Tuesday, November 3, 2015

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...?
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...? என்பவைகளை பற்றி.
சற்று விரிவாக ஆராயலாம்..வாருங்கள் !!!!!

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின்
வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும்
ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம்
இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய்
தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த
விதத்திலாவது உருவாக்க முடியுமா? 

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை
இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல்
தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது? இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர்
பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! 

நாம்அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை சிர்வாதிக்கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?” குலதெய்வம்
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். 

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய
ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த
தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. 

குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.
நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல
தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம்
கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள்
வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின்  விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள்.

மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த
மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு.குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்
தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்காக்கும் வல்லமை படைத்தவை.எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக
இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள்
திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது. பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும்
வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்.

குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான்
சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.

அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள்
உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை…

அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது. எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல
தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு.

ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு
இருக்கும்.

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.....?
விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.
தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.
ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x
சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக்
கூறி உள்ளது.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே.
ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ,ஆணோ ஒருவரை ஒருவர்
அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். ஏனெனில்
பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண்
குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில்
அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார்,
மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர். இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி,
கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே. ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது.

பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை. ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக்கொண்டிருக்கிறதாம்.

13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள்
மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.

தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்

தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும். இத்தமிழ் மொழிக்கு வரிவடிவம் அதாவது எழுத்து உருவம் என்று உருவானது? என்ற வினாவிற்குச் சரியான விடை கிடைக்கவில்லை. தற்சமயம் நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்களைக் கொண்டு சில மொழிவழி உண்மையை உணர்கிறோம். இன்று நாம் பேசும் தமிழ்மொழி பல கால கட்டங்களில் பல மொழிகளோடு இணைந்து பல உருக்கள் மாறி இறுதி நிலையில் காண்கிறோம். ஆனால் தொல்கால இந்திய எழுத்து முறையை ஆராய்ச்சியாளர்கள் தமிழெழுத்து முறை மற்ற இந்திய எழுத்து முறைகளைக்குத் தாய் பெருங்குரல் கொடுக்கிறார்கள் அறிஞர்கள் பூலரும், ஐராவதம் மகாதேவன் அவர்களும்.
தமிழ் வட்டெழுத்து

தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் மிகமிகத் தொன்மை வாய்ந்தது வட்டெழுத்து முறையே! வளைந்த கோடுகள் அவ்வெழுத்து முறையில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதால் அம்முறைக்கு வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது. இதன் அடிப்படையில் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் கோலெழுத்துக்கள் அல்லது “மலையாண்மா” என்ற எழுத்து முறை உருவானது. இக்கோலெழுத்துகள் செப்பேடுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டன. அக்கோலெழுத்துக்களே ஆங்காங்கே கிடைத்துள்ள கல்வெட்டுக்களிலும், நடு கற்களிலும் தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்தாக உருமாறி மலர்ந்து வளர்ந்தது என இரா. நாகசாமி அவர்கள் மார்தட்டிக் கூறுகிறார்.
வட்டெழுத்தின் தோற்றம்

வட்டெழுத்துக்களின் ஆரம்ப நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு, நடுகற்களே சரியான சாட்சிகள். நடுகற்கள், நடப்பட்ட கற்களைத் தான் நடுகற்கள் என்று வரலாற்று மேதைகள் கூறுகின்றனர். அதன் வாயிலாகத் தமிழ் வட்டெழுத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. தமிழ் பிராமியில் புழக்கத்திலிருந்த “தமிழ்” எழுத்துக்கள் தான் தமிழ் வட்டெழுத்தாக மாறி வளரத் தொடங்கியது என வரலாறு ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
கி.பி. 3 – ஆம் நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்தானது தமிழ்ப் பிராமியிலிருந்து பிரியத் தொடங்கியது. பிராமியிலிருந்து பிரியத் தொடங்கிய வட்டெழுத்துக்கள் நாளடைவில் சிறுகச் சிறுக வளர்ந்து கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தனித்தன்மை பெற்றது எனலாம்.
அன்று செந்தமிழ் நாடு எனப் போற்றப்பட்ட பாண்டிய நாடு “தன்னார் தமிழ் அளிக்கும் தென் பாண்டி நாடு” என மாணிக்கவாசகரால் பாராட்டப்பட்டது. தமிழை வளர்த்த பாண்டியர்கள் வட்டெழுத்து முறைக்கு ஊக்கம் காட்டினர். கொடுந்தமிழை மேற்கொண்ட சேரர்களும் வட்டெழுத்தில் ஆர்வம் காட்டினர். இரு நாட்டிலும் வட்டெழுத்தில் அரசுச் சாசனங்கள் எழுதப்பட்டன என்றால் அதன் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ளுங்கள்.
வட்டெழுத்துப் பகுதிகள்

தமிழ் வட்டெழுத்து தமிழகம் முழுவதிலும் பரவிச் செயல்முறையில் இருந்தது. தமிழகப் பகுதிகளாகிய மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், கோவை, சேலம், வடாற்காடு, தென் ஆற்காடு, செங்கற்பட்டு போன்ற பகுதிகளிலும் பரவியிருந்தது. கொங்கு நாட்டு மன்னர்களின் சாசனங்களிலும் தமிழ் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.
தமிழ்க்கோலெழுத்துக்கள் – “மலையாண்மா”

பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் பல நூற்றாண்டுகள் கொடி கட்டிப்பறந்த வட்டெழுத்துக்கள் நாள்பட நாள்பட அவை ஒழுங்கு முறையில் எழுதப்படாமல் உருமாற்றங்களைப்பெற்று தமிழ் வட்டெழுத்து ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. இவ்வெழுத்து முறையைத்தான் திருவாங்கூர் போன்ற கேரளப் பகுதிகளில் “மலையாண்மா” என்றும் “கோலெழுத்து” என்றும் அழைக்கலாயினர். சோழர்களின் ஆட்சிக் காலத்தில் வட்டெழுத்து குறையத்தொடங்கியது. ஆனால் சேர நாட்டில் கி.பி. 1663 வரை நிலைத்திருந்தது என திரு. டி.ஏ. கோபிநாதராவ் கூறுகிறார்.
வட்டெழுத்து வீழ்ச்சசி

பாண்டிய நாட்டில் மிகச் செல்வாக்குடன் ஓங்கி வளர்ந்த பாண்டிய நாட்டை வென்ற சோழர்கள் தமிழ் வட்டெழுத்துக்களை ஆதரிக்கவில்லை. முதலாம் பராந்தகச்சோழன் முதலாம் இராசராசன் காலம் வரையாண்ட சோழர்கள் வட்டெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து பாண்டியர் பகுதிகளில் மறைந்துவிட்டது.
தமிழ்க் கிரந்தம் உதயம்

தென் இந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் வைத்தாண்ட சோழர்கள் காலத்தில் தமிழ் வட்டெழுத்து மங்கி கிரந்தத் தமிழ் மேலோங்கியது. பல்லவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட “பிராமிலிபி”யின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும் வழக்காறு பெற்றது. சோழ மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. வட்டெழுத்துக்கள் மறைந்து கிரந்தத் தமிழ் தலை தூக்கியது.
தமிழ் இலக்கியங்கள்

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்” எனப் புகழப்படும் தமிழ் உலகில் பல விலக்கியங்கள் தற்பொழுது தமிழகத்தில் தமிழ் பற்றும் புத்துணர்வும், மொழித் தூய்மையும், ஒழுங்குமுறை எழுத்து வடிவமைப்பும் அமையக் காரணங்களாக அமைகின்றது. இலக்கியங்கள் அனைத்துமே பெரும்பாலும் 1. முதற்பொருள், 2. கருப்பொருள், 3. உரிப்பொருள், என வகைப்படுதப்பட்டுள்ளன.
நம் தமிழ்மொழி இலக்கியவளம் பெற்ற மொழியாகும். இலக்கியங்களும் இலக்கணநூல்களும் பெருகி இருந்தமையால் தமிழ்மொழி திருந்திய மொழியாக, திருத்தம் செய்யப்பட்ட மொழியாக, ஒழுங்கு படுத்தப்பட்ட மொழியாகச் சிறப்புற்றது. இலக்கண மரபுகளைத் தகுத்து ஒழுங்குபடுத்தி “எழுத்து”, “சொல்”, “பொருள்” என்ற மூன்று தலைப்புக்கள் ஒலியைக்குறிக்கும் குறில், நெடில், ஆய்தம், இகரம், உகரம் போன்ற அனைத்துத் தமிழ் இலக்கண நெறிகளை நாம் அறிவோம்.
தமிழ் மொழியின் நான்கு நிலைகள்

1. பண்டைத் தமிழ் நிலை2. காப்பியக்காலத் தமிழ் நிலை3. இடைக்காலத் தமிழ் நிலை4. தற்காலத் தமிழ் நிலை
என நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள்,
பண்டையத் தமிழை அறியத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் உதவுகின்றன.
இடைக்காலத் தமிழை அறியத் தேவாரம், திவ்யப்பிரபந்தம், சிந்தாமணி போன்ற இலக்கியங்கள் உதவுகின்றன.
தற்காலத் தமிழ்நிலையை, நன்னூலுக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் மற்றும் பேச்சு வழக்குத் தமிழ் கொண்டும் தெரியமுடிகிறது.
ஒலியாகத் திரிந்து, சித்திரமாய் மாறி, பலமொழிகளுடன் இணைந்து உருக்கள் பலப், பல எடுத்து, காலம் பல கடந்து, கல்வெட்டுகளில் உராய்ந்து, செப்பேடுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் தோய்ந்து, வெள்ளைக் காகிதத்தில் வீரநடை போடும் தேன்தமிழ் மொழியே நம் தாய்த் தமிழ்.

தமிழின் தொன்மையும் செவ்விலக்கியங்களும்


 
தமிழின் தொன்மையும் செவ்விலக்கியங்களும்

      ஒரு மனிதன் தன் எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளப் பயன்படும் அரிய கருவி மொழியாகும்.  மனிதனின் அறிவு விரிவாக விரிவாக மொழியும் வளர்ச்சிப் பெற்றுக்கொண்டே வருகின்றன.  மொழி இல்லையேல் மனிதனுக்கு இயக்கம் என்பது இருக்காது.  ஆகவே மொழியே மனித வாழ்வினைத் திறம்படவும் செம்மையுறவும் வைக்கின்றது.  அவ்வகையில் செம்மையான மொழி வளத்தைப் பெற்ற மனித இனமே சிறப்பான வாழ்வினை வாழ்ந்து வருகின்றது.  அவ்வாறு சிறப்பும் செம்மையும் வாய்ந்த மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று.  தொன்மைத் தன்மை பெற்ற மொழியும் தமிழ் மொழியே என்பதனை அறிய முடிகின்றது. இதனை,
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி
என்ற வரிகள் புறப்பொருள் வெண்பாமாலையின்வழி புலப்படுத்துகிறது.  மேலும் பாட்டுக்கொரு புலவன் பாரதியும் தமிழின் தொன்மையைப் பற்றிக் கூறியுள்ளதையும் அறியமுடிகின்றது.  தமிழ் மொழியானது தொன்மைத் தன்மையினைக் கொண்டு தொன்னெடுங்காலமாக தனக்கே உரிய தனித் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டு விளங்குகின்றது.  இதனை,
தொன்று நிகழ்ந்த தனைத்தும்
அறிந்துள தொல்புவி வாணர்களும்
என்று பிறந்தவ ளென்றுணராத
இயல்பின ளாமெங்கள் தாய் (பா.க., ப.9-135)
என்ற வரிகள் உணர்த்துகின்றன.

தமிழின் தொன்மையும் தனிச்சிறப்பும்
      தமிழர்கள் தொன்மையுடையவர்கள் என்பதால் தமிழ் மொழியும் தொன்மையுடையதாகத்தான் இருக்க வேண்டும்.  தமிழ் மொழி வரலாற்றிற்கு எட்டாத ஆதிகாலத்தே தோன்றிய மொழியாகும்.  இம்மொழியின் தோற்றம் தெரியாத காரணத்தால் இது சிவபெருமானால் அகத்திய முனிவருக்குக் கற்பிக்கப் பெற்றது என்றும், ஏறத்தாழ கி.மு. 3000 ஆண்டு காலத்திற்கு முன்பே இம்மொழி உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்ந்தது என்ற கருத்தும் உண்டு.  இம்மொழி இலக்கிய இலக்கணங்களைத் தன்னகத்தே கொண்டு சிறப்புற விளங்கியும் வருவதை அறிந்துகொள்ள முடிகின்றது.
பழந்தமிழ்ச் சங்க நூல்களில் தமிழ், தமிழகம் என்னும் சொற்கள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன.  ஆரிய மக்கள் தமிழ் என்னும் சொல்லை உச்சரிக்க முடியாமல் உறுதுயரடைந்துள்ளனர்.  ஆகையால் தமிழ் என்னும் இன்சொல் தமிழறியார் நாவில் தமிளாகி பிறகு திரமிள் என்றாகி அதன் பிறகு திராவிடமாகத் திரிந்திருக்க வேண்டும்.
      தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் தமிழ் என்ற சொல்லைப் பயன்படுத்தியதை,
தமிழென் கிளவியும் அதனோரற்றே      (தொல். எழுத்து. 186)
என்னும் நூற்பாவின் மூலம் அறியலாம்.  எனவே மொழியைக் குறிப்பதற்கும் நாட்டைக் குறிப்பதற்கும் தமிழ், தமிழகம் என்னும் சொற்களே இருந்திருக்கின்றன. இவ்வுண்மைகளிலிருந்து திராவிடர் என்பவர்களே பழந்தமிழரென்றும், திராவிட மொழி என்பது பழங்காலத் தமிழ் மொழியே என்றும், திராவிடம் என்பது பண்டைத் தமிழகம் என்றும் அறியப்படுகிறது.  அவ்வகையில் இலக்கண இலக்கிய வளங்களைப் பெற்று தொன்றுதொட்டு வரும் தொன்மையான மொழிகளாவன தமிழ் எபிரேயம், இலத்தீன்,சமகிருதம், கிரேக்கம் ஆகிய ஐந்து மொழிகளாகும்.  இவற்றுள் இன்றைக்கும் உயிர்ப்புடனும் உலக வழக்குடனும் பேசப்பட்டும் படிக்கப்பட்டும் எழுதப்பட்டும் ஆராயப்பட்டும் வருகின்ற ஒரே மொழி தமிழ் மொழி என்பதை அறியமுடிகின்றது.
      இந்திய மொழிகளுக்கிடையே நிலவும் ஒற்றுமை, வேற்றுமைகளைக் கூர்ந்து நோக்கிய மொழி நூல் வல்லுநர்கள் நாட்டின் வடபாகத்தில் வழங்கப்படும் மொழிகள் ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும், தென் பாகத்தில் வழங்கப்படுவது திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தது என்றும் பிரித்தனர். அதன் அடிப்படையில் தமிழ் திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்ததாகும்.  திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த பிற மொழிகள், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடுகு அல்லது கூர்க்கு, துதம் (கூரனடி), கோதம் (முடிவய), கோண்டு (ழுடினே), சந்தம் அல்லது கு (முடினே) ஓராவோன், இராஜ்மகால் ஆகியனவாகும்.  இவற்றுள் முன்னைய ஐந்தும், தமிழும் திருந்திய மொழிகள், பின்னைய ஆறும் திருந்தா மொழிகள் இம்மொழிக் குடும்பத்திற்குத் தலைமை நிலையிலிருக்கும் தகுதியைப் பெற்றது தமிழ்மொழி ஆகும் என்பதனை வாழ்வியற் களஞ்சியம் குறிப்பிடுகிறது (வாழ். களஞ்., தொ. 10, ப. 733).
      மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிகள் தமிழ்த் தாயின் பிள்ளைகளெனப் போற்றும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் கீழ்க்காணும் வரிகள் மூலம் சுட்டுவதை அறியலாம்.
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினு மோர்
எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பது போல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்    (மனோன். 2:6)
என்ற பாடல் வரிகளின் மூலம் தமிழ்மொழியானது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.  ஆரியமொழிக் குடும்பத்தின் உதவியின்றித் தனித்து இயங்கக்கூடிய வல்லமை பெற்றது.  ஆனால் மற்ற மூன்று மொழிகளுக்கும் ஆரிய மொழியின் சார்பானது அவசியமாகக் கொள்ளப்பட்டது என்பதனையும் அறிய முடிகின்றது (அந்தோணிசாமி, சே.ச., 2006:1).
      தமிழ் மொழியின் தொன்மைச் சிறப்பை விளக்கும் ஹிராஸ் அடிகளார் வட இந்தியாவில் காணப்பட்ட மொகஞ்சதாரோ மக்கள் திராவிட மொழி ஒன்றைப் பேசினர்.  அம்மொழியில் பயன்படுத்தப்பட்ட சொற்களில் பெரும்பகுதி தமிழைச் சேர்ந்தவை என்று கூறுவதோடு இன்று பழமையானது எனக் கொள்ளப்படும் சுமேரிய மொழியும் தமிழுக்குப் பிந்திய வளர்ச்சியைப் பெற்றது என்ற கருத்தை குறிப்பிடுவதிலிருந்து தமிழின் தொன்மைச் சிறப்பை அறிந்துகொள்ள முடிகிறது (ஞானபிரகாசர் அடிகளார், எ., 2006:5).
      மேலும் தமிழ் ஆங்கில அகராதியைப் படைத்த வின்சுலோ என்னும் அறிஞரும் தமிழின் சிறப்புக் குறித்து கூறியுள்ள செய்தியில் இருந்து அறிய முடிகின்றது.  பாட்டு வடிவத்தில் கிரேக்க மொழியைவிடத் தமிழ் உயர்ந்துள்ளது.  ஆற்றலிலும் முழுமையிலும் ஆங்கில மொழியையும், ஜெர்மானிய மொழியையும் ஒத்துக் காணப்படுகின்றது என்றும், மனிதரால் பேசப்படும் வளமான திருந்திய மென்மையான மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்றாகும் என்று டெய்லர் என்னும் அறிஞரும் தமிழின் பண்பட்ட பாங்கினையும் இலக்கியச் சிறப்பினையும் குறிப்பிட்டுள்ளதை அறிய முடிகின்றது.
      தமிழ் மொழியானது சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் ஆற்றலிலும் பொருளோடு பொருந்தி உள்ளத்தின் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் தமிழுக்கு இணையான மொழி உலகில் வேறொன்றும் இல்லை.  தமிழ் மொழியில் பொருள்களின் கருத்து, செயல், அதன் விளைவுகள் ஆகியவற்றின் முறை எப்போதும் மீறப்படாமலேயே காக்கப்படுகின்றது என்ற செய்தியினையும் தெரிந்துகொள்ள முடிகின்றது.      இத்தகைய உண்மைகளை அறிந்தமையால் தாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல இனிதானதொன்றை எங்கும் காணமுடியாது என்ற முடிவுக்கு வந்த பாரதியார் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற கருத்தின் மூலம் எடுத்துக் காட்டுகின்றார்.

தமிழ் மொழியின் தொன்மைப் பற்றி கால்டுவெல்
      திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆசிரியரான கால்டுவெல் என்னும் மொழிநூல் அறிஞர் தமிழ் மொழி மிகத் தொன்மையுடையது என்பதற்குப் பல காரணங்களைக் காட்டியுள்ளார்.  இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையே இருக்கும் பெரும்பான்மையான வேறுபாடுகள் மொழியின் தொன்மையைக் காட்டுகின்றது.
      செந்தமிழ் இலக்கணப் பாகுபாடும் மொழியின் தொன்மைக்குச் சான்றாகும்.  ஒரு மொழியில் இலக்கியங்கள் தோன்றிய பல ஆண்டுகளுக்குப் பிறகே அம்மொழியில் இலக்கணம் தோன்றியது எனக் கூறுவதற்கேற்ப தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்திருக்கிற முதல் நூலே இலக்கண நூலாகிய தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் தோன்றுவதற்குக் காரணமாய் இருந்த இலக்கியங்களெல்லாம் கடலலைகளுக்கு இரையாகிவிட்டன.   எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணங்களும் தொன்மைக் காலத்தே நம் மொழியில் தோன்றித் துலங்கின என்பதும் அறியமுடிகிறது.
      மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் காணப்படும் சாசனங்களில் பல, மிகத் தொன்மையான காலத்தில் வடமொழிக் கலப்பற்ற செந்தமிழ்ச் சொற்களால் ஆனது. தமிழகத்தில் காணப்படும் சமகிருத சாசனங்கள் ஒன்றுகூட கி.பி. 14 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது கிடையாது என்று கால்டுவெல் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்த கா.கோவிந்தன் என்பவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (தமிழில்) என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதை அறியமுடிகின்றது (கோவிந்தன், கா., 1992:21). முச்சங்கங்களும் மொழித் தொன்மையும்
      கி.மு. 5000 ஆண்டிலிருந்து கி.பி. 300 வரைக்கும் தலை, இடை, கடைச் சங்கங்களை முறையே தென்மதுரையிலும், கபாடபுரத்திலும், கூடல் மாநகரிலும் நிறுவிப் புலவர்களைக் கொண்டு பாண்டியர்கள் தமிழை ஆய்ந்து வந்தார்கள். இலக்கிய,இலக்கணங்களை வளப்படுத்தி வெளிக் கொணர்ந்தார்கள்.  அக்காலச் சங்கங்கள் இக்காலப் பல்கலைக்கழகங்கள் போல் விளங்கின.  அவற்றில் மொழியை ஆராய்ந்து எழுத்துக்களின் பிறப்பைப் பற்றியும், அவற்றின் ஒலி நயங்களைப் பற்றியும்,சொற்களைப் பற்றியும், அவற்றின் பிரிவுகளைப் பற்றியும் பல உண்மைகளை உணர்ந்து எடுத்துரைத்துள்ளார்கள்.  ஒரு மொழி பண்பட்ட நிலையை அடைந்த பிறகு தான் ஆற்றல் வாய்ந்து அதில் ஆராய்ச்சி நடத்துவது இயலும்.  ஆகவே, தமிழ்மொழி கி.மு. 5000க்கும் முன்பே பண்பட்ட மொழியாக விளங்கியதனால் தான் சங்கம் வைத்து ஆராயந்திருக்கின்றார்கள் என்பதைத் தெளிவாக அறிய முடிகின்றது.
தமிழின் தனிச்சிறப்பு
      ஆரிய மொழிபோல் உலக வழக்கு அழிந்து, ஒழிந்து, சிதையாமல், சீரிளமை குன்றாமல் இருக்கும் உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழியாகும்.  இம்மொழி கலைமகட்கு வலது விழியாக விளங்குகிறதென்று மனோன்மணீய ஆசிரியர் பின்வரும் வரிகளின் மூலம் விளக்குவதைக் கொண்டு அறியமுடிகின்றது.
கலைமகள் தன் பூர்வதிசை
காணுங்கால் அவள் விழியுள்
வலது விழி தென்மொழியா
மதியாரோ மதியுடையார்
என்ற வரிகளின் வாயிலாகக் கிழக்குத் திசை தெரியாதவர்கள் தாம் வடமொழியைக் கலைமகளின் வலவிழி என்பர்.  ஆனால் அறிவுடைய பெருமக்கள் கலைமகள் கிழக்கு முகமாகத் திரும்பியிருக்கின்றாள் என்று கூறுவதால் தமிழ்மொழியே அவளுக்குரிய வல விழியாக விளங்குகிறது என்று குறிப்பிடுகின்றார்.  (கணேசன்,பி.சி., 1996:211)

பாரதி கூறும் தமிழின் சிறப்பு
      பாரதியார் பன்மொழிப் புலவராவார்.  அவர் தமிழ்மொழிதான் தாமறிந்த மொழிகளிளெல்லாம் தலையானது, தனிச் சிறப்புடையது தணியா இன்பம் பயக்கவல்லது என்றும், தமிழை நினைத்தாலும் இன்பம்பேசினாலும் இன்பம்,கேட்டாலும் இன்பம், தமிழே இன்பம், செந்தமிழ் நாடென்று சொன்னாலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றும், தமிழ் மொழியின் சிறப்பும் தன்மையும் குறித்து வாழ்த்தி வணங்கியுள்ளமையை அறியமுடிகின்றது.
வாழ்க தமிழ்மொழி, வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே (பா.க., ப. 154)
என்ற வரிகள் புலப்படுத்துகின்றன.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பகருஞ்சிறப்பு
      இனிமை பயப்பது தமிழ்மொழி, நல்லின்பம் தருவது தமிழ்மொழி, சுவைமிகு செம்மைச் சொற்கள் நம் தொன்மைத் தமிழினில் பல உள்ளன.  தமிழைத் தம்முயிராகப் பேணிய பாரதிதாசனார் கூறும் சிறப்புக் குறித்துப் பாரதிதாசன் கவிதை வரிகள் விளக்குகின்றன.
இனிமைத் தமிழ் மொழி எமது-எமக்
கின்பந்தரும்படி வாய்த்தல் நல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு-எங்கள்
கதியில் உயர்ந்திட யாம் பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங் கண்ட தில்லை
நனியுண்டு நனியுண்டு காதல்-தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில்
என்னும் வரிகள் மூலம் தமிழின் சிறப்புக் குறித்துப் பாரதிதாசன் கூறுவது புலப்படுகின்றது (பா.தா.க., ப.82:23)


இலக்கணங் காட்டும் தமிழ்ச் சிறப்பு
      அவசரக்குடுக்கை, அதோகதி, ஆகாயத்தாமரை, ஆயிரங்காலத்துப் பயிர்,இந்திரசாலம், ஓலைகிழிந்தது, தாளம் போடுகிறான்நாமம் போட்டுவிட்டான்,புத்தகப்பூச்சி போன்ற மரபுத்தொடர்களாலும் ((idioms) ஓட்டமும் நடையுமாய்,தட்டுத்தடுமாறி, கொள்ளை கொள்ளையாக நன்மைதீமை, மேலும் கீழும் போன்ற இனிய சொற்றொடர்களாலும் (phrases)  தமிழ்மொழி சிறப்புடன் திகழ்கின்றது.  நம் மொழியில் காணும் பலவகையான தொகைகள் சொற்சுருக்கத்துக்கும்,சொல்லினிமைக்கும் பெரிதும் பயன்படுகின்றன.  கபிலரும், பரணரும் என்பதைக் கபிலபரணர் என்று சொல்லும்பொழுது எவ்வளவு இனிமையாக இருக்கின்றது. மொழிநூல் வல்லார்கள் தனிநிலை, உட்பிணைப்பு நிலை, ஒட்டுநிலை என்று மொழிகளின் நிலைகளைப் பாகுபாடு செய்துள்ளார்கள்.

      தமிழ் மொழி ஒட்டுநிலையைக் கொண்டது.  அடிச்சொல் இரண்டும்பலவும் ஒட்டி நிற்கும் நிலை ஒட்டுநிலை, கண் + அன் என்னும் சொல் சேர்ந்து ஒட்டுவதால் கண்ணன் என்னும் சொல் கிடைக்கிறது.  இவ்வாறு பகுதிவிகுதி, இடைநிலை,சாரியை, சந்தி, விகாரம் ஆகியவற்றை ஒன்றோடு ஒன்றை ஒட்டித்தான் தமிழ்ச் சொற்களை உண்டுபண்ணவும் இடைநிலைகளாலேயே காலங்களை அறியவும் முடிகின்றது.  தமிழின் திணைப் பாகுபாடும் எண் பாகுபாடும் போற்றற்குரியன. உலகிலுள்ள பொருட்களை உயர்திணை என்றும், அஃறிணை என்றும் பிரித்து,
உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை யென்மனார் அவரல பிறவே (தொல். சொல். 1)
என்று வரையறுத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.  தமிழில் ஒன்றை ஒருமையென்றும்,ஒன்றுக்கு மேற்பட்டவற்றைப் பன்மையென்றும் கூறுகின்றனர்.
      உலக மொழிகளுக்கு இல்லாத ஒலிச்சிறப்பு நம் மொழிக்கு உண்டு. வல்லோசையென்றும் இடையோசையென்றும், மெல்லோசையென்றும், நம் மொழியொலியைப் பிரித்திருக்கிறோம்.  இச்சிறப்பைப் பற்றி மு.வரதராசனார் தமிழ் மொழியின் ஒலிகள் எல்லா உறுப்புக்களுக்கும் அளவான உழைப்புத் தருவனவாக உள்ளன.  அதனால், தமிழ் ஒலிகளில் பயின்றவர் ஒலி உறுப்புக்கள் எல்லாவற்றிற்கும் பயிற்சி தந்தவராய் இருத்தலால் பிற மொழிகளைக் கற்க முயலும்போது அவற்றின் ஒலிகளை எளிதில் ஒலிக்க வல்லவராக இருக்கின்றனர் என்று தமது மொழிநூலில் கூறுகின்றார் (வரதராசனார்மு., 1996:289).

தமிழைப் பற்றி சான்றோர்களின் கருத்துக்கள்
      சங்கத் தமிழ் மூன்றுந் தா என்று ஔவையாரும், இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் என்று பிங்கலநிகண்டும், பழங்குடி என்னும் சொல்லை விளக்கும்பொழுது சேர, சோழபாண்டியர் என்றன போலப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வரும் குடி தமிழ்க்குடி என்று பரிமேலழகரும்,
பழுதற்ற முத்தமிழின் பாடற்குரையின்
றெழுதத் துணிவதே யான் (சிலப். உரை. பா. 8)
ஒருந் தமிழொரு மூன்றும் உலகின் புறவகுத்துச்
சேரன் தெரித்த சிலப்பதிகாரம்                                           (சிலப். பா. 2)
என்று அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார உரைப் பாயிரத்திலும் தமிழ் பற்றியக் கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர்.
      தமிழ் எழுத்துக்கள் கூடிய வரையில் முற்போக்காக அமைந்த எழுத்துக்களே சீன,அரபி, சப்பான் முதலிய எழுத்துக்களைப் போல் புள்ளிகளும், நுண்கோடுகளும் மிகுந்தவை அல்ல. உயிர் எழுத்து பன்னிரண்டும், மெய் எழுத்து பதினெட்டும் ஆகச் சுருங்கிய அளவில் முப்பது எழுத்துக்கள் உடையது தமிழ்.  அந்த முப்பது எழுத்துக்களும் தெளிவான வடிவ வேறுபாடு கொண்டவை.  பிறர் சுலபமாகத் தமிழ்மொழியைக் கற்றுக் கொள்வதற்கும், சுலபமாக அச்சுக் கோர்ப்பதற்கும் தமிழ் எழுத்துக்களில்சில சீர்திருத்தங்கள் செய்யப்படுவது நலம் என்று நினைக்கிறேன் என்று தந்தை பெரியாரும் தமிழ்மொழிப் பற்றிக் கூறியுள்ளதை அறியமுடிகின்றது. (கணேசன், பி.சி., 1996:15).
      மொழி மக்களின் செல்வம், அவர்தம் உணர்வின் ஊற்று, வாழ்வின் நீரோட்டம்,அறிவுப்பயிர் செழிக்கும் நாற்றங்கால், உயிர்கள் தழைக்க இன்றியமையாதது மழையெனில் மனித இனங்கள் தழைக்க இன்றியமையாதது அவர்தம் மொழி. தமிழர் வாழ்வுக்கு விழியுமாவது தமிழ் என்று அறிஞர் அண்ணா தமது கருத்தை வெளிக்காட்டியுள்ளது புலப்படுகின்றது.
      (இ) டம்பத்துக்கு இடம் அளிக்காதது.
      ஆரவாரம் பெருக்காதது
      ஆற்றல் வீணாகத் தேவையற்றது
      உள்ளது உள்ளவாறு உணர்த்தும் திறத்தது
      வீண்காலச் செலவுக்கு இடம் அளிக்காதது
      பயில்வதற்கு எளிதானது
      பொருள் அறிதற்கு எளிதாயது
      பாடுதற்கு இனிமை பயப்பது
      வழிபடுவோர் துதித்தற்கு இனிமை பயப்பது
      சாகாக் கல்வியை உணர்த்தும் திறமுடையது
      திருவருள் வலத்தால் வாய்த்ததெனப் போற்றப்படுவது தமிழ் என்று இராமலிங்க அடிகளார் தரும் கருத்தும் சிறப்புக்குரியதாகும்.   
      தமிழுக்குப் புறம்பான மொழிகளை ஆராய்ந்து சொல்லுகிறேன். தமிழுக்குள்ள சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை.  இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.  முதலில் பிறந்த மொழி தமிழ்.  அதனால்தான் தமிழ் அழிந்துபோகாமல் இருக்கிறது.  தமிழ் மரபியல் கொண்ட மொழி.  தமிழ் வழிவழியாக இளமையோடு வழங்கி வருகிறது.  தமிழ் எந்தக் காலத்தும் அழியாது தமிழை அழிப்பதற்குக் கங்கணம் கட்டுபவர்கள் தானாகவே அழிந்து போவார்கள்.
      இயற்கையிலேயே பிறந்து வளர்ந்தது தமிழ். ஆதலால் இயற்கையை யாராலும் அழிக்க முடியாது.  ஆகவே தமிழையும் அழிக்க முடியாது என்று மறைமலை அடிகள் தமிழ்ப் பற்றித் தரும் கருத்தை அறியமுடிகின்றது.
      உலகத்திய மொழிகளில் மிகத் தொன்மை வாய்ந்தது தமிழே என்று குஞ்சன்பிள்ளைச்சட்டம், பி.சாமி அவர்களும் தமிழ்மொழிப் பற்றித் தரும் கருத்தை அறிந்துகொள்ள முடிகின்றது.

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...