம் வாழ்வில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. நீங்கள் விரும்புவது, விரும்பாதது, என எல்லாக் குணங்களையும் ஒருசேரக் கொண்டுள்ள இந்தப் பயங்கரமான ஒரு மனிதரை நீங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டீர்கள் என்றால், வேறு எதனோடும் உங்களுக்குப் பிரச்சனை இருக்காது. “அகோரி”யான சிவன்… எதுவுமே அவருக்கு அருவருப்பை உண்டு செய்யாது. சிவன் ஒரு சவத்தின் மீது அமர்ந்து, சாதனாவில் ஈடுபட்டார் – ‘அகோரி’யாக. ‘கோரா’ என்றால் பயங்கரமானது. ‘அகோரி’ என்றால் பயங்கரத்தை கடந்தது/தாண்டியது. சிவன் ஒரு அகோரி – எல்லா பயங்கரத்தையும் கடந்தவர். பயங்கரங்கள் அவரிடத்தில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை, எதுவுமே அவருக்கு அருவருப்பை உண்டு செய்வதில்லை. அவர் எல்லாவற்றையுமே அரவணைப்பவர். மனதில் ததும்பும் கருணையினால் அல்ல, வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அவரும் அப்படியே! வாழ்க்கை என்பது இயல்பாகவே எல்லாவற்றையும் அரவணைப்பது தானே? உங்களால் யாரையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியும், யாரையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது, உங்கள் மனம் சார்ந்த பிரச்சனைதானே தவிர, அது வாழ்க்கைப் பிரச்சனை அல்ல. இவ்வளவு ஏன், உங்கள் எதிரி உங்கள் அருகிலேயே அமர்ந்திருந்து, அவர் வெளிவிடும் மூச்சுக்காற்றை நீங்கள் உள்ளிழுக்க நேர்ந்தால் உங்கள் உடலிற்கு பாதிப்பு வருமா என்ன? அப்படி ஒன்றும் இல்லை. நண்பனின் மூச்சுக்காற்று, உங்கள் எதிரியின் மூச்சுக்காற்றை விட எவ்விதத்திலும் உயர்ந்தது அல்ல. பிரச்சனை உங்கள் மனத்தில் மட்டுமே, படைப்பில் பிரச்சனை ஏதுமில்லை. உலகின் இப்பகுதியில் ஆன்மீகம் என்ற பெயரில் அன்போ, கருணையோ அல்லது அதுபோல் வேறு எதுவுமோ சொல்லித் தரப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவை எல்லாம் ஆன்மீகம் கூடக் கிடையாது, இவை சமூகத்தின் அடிக்கோடுகள், அவசியங்கள். அன்பாய் இருப்பது, காண்போரிடத்து குறுநகை பூப்பது போன்றவை குடும்ப, சமூக அத்தியாவசியங்கள். இதை எல்லாம் ஒரு மனிதனுக்கு கற்றுத்தரத் தேவையில்லை, குறைந்தபட்சம் அவ்வளவேனும் அவனுக்கு சுயஅறிவு இருக்கும் என்பது நம் கலாச்சாரத்தில் இருக்கும் பொதுப்படையான எதிர்பார்ப்பு. அதனால் இவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. சிவன் ஏன் கைலாயத்தை தேர்ந்தெடுத்தார்? யோக விஞ்ஞானம் உலகெங்கும் பரவுவதற்கு வழிவகுத்த சிவன், அதன்பின் சிறிது காலத்தில், தன் ஞானம் முழுவதையும் கைலாய மலையிலே பதித்தார். சப்தரிஷிகள் ஒவ்வொருவரும் ஞானத்தின் ஒவ்வொரு பரிமாணத்தையும் முழுமையாக கிரகித்துவிட்டதை உணர்ந்த ஆதியோகி, ஞானத்தின் ஏழு பரிமாணங்களையும் ஒருசேர கிரகிக்கக் கூடிய ஒரு மனிதன் கிடைக்காதபடியால், தான் அறிந்தவற்றை எல்லாம் கைலாய மலையில் பதித்து வைத்தார். அதன்பின், உலகின் மிகப்பெரிய ஆன்மீக நூலகமாக கைலாய மலைமாறியது. யோக விஞ்ஞானம் உலகெங்கும் பரவுவதற்கு வழிவகுத்த சிவன், அதன்பின் சிறிது காலத்தில், தன் ஞானம் முழுவதையும் கைலாய மலையிலே பதித்தார். ஒரு மனிதன் ஞானமடைந்து, அவரது கிரகிக்கும் திறன் சாதாரணமானவர்களுக்கு இருப்பதைவிட ஆழமாகும்போது, அவர் கிரகித்தது அனைத்தையும் எல்லா நேரங்களிலுமே சுற்றி இருப்பவர்களுக்கு அவரால் வழங்கிட முடியாது. மிகக் குறைந்த சிலவற்றை மட்டுமே அவரால் வழங்கிட முடியும். தன்னையே அவர் முழுமையாக வழங்கினாலும், அதையெல்லாம் கிரகித்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு திறமையான சிஷ்யர்கள் ஒரு ஆசானுக்கு அமைவது மிக மிக அரிது. அதனால், பொதுவாக இந்தியாவின் யோகிகளும் ஞானிகளும், மக்கள் பொழுதுபோக்க வந்துபோக முடியாத வகையில் அமைந்திருக்கும் மலை உச்சிகளைத் தேர்ந்தெடுத்து, அதில் தங்கள் ஞானத்தை சக்தி வடிவில் பதித்து வைத்தனர். அம்மலைகள் யாரும் அணுகமுடியாத வகையில் இருக்காது. ஆனால், அடைவதற்கு கட்டாயம் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு இடம்தான் கைலாய மலை. சிவனிற்குப் பின் பலர் தங்கள் ஞானத்தை கைலாயத்தில் பதிக்க ஆரம்பித்தனர். புத்தர்களின் வழியில் மூன்று முக்கியமானவர்கள், ஜைனர்களின் வழியில் முதலாவது தீர்த்தங்காரர் ரிஷப், தமிழ்நாட்டின் நாயன்மார்கள், என இன்னும் பற்பல ஞானிகள் கைலாயத்தில் தங்கள் ஞானத்தைப் பதித்தனர். தென்னிந்தியாவின் மாபெரும் அகஸ்திய முனிவரும், தன் ஞானத்தை கைலாயத்தின் தென்முகத்தில் பதித்துச் சென்றதால், இன்றும் கைலாயத்தின் தென்முகப்பில் அகஸ்தியர் வாழ்வதாக வழங்குவர். கைலாயத்தை அதன் முழுமையில் யாருமே உள்ளடக்கிக் கொள்ள முடியாது. அதிகமாக உள்வாங்கிக் கொள்ளலாம், ஆனால் எல்லாவற்றையும் உள்வாங்கிட முடியாது. அங்கிருக்கும் ஞானம் மிக மிக அதிகம். கைலாயத்தை, அதன் முழுமையில் கிரகிப்பதற்கு ஒரே வழி, அதனுடன் கரைந்து போவதுதான். இவ்வுலகில் நான் பற்பல சக்திவாய்ந்த கோவில்களுக்கும், புனிதத் தலங்களுக்கும் சென்றிருக்கிறேன். பற்பல உயர்ந்த உயிர்களையும் சந்தித்திருக்கிறேன். அவர்களை எல்லாம் நான் உண்மையிலேயே வணங்குவேன், ஆனால்…என் குருவை எப்படி வணங்குவேனோ அதைவிட சற்று குறைவாகத்தான் அவர்களை வணங்குவேன். அது கேதார்நாத்தாக இருந்தாலும் சரி, கௌதம புத்தராக இருந்தாலும் சரி, என் முன்னே வரும் வேறு யாராக இருந்தாலும் சரி. அதுதான் உண்மை. ஆனால், கைலாயத்தை வணங்கும்போது, என் குருவை எப்படி வணங்குவேனோ, அதேபோல் தான் வணங்குவேன். இதுபோல் என் வாழ்வில் எவரையும், எதையும் இப்படி பரிபூரணமாய் நான் வணங்கியது இல்லை. ஆனால், கைலாயத்தைப் பொறுத்தவரை, அவரை எப்படி வணங்குவேனோ அதைப் போலவே வணங்கினேன். உள்நிலையைப் பொறுத்தவரை உங்களுக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ, அவை அனைத்தும் கைலாயத்தில் உள்ளது. அதை எப்படி உள்வாங்குவது, அதை எப்படிப் புரிந்துகொள்வது என்பதை மட்டும் நீங்கள் அறிந்திருந்தால், உங்களைப் பற்றி, உங்கள் பிறப்பைப் பற்றி, உங்களின் வாழ்வைப் பற்றி, உங்கள் முக்தி பற்றி என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ, அவை எல்லாமே அங்கே இருக்கிறது. ஞானத்தின் எல்லா வகைகளையும் அங்கே நீங்கள் காணலாம். எல்லாக் கலாச்சாரமும் தங்கள் ஞானத்தை இங்கே பதித்திருக்கின்றன. அவை இன்றும் அங்கு நமக்குக் கிடைக்கப் பெறும் வகையில் இருக்கிறது. தங்களின் உள்வாங்கும் திறனை குறிப்பிட்ட அளவிற்கு உயர்த்துவதற்கு மட்டும் ஒருவர் முயற்சித்தால், அது எல்லாமே தெள்ளத் தெளிவாய் அங்கே இருக்கிறது. ஒரு ஆன்மீக சாதகருக்கு, கைலாயத்தை தொடுவது, இப்புவியின் மிக மிக அடிப்படையான மூலசக்தியையே தொடுவதுபோல். அத்தனைப் புனிதமானது, உயர்வானது அந்த அனுபவம். மறைஞானத்தை அறிந்திடும் ஆர்வம் உடையோர்க்கு, கைலாயமே அடைக்கலம். இதுபோல் வேறு இடம் கிடையாது.

கடவுளுக்கு யார் பெயர் சூட்டினார்கள்?

‘நமது கலாச்சாரத்தில் ஏன் முன்பெல்லாம் பெரும்பாலும் கடவுள் பெயர்களையே மனிதர்களுக்கு வைத்தார்கள்?’’ என்ற கேள்விக்கு சத்குரு சொன்ன பதில்… சத்குரு: ‘‘எந்த ஓர் ஒலிக்கும் அதற்கென்று ஒரு பயன் உண்டு. மந்திரங்கள்கூட அந்த அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டன. வெவ்வேறு மந்திரங்களை உச்சரிக்கும்போது, வெவ்வேறு பலன்கள் கிடைக்கின்றன. குறிப்பிட்ட பயன்கள் தேவைப்படுபவர்கள், குறிப்பிட்ட மந்திரங்களை உச்சரிக்கின்றனர். எந்த ஒலிகள் குறிப்பிட்ட பயன்களை நமக்குள் உண்டாக்குகிறதோ, அதையெல்லாம் நாம் கடவுளுக்குப் பெயர்களாகச் சூட்டிவிட்டோம். சில ஒலிகளை நாம் உச்சரிக்கும்போது மட்டும், அவை நமது உயிர்த்தன்மையில் குறிப்பிட்ட விளைவை உண்டாக்கும். எனவே, அந்த ஒலிகளையே கடவுள்களின் பெயர்களாக வைத்துக் கொண்டோம். நீங்கள் உங்களை ஒரு குறிப்பிட்ட நிலைக்குத் தயார்படுத்திக்கொண்டு, ‘ஷிவா’ என்னும் சாதாரண ஒலியை உச்சரித்தாலே, உங்களுக்குள் ஒரு புதிய பரிமாணத்தின் அனுபவம் வெடிக்கும். இது போல பல நூறு ஒலிகள், பல நூறு பரிமாணங்களை உங்களுக்குத் தருகின்றன. எனவே, அந்த ஒலிகளையெல்லாம் கடவுள்களுக்குப் பெயர்களாகச் சூட்டியதால், ஆயிரக்கணக்கான கடவுள்கள் நமது கலாச்சாரத்தில் இருக்கிறார்கள். அப்படியானால் ஆயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கிறார்களா? அப்படிக் கிடையாது. எந்த ஒலிகள் குறிப்பிட்ட பயன்களை நமக்குள் உண்டாக்குகிறதோ, அதையெல்லாம் நாம் கடவுளுக்குப் பெயர்களாகச் சூட்டிவிட்டோம். எனவே, கடவுளின் பெயர்களை நாம் உச்சரிக்கும்போதெல்லாம், அந்த ஒலிக்கு உண்டான பயன் நமக்குக் கிடைக்கிறது. கடவுளுக்கு வைத்தது போலவே, கடவுள் பெயர் என்று சொல்லி அதே பெயர்களையே உங்களுக்கும் வைத்தார்கள். எனவேதான் நமது கலாச்சாரத்தில் பெரும்பாலோரின் பெயர்கள் ராமா, ஷிவா, கிருஷ்ணா என்று ஏதோ ஒரு கடவுளின் பெயராகவே இருந்தது. எனவே, அந்தப் பெயர்களை அதற்கென்று நேரம் ஒதுக்கி உச்சாடனம் செய்யாமலேயே, அந்தப் பெயரால் குடும்பத்தினரும் மற்றவர்களும் உங்களை அழைக்கும்போது. அந்த உச்சரிப்புக்கான பலன் அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால், உங்கள் பெயரை நீங்கள் எப்போதும் உச்சரிப்பதில்லை. உங்கள் பெயரை உச்சரிப்பதால் கிடைக்கக்கூடிய பலன் உங்களுக்குக் கிடைப்பதில்லை. உங்கள் பெயரை மற்றவர்கள்தான் உச்சரிக்கிறார்கள். எனவே, அதற்கான பலன் அவர்களுக்குத்தான் கிடைக்கிறது. ஆனால், இப்போதெல்லாம் அப்படிப் பெயர் வைக்கும் நிலை மாறி வருவதால் உங்களை அழைப்பதால் கிடைக்கும் பலனை மற்றவர்கள் இழக்கிறார்கள். மேலும் எண் ஜோதிடம் என்ற பெயரில் உங்களில் சிலர் சரியான பெயரையும் உருக்குலைத்துக் கொள்கிறீர்கள். நாம் உருவாக்கிய எண்களே நம்மை நிர்ணயிக்க அனுமதிக்காதீர்கள் அன்பர்களே!’’

உண்மையில் நாம் பல பிறவிகள் எடுக்கிறோமா?

கேள்வி ‘இதுவே என் கடைசிப் பிறவியாக இருக்கவேண்டும் ஆண்டவா!’ என்ற வேண்டுதல்களை நாம் கேட்டிருப்போம். உண்மையில் நாம் பல பிறவிகள் எடுக்கிறோமா? இதற்கும் ‘கர்மா’விற்கும் என்ன சம்பந்தம்? சத்குரு: இது பெரும்பாலும் இந்தியர்களின் பிரச்சனை தான். அனுபவத்தில் உணராவிட்டாலும், அவர்கள் பேச்சுவழக்கில் ‘பிறவிகள்’ சர்வசாதாரணமாக வழங்கப்படுகிறது. இந்நிலையை மாற்றி, அதை அவர்கள் அனுபவத்திலும் கொணர முயன்று கொண்டிருக்கிறோம்… ஏனெனில், அவர்கள் மனதளவிலேனும் இதற்குத் தயாராக இருக்கிறார்கள். பிறவி பற்றி இப்போது நீங்கள் எதையும் நம்பவேண்டாம். இப்போது நீங்கள் நியுயார்க் நகரில் இருக்கிறீர்கள். மீண்டும் ஒருமுறை பிறந்தால், மறுபடியும் இங்கேயே பிறந்து, இதே தெருக்களில் நடக்க விரும்புவீர்களா? அல்லது அதைத் தாண்டி என்ன உள்ளது என்று அறிய விரும்புவீர்களா? முழுமையான வாழ்வை வாழ்ந்திருந்தால், நீங்கள் எல்லாவற்றையுமே பார்த்திருப்பீர்கள். மீண்டும் பார்ப்பதற்கு ஏதுமிருக்காது. முந்தைய அனுபவங்களுக்கும், இதற்கும் சிற்சிறு வேறுபாடுகள் இருக்கும் தான், ஆனால் அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான் என்று உங்களுக்குத் தெரிந்து விடும். அதனால், ‘அடுத்து என்ன?’ என்ற கேள்வி தான் உங்களுக்கு எழும். எளிமையாகச் சொல்வதனால், இப்போது நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். ஆனால் ஒரு நாள் இறந்துவிடுவீர்கள். ஆக, அடிப்படையில் உங்கள் உடல் என்பது, நீங்கள் சேகரித்த ஒன்று. இப்போது நீங்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தாலும், அமெரிக்க நாட்டில் உற்பத்தியான உணவை சில வருடங்களாக நீங்கள் உண்டிருந்தாலும், உங்கள் முக அமைப்பு, தோற்றத்தில் எவ்வித வித்தியாசமும் ஏற்படவில்லை. இவ்வளவு ஏன், இன்னும் 50 ஆண்டுகளுக்கு நான் அமெரிக்க நாட்டு உணவினை உண்டாலும், நான் இந்தியனாகவே தோற்றமளிப்பேன். அதில் வித்தியாசம் இருக்காது. ஏன்? ஏனெனில், இது மரபணு சம்பந்தப்பட்டது. இங்கிருக்கும் பொருட்களை எடுத்து ஒரு கட்டிடத்தைக் கட்டினால், அது ஒரு வகையில் தோற்றமளிக்கும். ஆனால் இங்கிருக்கும் பொருட்களை எடுத்து உடல்கள் உருவாக்க முயன்றால், உணவு உட்கொண்டவரைப் பொருத்து, தோற்றம் இந்தியனாகவோ, ஆஃபிரிக்கனாகவோ, அல்லது வேறு எவராகவோ தோன்றும். அமெரிக்க மண்ணில் விளையும் உணவினை உண்டால், உட்கொள்பவர்கள் மெதுவாக அமெரிக்கப் பழங்குடி மக்கள் போல் தோற்றம் கொள்ளவேண்டும். ஆனால் இங்கு நீங்கள் பல நூற்றாண்டுகள் வாழ்ந்தாலும், கலப்புத் திருமணம் செய்யவில்லை என்றால், உங்கள் வம்சத்தின் தோற்றம் எவ்விதத்திலும் மாறுபடாது. அடிப்படையில் அது உங்கள் தாய்நாட்டின் முக அமைப்பு, தோற்றமாகவே இருக்கும். இதை தர்க்க ரீதியாக அணுகிப் பார்ப்போம். ஒரே உணவை வெவ்வேறு மனித உடல்கள் உட்கொண்டாலும், அவர்கள் தோற்றத்தில் எவ்வித வித்தியாசமும் ஏற்படுவதில்லை. உணவு ஒன்று தான், ஆனால் தோற்றம் முன்பு எப்படி இருந்ததோ அதே வகையில் இருக்கிறது. ஏன்? காரணம், அவ்வுடல்களில் இருக்கும் ஞாபகக் கட்டமைப்பு. உணவும், மற்ற பிற ஆகாரங்களும் நியுயார்க் நகரில் இருந்து கிடைக்கப் பெறலாம். ஆனால் உங்கள் தோல், மூக்கு, கண், உடல் என எல்லாம் உங்கள் தாய்நாட்டை ஒத்து இருக்கிறது. நீங்கள் பிறப்பதற்கு முன்பே உங்களுக்குள் சில தகவல்கள் வைக்கப்பட்டுள்ளன. அது தான் உங்கள் தோற்றம், சிந்தனை, நீங்கள் நடக்கும் விதம் என எல்லாவற்றையுமே நிர்ணயிக்கிறது. அதற்காக, உடல் சம்பந்தப்பட்ட தகவல் மட்டும் தான் உங்களில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது என்று எண்ணிவிட வேண்டாம். மகப்பேறு மருத்துவமனையில் சென்று, பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளைப் பாருங்கள். ஒவ்வொன்றின் குணாதிசயமும் வித்தியாசப்படும். உங்களுக்குள் சேர்த்து வைக்கப்படும் தகவல் வெறும் உடற் சம்பந்தப்பட்டது அல்ல. அது அதையும் தாண்டி நீள்கிறது. பிறவி பற்றி இப்போது நீங்கள் எதையும் நம்பவேண்டாம். ஆனால் அமெரிக்க மண்ணை எடுத்து உங்கள் உடலை உருவாக்கினாலும், அதை வார்க்கும் தகவல் வேறெங்கோ (தாய்நாடு அமெரிக்காவாக இல்லாவிட்டால்) இருந்து நீங்கள் பெற்றது. அந்தத் தகவலின் பதிப்புத் திறன், நீங்கள் உட்கொள்ளும் உணவிற்கு இருப்பதை விட அதிகமாக இருப்பதால், அது தன்னைப் பதித்து உங்கள் உடலில் வெளிப்படுகிறது என்ற அளவிற்கு தெளிவாக இருக்கிறதா? ஒரே பெற்றோருக்கு பிறந்திருந்தாலும், பிறந்த அன்றிலிருந்தே குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமாகவே நடந்து கொள்கின்றனர். இந்த உடல் என்பது நீங்கள் உண்ட உணவின் சேர்க்கை. இந்த உணவு அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. அதாவது, ஒரு வகையில் நீங்கள் டென்னஸியின் மண்ணை உட்கொண்டிருக்கிறீர்கள். இப்பகுதியில் தான், முன்பு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ‘செரூக்கி’ (Cherokee) பழங்குடியினர் வாழ்ந்தனர். அவர்களின் தோற்றம் ஓர்வகையில் அமைந்தது. ஆப்பிரிக்க மாகாணத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தவர்கள் வேறு ஒருவகையில் தோற்றம் கொண்டார்கள். இதுபோல், உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்பவர்களின் தோற்றம் ஒருவருக்கொருவர் மிக வித்தியாசமாய் இருக்கும். இது… உலகின் பல்வேறு இடங்களுக்கும் மிக எளிதாக பயணம் மேற்கொண்டு, கலப்புத் திருமணங்கள் நடப்பதற்கு முன்பு இருந்த நிலை. நிலம், நீர், காற்று, அப்பகுதியின் தட்பவெப்பம், வானிலை ஆகியவை மனிதனின் தோற்றத்தை எந்த அளவிற்கு, எப்படி எல்லாம் மாற்றியது, மாற்றவல்லது என்பது மானுடவியலில் தெளிவாய் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்போது நான் இந்தியாவில் இருந்து டென்னஸிக்குக் குடிபெயர்ந்தாலும், எவ்வளவு தான் இம்மண்ணில் விளைந்த உணவை உண்டாலும், இப்பகுதியின் பழங்குடியினரை என் தோற்றம் பிரதிபலிக்காது. நான் சுமந்து கொண்டிருக்கும் தகவலின் வீரியம், நான் உட்கொள்ளும் உணவின் ஞாபகத்தைவிட வலியது. இப்படி நாம் உண்ணும் உணவையும் தன் வழியில் மாற்றியமைக்கும் இந்த ஞாபகங்கள் இந்த வாழ்க்கையில் நாம் சேர்த்ததல்ல. நம் பிறப்பிற்கும் முன்பே இவை இருந்தன. இதைத்தான் கர்மா என்றழைக்கிறோம். இது மிகமிக அதிகமான தகவல் கிடங்கு. இப்போது நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் இந்தத் தகவல்கள் உங்கள் உடல் சார்ந்தது மட்டுமல்ல. இதற்கு மற்ற பரிமாணங்களும் உண்டு. உடலைப் பொருத்தவரை, இது மிக வெளிப்படையாகத் தென்படுகிறது. உங்கள் தோல், உங்கள் மூக்கு என இன்னும் பலவற்றில் இது வெளிப்படுகிறது. மற்ற நிலைகளில் இதன் தாக்கம் இவ்வளவு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அவற்றிலும் இது செயல்படுகிறது. இப்போது தான் பிறந்த குழந்தையாக இருந்தாலும், ஒரு குழந்தையும் இன்னொரு குழந்தையும் வெவ்வேறு தகவல்களை சுமப்பதால், அவற்றின் குணாதிசயங்களும் வித்தியாசப்படுகின்றன. ஒன்றிற்கு மேல் பெற்ற தாய்மார்களுக்கு இது நிச்சயம் தெரியும். தன் பிள்ளைகள் ஒரே மரபணுக்களை சுமந்தாலும், அவர்கள் முற்றிலும் வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்று. ஒரே பெற்றோருக்கு பிறந்திருந்தாலும், பிறந்த அன்றிலிருந்தே குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமாகவே நடந்து கொள்கின்றனர். மரபணு மூலம் நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் தகவல்களைத் தாண்டி, வேறு விதமான தகவல்களையும் அவர்கள் சுமக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. மரபணுத் தகவல்கள் உடலாக வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள் சுமக்கும் மற்றொரு தகவல் கிடங்கு, இதைவிட மிகப் பெரிது. அதை உணர வேண்டுமென்றாலே, கூர்மையான கவனம் வேண்டும். அதற்கும் மேலாக, அது என்ன, அது எப்படி சேகரிக்கப் பட்டுள்ளது, அதை வைத்து என்னென்ன செய்யலாம் என்பதெல்லாம் புரிந்து கொள்ளவேண்டும் என்றாலோ, அது முற்றிலும் வேறு விதமான விஷயம். ஆன்மீக செயல்முறைகள் இத்தகவலைப் பற்றி அறிந்திட வழிசெய்கின்றன. இத்தகவற் கிடங்கு இத்தனை வலியது என்றால், அதை கவனிப்பது நல்லதல்லவா! இது எத்தனை வலியது என்றால், நீங்கள் வாழும் சூழ்நிலையை அது ஆள வல்லது. உங்கள் நோக்கம் எதுவாகினும் அதை அமிழ்த்திவிட்டு, தனக்குத் தேவையானதை செய்துகொள்ளக் கூடியது. இப்போது இங்கே உட்கார்ந்து, நீங்கள் தியானம் செய்ய விழைகிறீர்கள். ஆனால் அதுவோ, தனக்குத் தேவையானதை நிகழ்த்திக் கொள்கிறது. உண்மை தானே? இத்தகவல்களின் வீரியத்தைக் குறைக்க நீங்கள் வழி செய்யாவிட்டால், இத்தகவல்களை விலக்கி வைக்க நீங்கள் முயற்சி எடுக்காவிட்டால், உங்களில் மாற்றம் செய்துகொள்வதும், வளர்வதும், மலர்வதும் வெறும் வார்த்தைகள் தான். அது நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை, காரணம் அத்தகவல்கள் இந்த எண்ணத்தை அமிழ்த்தி, வீழ்த்திவிடும். அத்தகவல்களில் இருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாவிட்டால், நீங்கள் செய்ததையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்குமாறு, அது உங்களைக் கட்டுப்படுத்தும். இத்தகவற் கிடங்கில் இருந்து உங்களை மெதுமெதுவாக விலக்கிக் கொள்வதற்கு, ஒரு ஏதுவான உடலை, மனதை, உணர்வு மண்டலத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறை தான் யோக விஞ்ஞானம்!

மறுபிறவி எடுக்க எத்தனை நாளாகும்?

இறந்தபின் என்ன நடக்கிறது; மறுபிறவி உண்டா? இது போன்ற கேள்விகள் எப்போதும் டாப் 10 சுவாரஸ்யக் கேள்விகளாக உள்ளது. பாலிவுட் இயக்குனர் திரு. சேகர் கபூர் அதுபோன்ற கேள்விகளை முன் வைக்க, நமக்கும் அந்த சுவாரஸ்யம் தொற்றிக்கொள்கிறது. சேகர் கபூரின் கேள்விகளுக்கு சத்குரு கூறும் பதில் இங்கே! சத்குரு: இந்த பரு உடல் விழுந்தாலும் சூட்சும உடல் தொடர்ந்து இருக்கும். அதனுள் சில பதிவுகள் அப்போதும் இருக்கும். ஆனால் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், உங்களுக்கு பருஉடல் இருந்தபோது, உங்களுக்கு பிரித்துப் பார்க்கும் திறமை இருந்தது. ஆனால், இந்த உடல் விழுந்த உடன் பிரித்துப் பார்க்கும் தன்மையும் போய்விடும். சில உந்துதல்கள் மட்டும் இருக்கும். அந்த உந்துதல்களால் மட்டுமே இனி செயல்படுவீர்கள். ஒவ்வொரு கலாச்சாரத்திலும், குறிப்பாக இந்தியக் கலாச்சாரத்தில், ஒருவர் இறக்கும் தருணத்தில், அவர் உங்கள் எதிரியாக இருந்தாலும், நீங்கள் “ராம், ராம்…” என்று கடவுளின் பெயரை உச்சரிப்பீர்கள் அல்லது அவருக்கு சரியான சூழ்நிலையை உருவாக்க முயற்சிப்பீர்கள். இறப்பவரைச் சுற்றி ஒரு இனிமையான சூழ்நிலை உருவாக்க சில எளிமையான வழிகள், இந்தக் கலாச்சாரத்தில், உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சொர்க்கமும் நரகமும் பூகோள ரீதியிலான இடங்கள் அல்ல. அது ஒருவர் அடையும் நிலை மட்டுமே. ஏனென்றால் உயிர் பிரியும் தருணத்தில், அவர் பயமான தன்மையில் இருப்பதாகக் கொள்வோம். உயிர் நீங்கியவுடன் பகுத்துப் பார்க்கும் தன்மையையும் இழந்து விடுவதால், அந்த பயத்தின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இருப்பதில்லை. எனவே அந்த பயம் இலட்சம் மடங்காக பெருகிக் கொண்டிருக்கும். உயிருடன் இருக்கும்போது கூட, பல சமயங்களில் உங்களுக்கு பயம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம், பிரித்துப் பார்க்கும் மனத்தின் உதவியால், அந்த பயத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தீர்கள். சேகர்: ஓ, சரி சத்குரு: அதேபோல் இறக்கும் தருவாயில், உங்களுக்கு இனிப்பான தன்மையை உருவாக்கினால், அந்த இனிப்பான தன்மையும் இலட்சம் மடங்கு அதிகரிக்கும். ஒரு குழந்தை சாக்லேட் சாப்பிடுகிறது. மிகவும் இனிப்பாக இருக்கிறது. குழந்தைக்கு பிரித்துப் பார்க்கும் மனம் தற்போது உறுதியான தன்மையில் இல்லை. “சரி, நான் இன்று இரண்டு சாக்லேட்கள் சாப்பிட்டு விட்டேன். இன்று இது போதும்.” என்று நினைப்பதில்லை. குழந்தை 2000 சாக்லேட்களை சாப்பிட விரும்புகிறது. எனவே பிரித்துப் பார்க்கும் மனம் இல்லையென்றால் இனிப்போ அல்லது கசப்போ, இனிப்பான தன்மையோ அல்லது இனிப்பற்ற தன்மையோ பல மடங்குகளாக அதிகரிக்கும். இனிமையற்ற தன்மை பெரிதாகும்போது, அவர் நரகத்தில் இருக்கிறார் என்றும், இனிமையான தன்மை அதிகமாகும்போது அவர் சொர்க்கத்தில் இருக்கிறார் என்றும், நாம் சொல்வோம். எனவே, சொர்க்கமும் நரகமும் பூகோள ரீதியிலான இடங்கள் அல்ல. அது ஒருவர் அடையும் நிலை மட்டுமே. சேகர்: பின்னர் மறுபிறப்பு ஏற்படுகிறது. சத்குரு: ஓ, நீங்கள் திரும்பியும் பூமிக்கு வர விரும்புகிறீர்கள். (சிரிக்கிறார்) சேகர்: நிச்சயமாக. சத்குரு: உங்கள் சக்திநிலையில் உங்களுக்கான பதிவுகள் எப்போதும் பதிந்திருக்கும். அதைத்தான் கர்மா என்று சொல்கிறோம். நீங்கள் இறக்கும்போது, உங்கள் சக்திநிலையில் எந்த அளவிற்கு கர்மப்பதிவுகள் எஞ்சியிருக்கிறதோ அதைப் பொறுத்து அந்த சக்திநிலை வலிமையுடன் இருக்கும். நீங்கள் வயதாகி இறக்கிறீர்கள் என்றால், இந்தப் பிறவிக்கான உங்கள் கர்மப் பதிவுகள் அனேகமாகத் தீர்ந்திருக்கும். எனவே உங்கள் சக்திநிலை மிகவும் வலிமை குன்றியிருக்கும். இந்த சக்திநிலை எந்த செயலும் இல்லாமல் அப்போது, சிறிது காலம் ஓய்வெடுக்கும். உடலும் பகுத்தறியும் மனமும் இருக்கும்போது உங்கள் கர்மாவை கரைக்க 10 வருடங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் உடலும் பகுத்தறியும் மனமும் இல்லாத நிலையில் அதே கர்மாவை கரைக்க 1000 வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் விபத்து, தற்கொலை போன்ற காரணங்களால் ஒருவர் வயதாகு முன்னரே இறக்கும்போது, பதிவுகள் இன்னமும் போதுமான அளவு தீர்ந்திருக்காது. எனவே அந்த உயிரின் சக்தி இன்னமும் வலிமையுடன் இருக்கும். இந்த சக்திநிலை வலிமை இழப்பதற்கு மிக நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். ஏனெனில் உடலும் பகுத்தறியும் மனமும் இப்போது இல்லை. உடலும் பகுத்தறியும் மனமும் இருக்கும்போது உங்கள் கர்மாவை கரைக்க 10 வருடங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் உடலும் பகுத்தறியும் மனமும் இல்லாத நிலையில் அதே கர்மாவை கரைக்க 1000 வருடங்கள் கூட ஆகலாம். எனவேதான், விபத்து, கொலை, தற்கொலை போன்றவை மோசமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. பகுத்தறியும் மனம் இல்லாத நிலையில் அந்த உயிரின் சக்திநிலை வலிமை குன்றாமல் இருக்கும். எனவே அந்த சக்தி மிக நீண்ட காலம் அலையும். ஒருவித அதிதீவிரத்துடன் இருப்பதால் இப்போது அந்த சக்தி வேறு ஒரு கருவிலும் புகமுடியாது. முதுமையடைந்த நிலையில் ஒருவர் படுக்கச் சென்றார். அவர் உடலில் எல்லாமே சரியாக இருந்தது. கண் விழிக்காமல் படுக்கையிலேயே இறந்துவிட்டார். அப்போது அந்த உயிருக்கான பதிவுகள் கரைக்கப்பட்டு அந்த உயிரின் சக்திநிலை ஏற்கனவே மிகவும் வலிமை குறைந்திருக்கும். அதுபோன்ற நிலையில் அவர் 48 மணி நேரத்தில் மற்றொரு கருவை அடைய வாய்ப்புள்ளது. ஆனால் ஒருவர் விபத்தின் மூலமோ அல்லது வேறொரு வழியிலோ உடலை சிதைத்ததன் மூலம் இறந்தால், இவர் மீண்டும் பிறக்க அதிகமான காலம் ஆகலாம். ஏனெனில் அந்த உயிரின் சக்திநிலை இன்னமும் தீவிரத்துடன் இருக்கிறது. இன்னமும் எவ்வளவு கர்மப் பதிவுகள் எஞ்சியிருக்கிறது என்பதைப் பொறுத்து அந்த தீவிரம் இருக்கும். இவற்றை சரியாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், மிகவும் விரிவாக பேசத் தேவையிருக்கிறது. இம்மாதிரி பேசிச் செல்வது சரியானதல்ல. அதனால்தான் இதைப்பற்றி பேசும்போது ஏதோ நகைச்சுவையாக பேசிவிட்டு சென்று விடுவோம். நாங்கள் இதைப்பற்றி எப்போதும் பேசுவதில்லை. ஏனென்றால் இது பலவிதமான கற்பனைகளுக்கும் இழுத்துச் சென்றுவிடும்.

மறு ஜென்மம் உண்மையா?

இந்து சமயத்தின் நம்பிக்கைகளில் முக்கியமானவை மறுஜென்மம் உண்டு என்பதாகும்.நமது கடவுளான மகாவிஷ்ணுவே பத்து அவதாரங்கள் எடுத்தவர்.சொர்க்கம்,நரகம் என்பது சமய நம்பிக்கை சார்ந்த விசயமாக உள்ளது.




நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம் ஆனால் அவர் நமக்கு கெடுதலே செய்கிறார்.அந்நிய நபரோ,நண்பரோ நமக்கு எதிர்பாராத உதவிகள் பலவற்றை செய்கிறார் இதன் சூட்சும ரகசியம் என்ன?”நம் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு நபர்களுக்கும்,நமக்கும் பிரபஞ்ச ரீதியான இணைப்புகள் உண்டு.அதாவது அவருடன் நான் ஏதோ ஒரு பிறவியில் சம்பந்தம் படாமல் நமக்கு அவரால் நன்மை,தீமைகள் கிடைக்காது.இதுதான் சூட்சுமத்தின் ரகசியம் ஆகும்.

ஜோதிட ரீதியாக பார்த்தால் ஒருவரின் முற்பிறவியை 5-ம் இடத்தை கொண்டு கணக்கிடலாம்.என்னிடம் ஒரு நபர் இரண்டு நாட்களுக்கு முன் ஜாதகம் பார்க்க வந்தார்.அவருடைய மகன் ஜாதகத்தை பார்த்து இவர் போன பிறவியில் உங்கள் அப்பாவாக பிறந்தவர் என்றேன்.அமைதியாக இருந்தவர் என்னிடம் சொல்லியது,எனக்கு 13 வயதிலேயே எங்கள் அப்பா இறந்துவிட்டார்.அவர் முகம் கூட ஞாபகம் இல்லை,இப்பொழுது எங்கள் அப்பாவின் போட்டோ கிடைத்தது.அதை பெரிது பண்னி பார்த்த போது அதிர்ந்துவிட்டேன் அப்படியே என் மகனை போலவே இருந்தார்.அதற்காக அவர் மீசையை வேறு மாதிரி ஆக்கி வீட்டில் வைத்து வணங்குகிறோம் என்றார்

எந்த ஒரு மனிதருக்கும்,கண்டிப்பாக முற்பிறவி ஞாபகம் வராது.இதற்கு உதாரணமாக மகாபரதத்தில்,அர்ஜுனர் தன் மகன் அபிமன்யூவை போரில் பறிகொடுத்து சோகத்துடன் இருக்கிறார்.இதை கவனித்த கிருஷ்ணர் பிறவி பயனின் சூட்சுமத்தை உணர்த்த,அர்ஜுனரை சொர்க்கத்துக்கு அழைத்துசெல்கிறார்.அங்கே அபிமன்யூ உல்லாசமாக ஊஞ்சலில் ஆடிகொண்டியிருக்கிறார்.இதை பார்த்த அர்ஜுனர் மகன் அருகி ஆவலோடு செல்கிறார் ஆனால் அபிமன்யூக்கு அர்ஜுனரை அடையாளம் தெரியவில்லை.

இந்த உலகத்தில் கடவுளால் படைக்கப்படும் உயிர்கள் தலைவருக்கு குழந்தையாகிறது,பணக்காரணுக்கு குழந்தையாகிறது ஏன் பிச்சைக்காரனுக்குகூட குழந்தையாகிறது.கடவுளின் படைப்பில் ஏன் இத்தனை வேறுபாடுகள்?நாம் முற்பிறவியில் செய்யும் புண்ணியங்களை பொறுத்தே இந்த பிறவி அமைகிறது இதைத்தான் கர்ம வினை என்கிறோம்.நாம் முற்பிறவியை பற்றி கவலைபடாமல் இந்த பிறவியில் நல்ல செயல்கள்,தர்மங்கள்,புண்ணிய காரியங்கள் செய்தால் இவை அனைத்தும் நாம் எத்தனை பிறவி எடுத்தாலும் கூடவே வரும் என்பது உண்மையாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

முன் ஜென்மம், இந்த ஜென்ம பாலினத்தை நிர்ணயிக்குமா?

கேள்வி ஒருவர் மறுபிறவி எடுக்கும்போது அவர் ஏற்கனவே பிறந்த பாலினத்திலேயே மீண்டும் பிறப்பாரா? 
சத்குரு: 

அப்படியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னைச் சுற்றி இருப்பவர்களில் பலர் தாங்கள் முன் ஜென்மத்தில் இருந்த பாலினத்திலிருந்து இந்த ஜென்மத்தில் மாறிப் பிறந்திருக்கிறார்கள். எனக்கு நெருக்கமானவர்கள் பலருடன் எனக்கு இது சார்ந்த பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உங்கள் ஏக்கத்தைச் சார்ந்து, உங்கள் கர்ம வாசனைகளைச் சார்ந்து இயற்கை அதற்கு ஏதுவான உடலைத் தருகிறது. பாலினம் என்ன, முற்றிலும் வேறொரு உயிராக, மனிதனில்லாத பிறப்பாக உங்கள் பிறப்பு அமைய வாய்ப்பிருக்கிறது. இவை யாவும் நம்முடைய வாசனைகளைப் பொருத்து அமைகின்றன. இதுபோன்ற விஷயங்கள் பலருக்கும் நிகழ்ந்திருக்கின்றன, பல யோகிகளுக்கு நிகழ்ந்திருக்கின்றன, நிச்சயம் கௌதம புத்தருக்கும் நிகழ்ந்திருக்கிறது. அவருடன் இருந்த பல துறவிகள் தங்களது அடுத்த பிறப்பில் பெண்களாக மறுபிறப்பு எடுத்திருக்கின்றனர். கௌதம புத்தர் காலத்தில்… புத்தர் இருந்த காலங்களில் ஆண் துறவிகள், பெண் துறவிகளை விட அதிக எண்ணிக்கையில் இருந்தனர். இதற்கு கலாச்சாரமே முக்கிய காரணமாய் அமைந்திருந்தது. அந்த காலகட்டத்தில் ஒரு பெண் தன் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயது ஆகும் வரையில் துறவறம் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவியது. ஆனால் கௌதமரின் முன்னால் அமர்ந்த ஆண் துறவிகளோ, பெண் துறவிகள் ஆண் துறவிகளை விட கௌதமருடன் அதிகபட்சமான இணைவு ஏற்படுவதை கவனித்தனர். பெண்களுக்கு உணர்வுரீதியாக ஆழமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் இது சாத்தியமாயிற்று. ஆண் துறவிகள் சிரத்தையுடன் கடினமான தியானப் பயிற்சிகளை செய்து வர, இந்தப் பெண்களுக்கோ புத்தரைப் பார்த்தவுடன் கண்கள் நனைந்தன. அவரை அவர்கள் நேசித்தனர், புத்தரும் அவர்களை கனிவுடனே பார்த்தார். இது ஆண்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. அவர்களுக்குள் பெண்கள் புத்தருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதைப் போன்ற தொடர்பு நிலையில் இருக்க வேண்டும் என்ற ஏக்கம் குடி கொண்டது. இந்த ஏக்கத்தினால் பெருவாரியான ஆண்கள் தங்களுடைய அடுத்த ஜென்மத்தில் பெண்களாகப் பிறந்தனர். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின், தாங்கள் யாராக இருந்தோம் இப்போது யாராக வந்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் மூர்ச்சையடைந்தனர். “நாம் இத்தனை ஆன்மீக சாதனைகளை செய்தோமே, இப்படி பிறப்பெடுத்து விட்டோமே! கௌதமர் நம்மை கைவிட்டு விட்டாரா?” என்ற கேள்வி அவர்களுக்குள் எழும்பியது. “நம்மை ஏன் கௌதமர் மீண்டும் ஒருமுறை துறவிகளாக படைக்கவில்லை? நாம் மீண்டும் ஒருமுறை திருமணம் செய்து, கணவருடன் சேர்ந்து, குழந்தைகளுடன் வாழ வேண்டுமே,” என்று ஆதங்கப்பட்டனர். இது அவர்களுக்கு நிகழக் காரணம், அவர்கள் கௌதமருடன் இணைவுடன் இருந்த பெண்களைப் பார்த்து எரிச்சலுற்றதால்தான். உங்களின் ஏக்கமே காரணம் நீங்கள் பிறப்பெடுக்கும் பாலினத்தை முடிவு செய்வது நீங்கள் உருவாக்கும் ஏக்கமே. நீங்கள் எதற்காக ஏங்குகிறீர்கள் என்பதே உங்கள் பாலினத்தை முடிவு செய்கிறது. ஒரு வேளை நீங்கள் இறக்கும் தருவாயில், உணவிற்காக ஏங்கித் தவிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், நீங்கள் அடுத்தப் பிறவி எடுக்கும்போது பன்றியாக பிறக்க நேரிடலாம். உங்கள் ஏக்கத்தைச் சார்ந்து, உங்கள் கர்ம வாசனைகளைச் சார்ந்து இயற்கை அதற்கு ஏதுவான உடலைத் தருகிறது. நீங்கள் தொடர்ந்து உணவு உண்டு கொண்டே இருக்க ஆசைப்பட்டால், அதே தருணத்தில் நீங்கள் இறக்க நேரிட்டால், அடுத்த ஜென்மத்தில் யாரோ உங்களை செல்லப் பன்றியாக வளர்க்க நேரிடலாம். அவர் உங்களுக்கு நல்ல உணவளித்து வளர்க்கலாம். பன்றியாய் பிறப்பெடுப்பது நமக்கு வழங்கப்படும் தண்டனை என பலரும் நினைக்கலாம், ஆனால் இது உங்களுக்கு அளிக்கப்படும் தண்டனை அல்ல. இயற்கையின் விளையாட்டு இயற்கை தண்டனை, பரிசு என்றெல்லாம் பகுத்துப் பார்த்து யோசிப்பதில்லை. உங்கள் கர்ம வாசனை எப்படி உள்ளதோ, அதனை பூர்த்தி செய்ய, உங்களுக்கு ஏதுவான உடலமைப்பை உங்களுக்கு கொடுக்கிறது. இந்த புத்த துறவிகள் பெண்களாக பிறந்தது அவர்களுடைய கர்ம வாசனை, அவர்கள் ஏங்கியது அவர்களுடன் வாழ்ந்த பெண்கள் கொண்டிருந்த குணத்தைத்தான். பெண்கள் புத்தருடன் உணர்ச்சி ரீதியாக கொண்டிருந்த தொடர்பைக் கண்டு ஏங்கிய ஆண் துறவிகள் அவர்களை அறியாமலேயே பெண்களாகப் பிறப்பதற்கு நாட்டம் கொண்டனர். அதனால் நீங்கள் எடுத்திருக்கும் பாலினத்தை நீங்கள் கொண்டிருக்கும் ஏக்கம்தான் நிர்ணயிக்கிறது. இதனால், உங்கள் கொள்கை மேல் நோக்கம் கொண்டு, நம்மை பிணைத்து வைத்திருக்கும் அத்தனை எல்லைகளையும் கடக்கச் செய்யும் அந்தவொரு ஏக்கத்தை நீங்கள் உண்டு பண்ண வேண்டும். இப்படிச் செய்யும்போது இயற்கைக்கே உங்களிடம் என்ன செய்வதென்று தெரியாது. இயற்கைக்கு உங்களிடம் என்ன செய்வதென்ற குழப்பம் ஏற்பட்டால் அது உங்களுக்கு நல்லது. உங்கள் கர்மத்தின் மீது நீங்கள் வேலை செய்யத் துவங்கலாம். ஏக்கம் இல்லையென்றால்.. இயற்கைக்கு உங்களுடன் என்ன செய்யலாம் என்று புரிந்துவிட்டால், ஏதோவொரு குறிப்பிட்ட பெட்டிக்குள் உங்களை அடைத்துவிடும். இந்த உடலைத்தான் நாம் பெட்டி என்கிறோம். அது ஆண் பெட்டியாக இருக்கும் அல்லது பெண் பெட்டியாக இருக்கும், அல்லது பன்றி பெட்டியாக இருக்கும், கரப்பான்பூச்சி பெட்டியாக இருக்கும் அல்லது உங்களுக்கு பொருத்தமான ஏதோவொரு பெட்டிக்குள் உங்களை இயற்கையால் பிணைத்துவிட முடியும். அதுவே நீங்கள், இதுவும் அல்லாமல் அதுவும் அல்லாமல் இருக்கும் ஒன்றிற்காக ஏங்கினால், வெறுமையை வெறித்துப் பார்த்தால், அதனால் உறிஞ்சிக் கொள்ளப்பட்டால், இயற்கைக்கு உங்களிடம் என்ன செய்வதென்று தெரியாது. இயற்கையால் உங்களை ஏதோவொரு வழியில் உந்தித் தள்ள முடியாது. உங்களுக்காக இயற்கை முடிவு செய்ய இயலாது.

சிதம்பர ரகசியம்

அது என்ன சிதம்பர ரகசியம்?
யாரேனும், ஒரு விஷயத்தை முழுமையாக சொல்லாமல் மறைக்க முயன்றால், அதில் அப்படியென்ன சிதம்பர ரகசியம்? இருக்கிறது என்று கேட்கும் வழக்கம் இன்றும் உள்ளது.
சரி... உண்மையில் சிதம்பர ரகசியம் என்பது என்ன?
இந்த கோவிலில் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72 ஆயிரம் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள். மனிதன் நாள்தோறும் 21 ஆயிரம் முறை மூச்சுவிடுவதையும், அவன் உடலில் 72 ஆயிரம் நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மனித உடலும் கோவில்தான் என்பதை உணர்த்துவதே இந்த சிதம்பர ரகசியம்!
புராணங்கள் சிதம்பர ரகசியத்தை தஹ்ரம் என்று குறிப்பிடுகின்றன. உருவமின்றி இருப்பதால் `அரூபம்' என்றும் அதை சொல்வார்கள்.
இந்த ரகசிய ஸ்தானம் சிதம்பரம் கோவிலின் பொன்னம்பலத்தின் மத்தியப் பிரதேசத்திலும், ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு பின்புறத்திலும் உள்ளது.
இது எப்பொழுதும் திரஸ்க்ரிணீ என்கிற நீல வஸ்திரத்தால் மூடப்பட்டு இருக்கும். நவரத்தினங்கள் பதித்த சொர்ண வில்வ மாலைகளால் இது சதா சர்வ காலமும் பிரகாசித்துக்கொண்டு இருக்கும். இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால், நினைத்தபடி அந்தப் பலன் கிடைக்கும். எந்தப் பலனையும் சிந்திக்காமல் நிஷ்சங்கல்பமாகத் தரிசித்தால் ஜென்ம விமோசனம் சித்திக்கும் என்கிறார்கள்.
எளிதில் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், `சிதம்பர ரகசியம் என்பது, எல்லாம் மனக் கண்ணால் பார்க்க வேண்டியதாகும். அதாவது, திரை ரகசியம். திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும்' என்று விளக்கம் தருகிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்.

வெளிவந்தது கொகா கோலா ரகசியம்!

உலக குளிர்பான வரலாற்றில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படும் கொகா கோலா குளிர்பானத்தின் ரகசிய பார்முலா வெளியாகியுள்ளது.
கடந்த 125 வருடங்களாக குளிர்பான தயாரிப்பில் ஈடுபடும் கொகா கோலா நிறுவனம் தனது குளிர்பான தயாரிப்பில் ஒரு கலக்கப்படும் கலவைகளில் ஒரு சில பொருட்களை மாத்திரமே தனது தயாரிப்பில் வெளியிட்டு வந்துள்ளது.
இது வரைக்கும் கொகா கோலாவின் உண்மையான கலவை பற்றிய பார்முலா ரகசியம் யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த ரகசியத்தில் தான் கோலாவின் ருசியின் பார்முலாவே அடங்கியிருந்திருக்கிறது. தற்போது அந்த பார்முலா வெளியாகிவிட்டதினால் கோலா பற்றிய பல தகவல்கள் உலகுக்கு கிடைத்துள்ளது.
கோலாவின் பார்முலாவுக்குறியவர் யார்?
கொகா கோலாவின் மறைக்கப்பட்டிருந்த பார்முலாவை கண்டு பிடித்தவர் ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் ஆவார். அவா் கண்டுபிடித்ததிலிருந்து 125 வருடங்களாக அந்த பார்முலா ரகசியமாக பாதுகாக்கப்பட்டே வந்தது.
1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கொகா கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது.
கொகா கோலா எனதால் உருவாகிறது ?
கொகா கோலா அடைக்கப்பட்டு வரும்பாட்டில்களில் கொகா கோலாவின் தயாரிப்புக் கலவைகள் பற்றிய ஒருகுறிப்பும் இருக்கும். அந்தக் குறிப்பில் சக்கரை, தண்ணீர், மற்றும் நிறமிகள் (கலர்)கள் கலக்கப்படுவதாகவும், அத்துடன் காபைன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் என்ற ஒரு வாசகமும் இருக்கும்.
ஆனால் இந்த காபன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் பற்றிய உண்மையான பார்முலா யாருக்குமே தெரியாது. அது ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.
கசிந்தது பார்முலா ரகசியம்.
இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி இணையதளத்திலும் வெளியாகி உள்ளது.
அந்தத் தகவலை பிரபல செய்தி ஊடகமான அல்ஜஸீராவும் வெளியிட்டுள்ளது.
இது வரைக்கும் இந்த பார்முலா அடங்கிய ரகசிய காகிதம் கொகா கோலா நிறுவனத்தின் மூலம் அமெரிக்க வங்கி லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.
ஏற்கனவே 1979 ல் ஜார்ஜியா மாநில உள்ளூர் நாளிதழ் ஒன்றில் இது வெளியானதாக தெரிகிறது. ஆனால் இப்போது இருப்பது போல கோகா கோலாவின் புகழ் அப்போது பெரிதாக இல்லை என்பதால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.
கொகா கோலாவின் ரகசிய பார்முலா எது?
கொகா கோலா என்ற குளிர்பானத்தை தயாரிப்பதற்கு பயண்படுத்தப் படும் பொருட்களுன் சேர்த்து காபன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்களையும் சேர்ப்பதாக கொகா கோலா நிறுவனம் தனது தயாரி்ப்புகளில் வெளியிட்டாலும் அந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் என்ன என்ற ரகசிய பார்முலா இப்போது தான் வெளியாகியுள்ளது.
இதுதான் அந்த ரகசிய பார்முலா.
Fluid extract of Coca 3 drams USP.
Citric acid 3 oz .
Caffeine 1oz .
Sugar 30 (it is unclear from the markings what quantity is required).
Water 2.5 gal.
Lime juice 2 pints 1 qrt.
Vanilla 1oz .
Caramel 1.5oz or more to colour.
7X flavour (use 2oz of flavour to 5 gals syrup).
Alcohol 8oz .
Orange oil 20 drops.
Lemon oil 30 drops.
Nutmeg oil 10 drops.
Coriander 5 drops.
Neroli 10 drops.
Cinnamon 10 drops.
பார்முலா வெளிவந்த விதம்.
கொகா கோலாவின் இந்த ரகசிய பார்முலா கலந்த ரகசியம் அந்த நிறுவனத்தின் மிக முக்கிய இரண்டு பேரைக் கொண்டுதான் தயாரிக்ப்படுகிறதாம்.
அவர்கள் மூலம் இந்த ரகசியம் வெளியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அமெரிக்க வங்கி லாக்கரில் இருக்கும் இந்த ரகசிய பார்முலாவின் எழுத்து வடிவ காகிதத்தின் போட்டோ பிரதியை This American Life’s என்ற சஞ்சிகை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜஸீரா இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யுங்கள்.
கொகா கோலா பற்றிய மார்க்கத்தின் நிலைபாடு என்ன?
கொகா கோலாவின் கலவையில் கலக்கப் படும் பல ரசாயனங்களில் அல்கஹாலும் ஒன்றாக இருக்கிறது. அல்கஹாலைப் பற்றிய மார்க்கதின் நிலைபாட்டை முதலில் நாம் தெரிந்து கொண்டாலே கொகா கோலா பற்றிய மார்க்கத் தெளிவை லேசாகப் புரிய முடியும்.
ஆல்கஹால் பற்றிய இஸ்லாத்தின் நிலைபாடு என்ன?
ஆல்கஹால் போதையை உண்டுபண்ணக் கூடிய ஒன்றாகும். போதை தரும் எந்தப் பொருளையும் நாம் உண்ணக் கூடாது என்பது மார்க்கத்தின் கட்டளை.
போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
6124 حَدَّثَنِي إِسْحَاقُ حَدَّثَنَا النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ لَهُمَا يَسِّرَا وَلَا تُعَسِّرَا وَبَشِّرَا وَلَا تُنَفِّرَا وَتَطَاوَعَا قَالَ أَبُو مُوسَى يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ يُصْنَعُ فِيهَا شَرَابٌ مِنْ الْعَسَلِ يُقَالُ لَهُ الْبِتْعُ وَشَرَابٌ مِنْ الشَّعِيرِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ رواه البخاري
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் “அல்பித்உஎனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் “மிஸ்ர் என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும்என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி) நூல்: புகாரி 6124
அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: திர்மிதீ 1788 – நஸயீ 5513 –  3725
و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا  رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால் போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் (3995)
3728 وَفِي حَدِيثِ صَالِحٍ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ شَرَابٍ مُسْكِرٍ حَرَامٌ رواه مسلم
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள்.  முஸ்லிம் (4071)
மேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காக இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது. ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் போதை ஏற்படும்.
எனவே அல்கஹாலைப் பருகுவதும் கூடாது அல்கஹால் சேர்க்கப்படும் கொகா கோலாவைப் பருகுவதும் கூடாது என்பது தான் மேற்கண்ட செய்திகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் மார்க்கத்தின் தெளிவான நிலைபாடாகும்.

இயற்கையை சரிசெய்ய இனி சித்தர்களால் மட்டுமே முடியும்

இயற்கையை மனிதன் எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுக்கிறான்,.
விவசாயி ஏன் இவ்வளவு ஏழையாயாக இருக்கிறான் தெரிகிறதா.விவசாயி மனிதர்கள் வாழும் வகைக்கு பாடுபடும் வரையில் அவன் திருவள்ளுவர் மதிக்கும் வண்ணம்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அஃதின்றது 
உழன்றும் உழவே தலை.
என்று மனிதனை வாழ்விக்கும் வண்ணம்  இருந்தவன் சுய நலத்துக்காக உரம் பூச்சி மருந்து கீழ்க்காணும்  ரசாயனங்கள் என உபயோகிக்க ,உபயோகிக்க,மனிதனை வாழ்விக்கும் விவசாயம் மனிதனை கொல்கின்றது.
எனில் விவசாயி வாழ்வானா.
இன்றைய(02-08-2010) தினமலரில் வந்துள்ள செய்தி இது
நன்றி தினமலர்
நீங்கள் சாப்பிடும் திராட்சையை கொத்தோடு பல முறை பூச்சி மருந்தில் முக்கி 
எடுக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா.
எனது நண்பர் ஒருவர் இந்த திராட்சைகளை கழுவாமல் சாப்பிட்டு,இந்த நஞ்சின் பாதிப்பிற்கு ஆளாகி,  அதன் விளைவாக நீர்த்தடுப்பு உண்டாகி(URINARY ARREST,ETC)  அதன் பிறகு மிகுந்த சிரமத்துக்காளாகி அதற்கான மருந்தினை உட்கொண்ட பின் இன்று வரை அதன் சிரமம் அறவே நீங்காது அவஸ்தையுற்று வருகிறார்.
 போலி இயற்கை உரங்கள்: விவசாயிகளே உஷார்!
உரக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வேப்பம் பிண்ணாக்குஇயற்கை உரங்கள். 

           மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா குறைந்த அளவிலேயே ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

             இருப்பினும் குறைந்த அளவிலான ரசாயன உரங்களின் பயன்பாடேதற்போது நமது இயற்கை வேளாண் விஞ்ஞானிகளால் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. ஒருகாலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட டி.டி.டி.பி.எச்.சி. பூச்சிக்கொல்லி மருந்துகள்தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. காரணம்டி.டி.டி. மருந்தின் நச்சுக் கழிவுகள்தாய்ப்பாலில் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. பல ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுகரைந்து போகாமல் தங்கி விடுவதேமோசமான விளைவுகளுக்குக் காரணம். எனவேதான் இயற்கை உரங்களைப் பயன்படுத்திஉடல் நலத்துக்குக் கேடு விளைவிக்காத தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.இயற்கை உரங்களின் பட்டியலில்நுண்ணுயிர் உரங்கள்மண்புழு உரங்கள்வேப்பம் பிண்ணாக்கு போன்றவை முக்கிய இடம் வகிக்கின்றன.

           இயற்கை உரங்களின் பயன்பாட்டை வலியுறுத்தும் அதே நேரத்தில்இயற்கை உரங்கள் என்ற பெயரில்பல போலிஉரங்கள் உலா வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.எள்ளுப் பிண்ணாக்குமணிலா பிண்ணாக்கு ஆகியவற்றில் வேப்பெண்ணெயைத் தெளித்துவேப்பம் பிண்ணாக்கு என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.திரவ வடிவில் அசோஸ்பிபாஸ்போமிக்ஸ்பொட்டாஷ் ஆக்டிவாஜிங்க் ஆக்டிவேட்டர் போன்ற இயற்கை உரங்கள் கவர்ச்சிகரமான பொட்டலங்களில் உரக்கடைகளில் விற்பனைக்கு உள்ளன.

            பன்னாட்டு நிறுவனங்களும்உள்ளூரில் சிறிய அளவில் குடிசைத் தொழில்போல் பலரும் இந்த இயற்கை உரங்களைத் தயாரித்துபயிர் வளர்ச்சி உரங்கள்இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் என்ற பெயரில் விற்கிறார்கள். ஒரே இயற்கை உரம்பயிர்களுக்கு பல்வேறு சத்துகளை அளிப்பதாக விளம்பரம் செய்கிறார்கள்.இவற்றைத் தயாரிப்பதற்கான அனுமதியை பெறரூ.300 கட்டணம் செலுத்திவேளாண்மைப் பல்கைலக்கழகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே.ரசாயன உரங்களுக்குத் தரக் கட்டுப்பாடு உள்ளது. அதற்கான சட்டங்களும் உள்ளன. நுண்ணுயிர் உரங்களில் ஒரு கிராமில் ஒரு மில்லியன் நுண்ணுயிர்கள் இருக்க வேண்டும் என்று தரக் கட்டுப்பாடு உள்ளது. அதேபோல் மண்புழு உரங்கள்நகர கம்போஸ்டு உரங்களுக்கும் தரக் கட்டுப்பாடு உள்ளது. 

                    எனவே உரக் கட்டுப்பாடு அலுவலர்கள்அடிக்கடி உரக்கடைகளில் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிதரம் குறைவாக இருந்தால் அத்தகைய உரங்களை தயாரித்தோர்விற்பனை செய்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.ஆனால் சந்தையில் விற்பனையாகும் ஏனைய இயற்கை உரங்களுக்கு எந்தத் தரக்கட்டுப்பாடும்அதற்கான சட்டங்களும் இல்லை என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள். இதனால் விளம்பரங்களை நம்பி இந்த இயற்கை உரங்களை வாங்கிப் பயன்படுத்தினால் பாதிக்கப்படுவது விவசாயிதான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

குப்பையில் இருந்து  மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்து வரும் பட்டாம்பாக்கம் பேரூராட்சித் தலைவர் ஜெயமூர்த்தி இதுபற்றிக் கூறுகையில்,

            “”மாதம் முதல் டன்கள் வரை தயாரித்து விற்பனை செய்கிறோம். காய்கறிச் செடிகளுக்கும்நிறுவனங்களில் புல்வெளிகள் அமைப்போரும் இந்த உரத்தை விரும்பி வாங்குகிறார்கள். அதிக அளவில் பயன்படுத்த இன்னமும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.ஆனால் இயற்கை உரங்கள் என்ற பெயரில் பல டானிக்குகள்பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனைக்கு வருகின்றன. புதுவை மாநிலத்தில் இத்தைகைய இயற்கை உரங்களை அதிகம் தயாரிப்பதாக அண்மையில் என்னை சந்தித்துத் தெரிவித்தனர். ஆனால் அவற்றின் தரம் பற்றி யாருக்கும் தெரியாது” என்றார்.

இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் கூறுகையில்,

                  “”இயற்கை உரங்களுக்கு தரக் கட்டுப்பாடு சட்டங்கள் கொண்டுவர வேண்டும். குறைந்தபட்சம் வேளாண் அலுவலர்களின் பரிந்துரைப்படி விற்கவேண்டும் என்ற கட்டுப்பாடாவது இருக்க வேண்டும்” என்றார் அவர்.
இதில் பெரிய அவஸ்தையாக அமெரிக்காவின் மான்சாண்டோ அதன் தற்கொலை விதைகளை அறிமுகப்படுத்த இந்திய விவசாயிகளையும் (விவசாய கல்லூரி பேராசிரியர்களையும்) அவர்களுக்கு சாதகமாக பேசி செயல்பட விலைக்கு வாங்கி வருகிறது.ஒரு முறை விதைத்து விளைந்து வரும் ,விதைகளை மறுமுறை விதைத்தால் விளையாது.
அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதித்தபோதும் ,இந்தியா அசரவில்லை,ஏனெனில் விவசாயம் நமது முதுகெலும்பாக இருந்த்தது.எனவெ இந்தியாவின் மீது மறை முகமாக இந்த மலட்டு விதைகளை  விவசாயிகள் மூலம் ,விதைக்க ஏவி வருகிறது.
ஏற்கெனவே மலடாகி வரும் மனிதனுக்கு மலட்டு விதைகள்.இதில் ஏதாவது
மனிதனின் உற்பத்திக்கு பங்கம் வருமா,பாதகம் வருமா.இந்த பிரச்னை நாட்டுப்
பிரச்சினை அல்ல.எனது வீட்டுப் பிரச்சினை.நாளை எனது மருமகனோ,மகனோ ஆண்மை உள்ளவனாக இருப்பானா.இது இந்த மாதிரி விதைகளையும்,பூச்சி மருந்துகளையும்,உரங்களையும் போட்டு பயிர் செய்யும்
விவசாயிக்கும் உள்ள பிரச்சினை.
இதனுடன் மகரந்த்தச் சேர்க்கை உறும் எந்த தாவரமும் மலடாகும்.இத்தகைய
சித்த வைத்தியத்திற்கு மூலாதாரமாக  உள்ள தாவரங்களைக் குறி வைத்து  ஏவி உள்ள இந்த தந்திரமான போரை சித்தர்களின் நோக்கில் மிக கடுமையாகப்
பார்க்கிறார்கள்.
இவ்வளவுக்கும் காரணமாக உள்ள விவசாயிகள் அப்பிராணிகளாக(INNOCENT)
என்னால் மட்டுமல்ல ,சித்தர்களாலும் கருத்தப்படாததாலும் ,அவர்கள் தங்கள் நிலையில் சுயநலமில்லாது சரியாக செயல்படாவிட்டால் அவர்கள் சந்ததி மட்டுமல்ல  இந்தியாவில் யாருடைய சந்ததியுமே எதிர்காலத்தில் இருக்காது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சித்தர்கள் சும்மா இருப்பார்களா??????

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...